கொரோனா என்னும் இந்த கொடிய அரக்கன் இன்னும் என்னவெல்லாம் செய்ய போகிறதோ தெரியவில்லை. கண்ணுக்கு தெரியாத இந்த கொடிய அரக்கனால், மூன்றில் ஒரு சிறு வணிகம் மூட வேண்டிய நிலைக்கு தள்ளபட்டுள்ளதாக அதிர்ச்சிகரமான கணக்கெடுப்பு ஒன்று சொல்கிறது.
அன்லாக் 1 தொடங்கியுள்ள இந்த நிலையில், லாக்டவுனில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அது அவ்வளவாக பலன் அளிக்க வில்லை என்றே கூறப்படுகிறது.
இது குறித்து அகில இந்தியா உற்பத்தியாளர் சங்கம் மற்றும் ஒன்பது தொழில் துறை அமைப்புகள் கூட்டாக நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
யாரிடம் சர்வே?
AIMO சர்வேயில், எம்எஸ்எம்இக்கள், சுய தொழில் செய்பவர்கள், கார்ப்பரேட் தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடமிருந்து நடத்தப்பட்ட இந்த சர்வேயில், 46,525 பேர் பதில் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த சர்வேயானது மே 24 முதல் மே 30 வரையில் ஆன்லைனில் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.
சிறு வணிகர்கள் என்ன சொல்கிறார்கள்?
இதில் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் 35 சதவீதம் பேரும், இதே சுய தொழில் செய்பவர்களில் 37 சதவீதம் பேரும், தங்கள் நிறுவனங்கள் மீட்க முடியாதவை என்று பதில் அளித்துள்ளனராம். இதே 32 சதவீத எம்எஸ்எம்இக்கள் தங்களது தொழிலை மீட்க 6 மாதங்கள் ஆகும் என்றும், இதில் வெறும் 12 சதவீதம் பேர் மட்டுமே தங்களது வணிகம் 3 மாதங்களில் மீள்ச்சியடையும் என்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
என்ன காரணிகள்
இது எதிர்கால ஆர்டர்கள் பற்றிய கவலை, செயல்பாடுகளை குறைத்தல், நிலவி வரும் நிச்சயமற்ற சூழல் இவை முக்கிய காரணிகளாக உள்ளதாக இந்த சர்வேயில் கூறப்பட்டுள்ளது. இதில் பதிலளித்தவர்களில் பெரும்பாலானோர் ஏற்கனவே கடந்த மூன்று ஆண்டுகளில் ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் தங்கள் வணிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ஏற்கனவே பெருத்த கடன் பிரச்சனையில் சிக்கித் தவித்த வணிகர்கள், தற்போது கொரோனா என்னும் அரக்கனால் தங்கள் வணிகங்களை முழுமையாக மூடும் அளவுக்கு வந்துவிட்டதாக தெரிவித்துள்ளனராம்.
மோசமான சரிவு
சுதந்திரத்திற்கு பிறகு நாட்டில் இந்த வகையாக மோசமான அழிவு காணப்படவில்லை என்று AIMOவின் முன்னாள் தலைவர் கே இ ரகுநாதன் தெரிவித்துள்ளார். மேலும் மே 17க்கு பிறகு லாக்டவுனில் சற்று பொருளாதாரத்தினை மேம்படுத்துவதற்கான தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், மகாராஷ்டிரா மற்றும் தமிழ் நாடு, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் அதிகரித்து வரும் கொரோனா வழக்குகள் மேலும் சவால்களை ஏற்படுத்தியுள்ளன.