இந்தியாவின் 2வது பெரும் பணக்காரர் ஆக வளரும் அளவிற்குக் கௌதம் அதானியின் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. இந்த மாபெரும் உயர்வுக்குக் கடந்த சில வருடத்தில் அதானி குழு நிறுவனங்கள் அடுத்தடுத்து தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்தது தான்.
இந்நிலையில் சமீபத்தில் அதானி குழுமம் தனக்கு முன் அனுபவம் இல்லாத விமான நிலையம் நிர்வாகத் துறையில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்தது மட்டும் அல்லாமல், அரசு கட்டுப்பாட்டில் இருந்த 6 விமான நிலையத்தை முழுமையாகக் குத்தகைக்கு எடுத்தது.
இந்நிலையில் தற்போது அதானி குழுமம் தற்போது விமான நிலைய கட்டணங்களைத் தாறுமாறாக அதிகரித்து வருகிறது.
அதானி குழுமம்
அதானி குழுமம் கைப்பற்றிய 6 விமான நிலையங்களில் ஒன்றான லக்னோ விமான நிலையத்தின் சேவை கட்டணங்களைச் சுமார் 10 மடங்கு அதிகரிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாகப் பிரைவேட் ஜெட் மற்றும் இண்டர்நேஷனல் விமானங்களின் turnaround கட்டணங்கள் மிகப்பெரிய அளவில் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
கட்டணங்கள் உயர்வு
இதுமட்டும் அல்லாமல் லக்னோ விமான நிலையத்தில் தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள கட்டணங்கள் அதானி குழுமம் கைப்பற்றிய பிற 5 விமான நிலையங்களிலும் விரைவில் நடைமுறைப்படுத்த உள்ளதாக விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
50 வருடங்கள் குத்தகை
2019ல் அதானி குழுமம் ஜெய்ப்பூர், அகமதாபாத், குவஹாத்தி, மங்களூர், திருவனந்தபுரம் மற்றும் லக்னோ ஆகிய 6 நகரங்களில் இருக்கும் விமான நிலையைத்தை 50 வருடங்களுக்கான குத்தகை ஒப்பந்தத்தைப் பெற்றது. இதன் மூலம் இந்த விமான நிலையங்களின் மொத்த நிர்வாகமும், வர்த்தகமும் அதானி குழுமத்தின் கையில் வந்துள்ளது.
அதானி குழுமம் கட்டண நிர்ணயம்
பொதுவாக விமான நிலையத்தில் சேவை கட்டணங்களை அரசோ அல்லது ஏர்போர்ட் எக்னாமிக் ரெகுலேட்டரி அத்தாரிட்டி அமைப்பு தான் நிர்ணயம் செய்யும், தற்போது அரசு விமான நிலையங்களைத் தனியார் நிறுவனத்திற்குத் தாரைவார்க்கப்பட்ட நிலையில், அதானி குழுமம் சேவை கட்டணத்தை நிர்ணயம் செய்து வருகிறது.
10 மடங்கு கட்டணம் உயர்வு
அதானி குழுமம் தற்போது லக்னோ விமான நிலையத்தில் புதிதாக ஒரு ground handling நிறுவனத்தை நிறுவியுள்ள நிலையில், கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளது. 10 மடங்கு கட்டணம் உயர்வு என்பது யாராக இருப்பினும் பிரச்சனை தான், தற்போது அரசும் அதைத் தட்டி கேட்க முடியாது, ஏன் தெரியுமா..?!
சேவை தரத்தில் மேம்பாடும் இல்லை
இந்நிலையில் பயணிகள் போக்குவரத்து விமானங்களை இயங்கும் நிறுவனங்கள் சேவையின் தரத்தில் எவ்விதமான புதிய மாற்றங்களும், மேம்பாடும் இல்லை, ஆனால் கட்டணங்கள் மட்டும் அதிகரிக்கப்பட்டு உள்ளது எனக் கூறுகின்றனர்.
மத்திய அரசின் கனவுத் திட்டம்
இந்தியாவில் சிறு நகரங்களை விமானப் போக்குவரத்து மூலம் இணைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் மாபெரும் கனவுத் திட்டம் இந்தக் கட்டண உயர்வால் வெறும் கனவாகவே இருக்க வாய்ப்பு உள்ளது.
பயணக் கட்டணங்கள் அதிகரிக்கும்
காரணம் விமானக் கட்டணங்களைக் குறைப்பதன் வாயிலாகவே அதிகளவிலான பயணிகளை ஈர்க்க முடியும், தற்போது விமானங்களை இயக்குவதற்கான சேவை கட்டணங்கள் அதிகரிக்கப்படும் காரணத்தால், இந்தச் செலவுகளைப் பயணிகள் தலையில் தான் விழும். இதனால் விமானப் பயணக் கட்டணங்கள் கட்டாயம் உயரும், எந்தத் தனியார் நிறுவனமும் நஷ்டத்தை ஏற்காது.
ஏர் இந்தியா நிறுவனம்
இதேபோல் இந்தியாவில் ஏர் இந்தியாவைத் தவிர வேறு அரசு விமானச் சேவை நிறுவனங்களும் இல்லை, இதையும் விற்பனை செய்ய மோடி தலைமையிலான அரசு விற்பனை செய்யத் திட்டமிட்டு வருவதால் நஷ்டத்தை ஏற்று மக்களுக்குச் சேவை அளிக்கும் அரசு நிறுவனங்கள் இத்துறையில் வேறு இல்லை.