இந்தியாவில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என நீண்ட காலமாகத் திட்டமிட்டு அதற்கான முயற்சிகளை உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் செய்து வரும் நிலையில் தொடர்ந்து தடைகளை எதிர்கொண்டு வருகிறார்.
சமீபத்தில் எலான் மஸ்க் மட்டும் அல்லாமல் இந்திய மக்களும் அதிகம் எதிர்பார்த்து இருந்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் சேவையை மக்களிடம் விற்பனை செய்யக் கூடாது என்று டெலிகாம் அமைச்சகம் உத்தரவிட்டது.
இது எலான் மஸ்க்-ன் இந்திய கனவிற்குப் பெரும் பின்னடைவாக இருந்தது. இந்நிலையில் இதற்காக முக்கிய முடிவை எலான் மஸ்க் தலைமையிலான ஸ்பேஸ் எக்ஸ் எடுத்துள்ளது.
ஸ்டார்லிங்க் சேவை
இந்தியாவில் செயற்கைக்கோள் வாயிலாக இயங்கும் பிராட்பேன்ட் இண்டர்நெட் சேவையான ஸ்டார்லிங்க் அறிமுகம் செய்ய வேண்டும் என எலான் மஸ்க் அதற்கான பணிகளைச் செய்து வரும் நிலையில் மத்திய அரசின் வாயிலாக டெலிகாம் துறை தக்க உரிமம் பெறாமல் மக்களிடம் ப்ரீ புக்கிங் செய்யக் கூடாது எனவும் ப்ரீ புக்கிங் சேவையை உடனடியாக நிறுத்தவும் உத்தரவிட்டது.
எலான் மஸ்க்-ன் ஸ்பேஸ்எக்ஸ்
இந்நிலையில் எலான் மஸ்க்-ன் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் ஜனவரி 31, 2022க்குள் ஸ்டார்லிங்க் சேவையை இந்திய மக்களுக்கு அளிப்பதற்கான உரிமத்தை பெற விண்ணப்பம் சமர்ப்பிக்க உள்ளதாக ஸ்டார்லிங்க் இந்தியா-வின் தலைவர் சஞ்சய் பார்கவா தெரிவித்துள்ளார்.
99 டாலரில் ப்ரீ புக்கிங்
எலான் மஸ்க் தலைமை வகிக்கும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஸ்டார்லிங்க பிராட்பேன்ட் சேவையை 99 டாலர் விலையில் ப்ரீ புக்கிங் முறையில் முன்பதிவு செய்ய அனுமதி அளித்து வந்தது. இதை விதிமீறல் என அறிவித்து மத்திய டெலிகாம் அமைச்சகம் இச்சேவைக்குத் தடை அறிவித்துள்ளது.
மத்திய டெலிகாம் துறை
மத்திய டெலிகாம் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவைக்கு லைசென்ஸ் கொடுக்கப்படாத பட்சத்தில் மக்களுக்கு இச்சேவை விற்பனைக்கு விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. மத்திய அரசு ஸ்பேஸ்எக்ஸ் இந்தியா நிறுவனத்தை அரசு விதிகளைக் கடைப்பிடிக்க வலியுறுத்தியது மட்டும் அல்லாமல் ப்ரீ புக்கிங் போன்ற சேவைகளை அளிக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.
டெஸ்லா நிறுவனம்
ஸ்டார்லிங்க் சேவை மட்டும் அல்லாமல் டெஸ்லா நிறுவனத்தின் கார்களை விற்பனை செய்ய எலான் மஸ்க் இந்திய அரசிடம் இறக்குமதி வரியில் சலுகை வேண்டும் எனக் கோரிக்கை வைத்த போதும் இந்திய அரசு சில முக்கிய நிபந்தனைகளை விதித்தது வரிச் சலுகை அளிக்க மறுப்புத் தெரிவித்தது.
வரவேற்பு
இதனால் இந்தியாவில் டெஸ்லா கார்கள் அதிகப்படியான வரியில் தான் இறக்குமதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆயினும் இந்தியாவில் டெஸ்லா கார்களுக்குப் பணக்காரர்கள் மத்தியில் அதிகப்படியான வரவேற்பு உள்ளது.
உதிரிப்பாகங்கள் உற்பத்தி திட்டம்
இதேவேளையில் இந்தியாவில் டெஸ்லா கார்களுக்குத் தேவையான உதிரிப்பாகங்கள் உற்பத்தி செய்யத் திட்டமிட்ட நிலையில், மத்திய அரசு கார் உற்பத்தி செய்தால் மட்டுமே வரிச் சலுகை கிடைக்கும் எனத் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதனால் எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா உதிரிப்பாகங்கள் உற்பத்தி திட்டத்தில் இருந்தும் விலகியுள்ளது.