சமீபத்தில் குஜராத் மாநிலத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவு 3000 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.
இது ஈரானின் பண்டார் அப்பாஸ் துறைமுகத்திலிருந்து குஜராத்தில் முந்த்ரா துறைமுகத்திற்கு அனுப்பப்பட்டது. இது வழக்கமான சோதனையை நடைமுறைகளின் படி, சோதனைகள் செய்தபோது போதைப்பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதில் ஆவணங்களில் ஆப்கானிஸ்தானில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் இருப்பதாக ஆவணங்கள் கூறின. ஆனால் சரக்குகளின் எடையும் அளவு அதிகமாக இருந்த நிலையில், அவற்றின் மீது சந்தேகம் கொண்ட அதிகாரிகள் அதனை பரிசோதனை செய்து பார்க்கும்போது, ஒரு கண்டெய்னரில் கிட்டத்தட்ட 2000 கிலோ ஹெராயினும், இரண்டாவது கண்டெய்னரில் கிட்டத்தட்ட 988.64 கிலோ ஹெராயினும் கண்டுபிடிக்கப்பட்டது.
ஹெராயின் கடத்தல்
இந்த ஹெராயின் பவுடர்கள் ஆப்கானிஸ்தானில் விளைவிக்கப்பட்ட போதை செடிகளிலிருந்து தயாரிக்கப்பட்டதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் இந்திய மதிப்பு 15 ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்பட்டது. இந்த நிலையில்தான் தேசிய போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின்படி அந்த சரக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.
எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை
இதற்கு குஜராத் முந்த்ரா துறைமுகம் அதானி குழுமம் எங்களுடைய கட்டுப்பாட்டில் கையாளப்பட்டாலும், அதில் உள்ள கண்டெய்னர்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆக அதனை திறக்கும் அதிகாரமும் அவர்களுக்கு தான் உள்ளது. அதில் எங்களுடைய பணி ஒன்றும் இல்லை என்று விளக்கமளித்தது. ஆக இந்த விவகாரத்திற்கும், அதானி குழுமத்தின் தொடர்பு இல்லை என்று அப்போது கூறியிருந்தது.
இனி கையாளாது?
தற்போது இந்த சர்ச்சைகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அதானி குழுமம் ஈரான், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் கண்டெய்னர்களை நவம்பர் முதல் கையாள மாட்டோம் என அறிவித்துள்ளது. மேலும் நவம்பர் 15, 2021 முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்றும் அறிவித்துள்ளது.
அனைவருக்கும் பொருந்தும்
இந்த அறிவிப்பானது அதானி துறைமுக குடும்பத்தால் இயக்கப்படும் அனைத்து வர்த்தக முனைகளுக்கும் பொருந்தும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் மூன்றாம் தரப்பு முனையங்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும் என இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் திரிபாதி தெரிவித்துள்ளார்.
மிகப்பெரிய அளவில் இறக்குமதி
அதானியின் இந்த அறிவிப்பானது, ஏற்றுமதியாளர்களுக்கு கவலையளிக்கும் ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஈரான் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சரக்குகள், இந்தியாவிலுள்ள மிகப்பெரிய வர்த்தக துறைமுகமான முந்த்ராவில் இருந்து கையாளப்படுகின்றது.
ஈரானில் இருந்து இறக்குமதி
ஈரானில் இருந்து உலர் பழங்கள், கொட்டைகள் அதிகளவில் இறக்குமதி செய்யபடுகின்றன. குறிப்பாக பிஸ்தா, பாதாம், பேரீட்சை போன்ற உணவுகள் அடங்கும். இது தவிர கம்பளி பொருட்கள் மற்றும் இயற்கை மற்றும் செயற்கை ரசாயனங்களும் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன. இது வேறு துறைமுகங்கள் வழியாக இறக்குமதி செய்யப்படும்போது செலவுகளும் அதிகரிக்கும் என வர்த்தகர்கள் தரப்பில் கூறப்படுகின்றது.
ஆப்கானில் இருந்து இறக்குமதி
தற்போது தான் ஆட்சிமாற்றம் கண்டுள்ள ஆப்கானிஸ்தானில் இருந்து, அத்தீ பழம், முலாம்பழ விதைகள், உலர் திராட்சைகள் பேரீட்சை உள்ளிட்ட பலவற்றையும் இறக்குமதி செய்து வருகின்றது ஏற்கனவே ஆட்சி மாற்றத்தால் ஆப்கானிஸ்தானில் பிரச்சினை இருந்து வரும் நிலையில், அதானியின் இந்த முடிவும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தானில்; இருந்து வணிகமா?
இதற்கு மத்தியில் பாறை உப்பு மற்றும் பேரீட்சை உள்ளிட்ட பலவற்றையும் பாகிஸ்தானிலிருந்து இந்தியா இறக்குமதி செய்கிறது. இது பெரியளவிலான வர்த்தகம் இல்லாவிட்டாலும், இதுவும் இனி மேற்கொண்டு முடங்கும் நிலை உள்ளது. இது மேற்கொண்டு இறக்குமதியாளர்களுக்கு செலவினங்களை அதிகரிக்கலாம். மேலும் விலை வாசியினை ஊக்குவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதானி போர்ட் சேவை
அதானி குழுமம் இந்தியாவில் தற்போது 13 துறைமுகங்கள் மற்றும் முனையங்களை கையாளுகிறது. குஜராத்தில் உள்ள முந்த்ரா, ஹஜிரா, கேரளாவில் விழிஞம், தமிழகத்தில் எண்ணூர், காட்டுப்பள்ளி, மகாராஷ்ட்ராவில் திகி, ஆந்திராவில் கிருஷ்ணப்பட்டினம் ஆகிய இடங்களில் கண்டெய்னர்களை கையாளுகிறது.