கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு திரைப்படம் பார்க்க வேண்டும் என்றால் மணிக்கணக்கில் திரையரங்குகளின் வாசலில் வரிசையில் காத்திருந்து டிக்கெட் எடுத்து தான் பார்க்க வேண்டும்.
ஆனால் தொழில்நுட்பம் மாற மாற தற்போது வீட்டில் உட்கார்ந்தே ஓடிடியின் மூலம் சொகுசாக திரைப்படம் பார்க்கும் காலம் வந்துவிட்டது.
இனி அடுத்த கட்டமாக ரயில் அல்லது பேருந்துகளில் பயணம் செய்து கொண்டிருக்கும் போதே மொபைல் செயலியில் திரைப்படம் பார்க்கலாம் என்ற தொழில்நுட்பம் வந்துள்ளது.
மொபைல் டு மூவி
மூவி டு மொபைல் என்ற செயலி மூலமாக தற்போது தமிழ் திரைப்படங்களை ஒளிபரப்பும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. சமீபத்தில் யாஷிகா ஆனந்த் நடித்த 'பெஸ்டி'என்ற திரைப்படம் மூவி டு மொபைல் என்ற மொபைல் செயலியில் முதல் படமாக வெளியாகி உள்ளது.
ரூ.30 மட்டுமே கட்டணம்
இந்த செயலி மூலம் ஒரு திரைப்படத்தை பார்ப்பதற்கு ரூபாய் 30 கட்டணம் கட்டினால் போதுமானது. எத்தனை முறை வேண்டுமானாலும் மூவி டு மொபைல் செயலி மூலம் பார்த்துக்கொள்ளலாம். வீட்டில் இருக்கும்போது, பயணம் செய்யும்போது மூவி டு மொபைல் செயலி மூலம் இதில் உள்ள திரைப்படங்களை பார்த்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
மாதம் இரண்டு படங்கள்
இந்த செயலியில் ஒவ்வொரு மாதமும் இரண்டு திரைப்படங்கள் அல்லது அதற்குமேல் வெளியிட திட்டமிட்டுள்ளதாக மூவி டு மொபைல் நிறுவனத்தினர் கூறியுள்ளனர்.
மூவி டு மொபைல் அறிமுக விழா
மூவி டு மொபைல் அறிமுக விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், இயக்குனர்கள் மற்றும் பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
ரிலீஸ் ஆகாமல் இருக்கும் திரைப்படங்கள்
தமிழ் திரையுலகில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராக இருந்தும் திரையரங்குகள் கிடைக்காமல் அல்லது வேறு சில காரணங்களால் ரிலீஸ் ஆகாமல் இருக்கின்றது. இந்த நிலையில் இந்த திரைப்படங்கள் மூவி டு மொபைல் எனப்படும் செயலியில் வெளியிட முயற்சி செய்து வருவதாக இந்த செயலியின் நிறுவனர்கள் கூறியுள்ளனர்.
பொழுதுபோக்கு
இந்த செயலி மூலம் பிளாட்பாரத்தில் கடை போடுபவர், தள்ளுவண்டி கடைகளில் வியாபாரம் செய்பவர்கள் முதல் ஐடி நிறுவனத்தில் பணி புரிபவர்கள் வரை அனைவரும் பொழுதுபோக்கிற்காக தங்கள் வேலையின் இடையே கிடைக்கும் ஓய்வு நேரத்தில் மூவி டு மொபைல் செயலில் படம் பார்க்கலாம்.
வரவேற்பு
மூவி டு மொபைல் செயலியின் மூலம் வருங்காலத்தில் மிக அதிகமான திரைப்படங்கள் வெளியாகும் என்பதால் ஓடிடி போலவே இந்த செயலியும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.