இந்திய வர்த்தகத் துறையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி நிறுவனங்கள் புதிய வாய்ப்புகளைத் தேடி அலைந்து வரும் வேளையில் கடந்த 3 வருடத்தில் இருவரும் பல துறையில் நேருக்கு நேர் போட்டி போட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சமீபத்தில் ஐடி துறையில் டெக் ஊழியர்கள் தேவையைப் பூர்த்திச் செய்யச் சக போட்டி நிறுவனங்களில் இருந்து போட்டிப்போட்டு ஊழியர்களைச் சேர்த்த காரணத்தால் அதிகப்படியான சம்பளம் கொடுக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலை உருவானது, இந்தப் பாதிப்பில் இருந்து இதுவரையில் டாப் 4 ஐடி நிறுவனங்கள் மீண்டு வர முடியாத நிலையில் உள்ளது.
இந்தப் பிரச்சனையின் வீரியத்தை உணர்ந்தது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் அதானி குழுமம்.
முகேஷ் அம்பானி - கௌதம் அதானி
சில வருடங்களுக்கு முன்பு வரையில் முகேஷ் அம்பானி-யின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் கௌதம் அதானி-யின் அதானி குழுமம் தனித்தனி வர்த்தகப் பாதையில் பயணித்து வந்தது. ஆனால் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யும் பல துறையில் இரு பெரிய தலைகளும் ஓரே துறைக்குள் நுழைய வேண்டிய நிலை உருவானது.
no-poaching ஒப்பந்தம்
இந்த நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் அதானி குழுமம் ஒருவர் மற்றொரு நிறுவனத்தில் இருந்து ஊழியர்களைப் பணியில் சேர்க்க கூடாது என no-poaching ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தம் இரு வர்த்தகக் குழுமத்தில் இருக்கும் அனைத்து வர்த்தகங்களுக்கும் பொருந்தும், மேலும் இது மே மாதமே நடைமுறை செய்யப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பெட்ரோகெமிக்கல் வர்த்தகம்
ரிலையன்ஸ் ஆதிக்கம் செலுத்தும் பெட்ரோகெமிக்கல் வர்த்தகத்தில் சமீபத்தில் அதானி குழுமம் இறங்குவதற்காக அதானி பெட்ரோகெமிக்கல் லிமிடெட் எனும் நிறுவனத்தை உருவாக்கியது, இதேபோல் ரிலையன்ஸ் ஜியோ ஆதிக்கம் செலுத்தும் டெலிகாம் துறையில் அதானி குழுமம் 5ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைக் கைப்பற்ற போட்டிப்போட்டது. தற்போது மீடியா, ரினியூவபிள் எனர்ஜி போன்ற பல துறையில் இப்பட்டியல் வருகிறது.
புதியது இல்லை
இந்தியாவில் இத்தகைய no-poaching ஒப்பந்தம் புதியது இல்லை, நீண்ட காலமாகப் பயன்பாட்டில் இருந்து வருகிறது. திறமையான மற்றும் அனுபவமான ஊழியர்களின் தேவை அதிகரிக்கும் போது சக போட்டி நிறுவனங்களில் இருக்கும் ஊழியர்களைப் பணியில் சேர்க்க நிறுவனங்களைத் தூண்டும். ஆனால் இதற்கு அதிகப்படியான சம்பளத்தைக் கொடுக்க வேண்டும் என்பதால் நிறுவனத்தின் நிதிநிலை பாதிக்கும்.
சட்ட விதிமுறைகள் இல்லை
இத்தகைய ஒப்பந்தம் செய்யக் கூடாது என எந்தச் சட்டமும் இல்லை என்பதால், இந்த ஒப்பந்தத்தை மீறினாலும் நீதிமன்றத்திற்குச் செல்ல முடியாது. ஆனால் இத்தகைய ஒப்பந்தம் சில நேரம் லாபமாக அமைந்தாலும் பல நேரத்தில் பாதிப்பைத் தான் ஏற்படுத்தும்.
மீறாது..
இதனால் இந்த ஒப்பந்தத்தை முகேஷ் அம்பானி-யின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் கௌதம் அதானி-யின் அதானி குழுமம் மீறாது என எதிர்பார்க்கப்படுகிறது.