மத்திய அரசின் 2.1 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்டும் திட்டத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது பாரத் பெட்ரோலியம் கார்ப் நிறுவனத்தின் 52.98 சதவீத பங்குகளின் விற்பனை. மத்திய அரசு இந்நிறுவனப் பங்கு விற்பனை மீது அதிக நம்பிக்கை வைத்திருந்த நிலையில் பன்னாட்டு நிறுவனங்கள் எதிர்கால வர்த்தக மாற்றங்களைக் கருத்தில் கொண்டு கச்சா எண்ணெய் சுத்திகரிப்பில் முதலீடு செய்ய விரும்பவில்லை.
இதனால் BPCL நிறுவனத்தின் பங்குகளை வாங்க பன்னாட்டு நிறுவனங்கள் முன்வராத நிலையில் போட்டி குறைந்து முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் களத்தில் இறங்கும் என முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.
BPCL பங்குகளை வாங்க விருப்ப விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாளான நவம்பர் 16ஆம் தேதியன்று 3 முதல் 4 நிறுவனங்கள் மட்டுமே விண்ணப்பம் அளித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், அனில் அகர்வால்-ன் வேதாந்தா குழுமம் விண்ணப்பம் செய்துள்ளது உறுதியாகியுள்ளது.
அதேவேளையில் BPCL பங்குகளை வாங்க கௌதம் அதானியின் அதானி கேஸ் ரகசியமாக விண்ணப்பம் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதானி குழுமம்
கௌதம் அதானி கடந்த சில வருடங்களாகத் தனது வர்த்தகத்தைக் குறிப்பிட்ட துறையில் மட்டுமே அடக்கிக்கொள்ளாமல் பல பிரிவுகளின் விரிவாக்கம் செய்து வருகிறார். குறிப்பாக இந்தியாவின் 6 முக்கிய விமான நிலையங்களைக் கைப்பற்றியது, கிருஷ்ணபட்டினம் துறைமுகத்தைக் கைப்பற்றியது, சோலார் மற்றும் இதர எனர்ஜி திட்டங்களில் வர்த்தகம் விரிவாக்கம் என மாஸ் காட்டி வருகிறார் கௌதம் அதானி.
சமீபத்தில் DHFL நிறுவனத்தை முழுமையாக கைப்பற்ற 31,250 கோடி ரூபாய் அளவிலான மதிப்பில் விருப்பம் தெரிவித்துள்ளது அதானி குழுமம்.
அதானி கேஸ்
இந்நிலையில் BPCL நிறுவனப் பங்குகளை வாங்க அதானி குரூப் முடிவு செய்து அரசுக்கு விருப்ப விண்ணப்பத்தை அதானி கேஸ் நிறுவனத்தின் வாயிலாகச் சமர்ப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து பங்குச்சந்தையிலும் அதானி கேஸ் எவ்விதமான அறிக்கையும் சமர்ப்பிக்கவில்லை என்று தகவல் கிடைத்துள்ளது. மேலும் அதானி குழுமம் நிறுவனமும் BPCL நிறுவனப் பங்குகளை வாங்குவது குறித்த பதிலைத் தெரிவிக்க மறுத்துவிட்டது.
டோட்டல்
இந்தியாவில் இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோல், டீசல் ரீடைல் சந்தையில் விற்பனை செய்ய ஏற்கனவே அதானி குழுமம் பிரான்ஸ் கச்சா எண்ணெய் நிறுவனமான டோட்டல் நிறுவனத்துடன் கூட்டணி ஒப்பந்தம் செய்துள்ளது.
இதனால் BPCL நிறுவனத்தைக் கைப்பற்றும் போது அதானி குழுமத்தின் எரிபொருள் வர்த்தகம் பல மடங்கு அதிகரிக்கும்.
ஊழியர்கள்
இந்தியாவில் லேபர் சட்டம் மிகவும் கடுமையாக இருக்கும் காரணத்தாலும், BPCL நிறுவனத்தின் சுமார் 12,000 ஊழியர்கள் பணியாற்றும் நிலையில் அதிகளவிலான ஊழியர்களைக் கட்டுப்படுத்த வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மிகலும் கடினம் என்பதாலேயே பன்னாட்டு நிறுவனங்கள் பின்வாங்கியது.
ஜாக்பாட்
அதானி கேஸ் BPCL நிறுவனத்தின் 52.98 சதவீத பங்குகளை வாங்குவதற்கு விண்ணப்பம் செய்திருந்தால் கண்டிப்பாக அதானி குழுமத்திற்குப் பங்குகளைக் கைப்பற்ற அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.
வேதாந்தா நிறுவனம் ஏற்கனவே அதிகளவிலான கடனிலும், வர்த்தகப் பிரச்சனையில் இருக்கும் நிலையில் அதானி குழுமத்திற்கு வாய்ப்புகள் அதிகம். இதேபோல் 6 விமான நிறுவனங்களைக் கைப்பற்றியதன் மூலம் விமான எரிபொருள் வர்த்தகத்தைப் பெரிய அளவில் அதிகரிக்க இது முக்கிய வாய்ப்பாக அமையும்.
மாபெரும் ரீடைல் எரிபொருள் வர்த்தகம்
மேலும் BPCL நிறுவன பங்குகளைக் கைப்பற்றி நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்துவதன் மூலம் இந்நிறுவனத்தின் மும்பை, கொச்சி, பினா ஆகிய பகுதிகளில் இருக்கும் சுத்திகரிப்பு ஆலைகள், நாடு முழுவதும் இருக்கும் BPCL நிறுவனத்தின் 17,138 பெட்ரோல் பங்க், இதோடு 6,151 எல்பிஜி விநியோக ஏஜென்சி மற்றும் 61 விமான எரிபொருள் ஸ்டேஷன்ஸ் ஆகியவற்றையும் அதானி குழுமம் பெற முடியும்.
பதில்
ஆனால் அதானி குழுமம், அதானி கேஸ், அதானி குழுமத்துடன் ரீடைல் எரிபொருள் விற்பனைக்காகக் கூட்டணி சேர்ந்துள்ள பிரான்ஸ் டோட்டல் நிறுவனம் என அனைத்து தரப்பும் தகவலை கொடுக்க மறுத்து வருகிறது.
அம்பானி Vs அதானி
அதானி குழுமம் BPCL நிறுவன பங்குகளைக் கைப்பற்றினால் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்திற்கு மிகப்பெரிய வர்த்தகப் போட்டியாக அதானி குழுமம் உருவெடுக்கும்.