இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியமாக இருக்கும் டாடா குழுமம் நாட்டின் அதிக மதிப்புடைய குழுமமாக இருந்த நிலையில், இந்த இடத்தைத் தற்போது அதானி குழுமம் பெற்றுள்ளது.
இதேபோல் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவும், அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு போதுமான நிதி ஆதாரங்களை உருவாக்கவும் டாடா குழுமம் விட்ட இடத்தை மீண்டும் பிடிக்கவும் 2004 ஆம் ஆண்டுக்கு பின்பு ஐபிஓ திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.
ஏற்கனவே டாடா ப்ளே நிறுவனத்தை ஐபிஓ வெளியிட செபியிடம் விண்ணப்பம் சமர்ப்பித்துள்ள நிலையில், தற்போது டாடா குழுமத்தில் ஸ்டார் நிறுவனமாக மாறி வரும் டாடா டெக்னாலஜிஸ்-ஐ ஐபிஓ வெளியிட முடிவு செய்யப்பட்டு முதல் கட்ட பணிகள் துவங்கப்பட்டு உள்ளது.
டாடா டெக்னாலஜிஸ்
டாடா டெக்னாலஜிஸ் ஆட்டோமொபைல் மற்றும் ஏரோஸ்பேஸ் துறையில் இருக்கும் நிறுவனங்களுக்கு இன்ஜினியரிங், டிசைன், ஐடி என பல சேவைகளை அளித்து வருகிறது. Tata Technologies வட அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், ஆசிய பசிபிக் சந்தையில் அதிகப்படியான வர்த்தகத்தைக் கொண்டு உள்ளது.
25 நாடுகள், 11000 ஊழியர்கள்
1989 ஆம் ஆண்டுத் துவங்கப்பட்ட டாடா டெக்னாலஜிஸ், 2005ல் ஐரோப்பிய நாட்டின் INCAT நிறுவனத்தைக் கைப்பற்றித் தற்போது அமெரிக்காவில் டெட்ராய்ட் மற்றும் மிச்சிகன், பிரிட்டன் நாட்டில் வார்விக், என உலகில் சுமார் 25 நாடுகளில் இயங்கி வருவது மட்டும் அல்லாமல் சுமார் 11000 ஊழியர்களைக் கொண்டு உள்ளது.
15வது பெரிய ஐடி நிறுவனம்
பார்சூன் இந்தியா இன்போடெக் பிரிவில் 15வது பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் டாடா டெக்னாலஜிஸ், டாடா மோட்டார்ஸ்-ன் கிளை நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் பெரும் பகுதி பங்குகளை டாடா மோட்டார்ஸ் வைத்துள்ளது.
ஐபிஓ
இந்த நிலையில் டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்தை ஐபிஓ வெளியிடவும், இந்த ஐபிஓ மூலம் தனது பங்குகளை விற்பனை செய்யவும் தயார் எனவும் டாடா மோட்டார்ஸ் நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளது மூலம் டாடா ப்ளே தொடர்ந்து டாடா டெக்னாலஜிஸ் மும்பை பங்குச்சந்தைக்கு வருகிறது.
செபி
டாடா மோட்டார்ஸ் ஒப்புதலைத் தொடர்ந்து டாடா டெக்னாலஜிஸ் நிர்வாகம் ஐபிஓ வெளியிட செபியிடம் தேவையான விண்ணப்பங்களை அடுத்த காலாண்டில் கொடுத்து போதுமான ஒப்புதல் பெற்ற பின்னரே அடுத்தக்கட்ட பணிகளை டாடா குழுமம் செய்ய உள்ளது. டாடா குழுமம் திட்டமிட்டபடி நடந்தால் 2023-24 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் டாடா டெக்னாலஜிஸ் ஐபிஓ வெளியாகும்.
டாடா மோட்டார்ஸ்
இந்த ஐபிஓ மூலம் டாடா டெக்னாலஜிஸ் குறைந்த பட்சம் 10 சதவீத பங்குகளை பொதுச் சந்தையில் விற்பனை செய்து முதலீட்டைத் திரட்ட உள்ளது. இந்த நிலையில் டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் சுமார் 72 சதவீத பங்குகளை டாடா மோட்டார்ஸ் மட்டுமே வைத்துள்ளது.
இதர 28% பங்குகள்
இதர 28 சதவீத பங்குகளை டாடா குரூப்-ன் இதர நிறுவனங்களும், ஆல்ரா டிசி ஹோல்டிங்ஸ், சிங்கப்பூர்-ஐ சேர்ந்த Mizuho Securities ஆகியவை வைத்துள்ளது.
10% பங்கு விற்பனை
ஐபிஓ மூலம் பொதுச் சந்தையில் விற்பனை செய்யப்படும் 10 சதவீத பங்குகளில் குறைந்தபட்சம் 5 சதவீத பங்குகளை டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்யும், இதர 5 சதவீத பங்குகளை மற்ற அமைப்புகள் விற்பனை செய்யும்.
வெளியேற திட்டம் இல்லை
ஆல்ரா டிசி ஹோல்டிங்ஸ் மற்றும் சேர்ந்த Mizuho Securities ஆகியவை டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்தை விட்டு மொத்தமாக வெளியேறும் தகவல் இல்லாத நிலையில் ஐபிஓ-வில் மொத்த பங்குகளையும் விற்பனை செய்யாது.