மத்திய அரசு சில தினங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்திய அக்னிபாத் திட்டத்திற்கு நாடு முழுக்க பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
குறிப்பாக உத்திர பிரதேசம், பீகார், ராஜஸ்தான், ஹரியானா, குஜராத், டெல்லி, மத்திய பிரதேசம், தெலுங்கானா என பல மாநிலங்களிலும், ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்து வருகின்றன.
ஒரு பக்கம் இளைஞர்கள், மறுபக்கம் எதிர்கட்சிகள் என பலரும் போரட்டத்தில் இறங்கியுள்ளனர். உண்மையில் அக்னிபாத் திட்டத்தினால் என்ன பலன் கிடைக்கும்? அதில் உள்ள பாதகமான விஷயங்கள் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
ஏன் எதிர்ப்பு?
இராணுவ ஆர்வலர்கள் ஏன் இந்த திட்டத்திற்கு பலத்த எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். இராணுவத்தின் ஒரு பகுதியாக இருக்க விரும்பும் அக்னிவீர்களின் எதிர்காலம் இந்த திட்டத்தினால் நிச்சயமற்றதாக இருக்கும். இராணுவத்தின் ஒரு பகுதியாக இருக்கும் வீரர்களுக்கு இது பாதுகாப்பினை அளிக்காது. இது இளைஞர்களின் மன ஆரோக்கியத்தினையும் பாதிக்கும்.
மிகப்பெரிய எதிர்பார்ப்பு
கடந்த 2 ஆண்டுகளாக பெரியளவிலான ராணுவ ஆட்சேர்ப்பு என்பது தாமதமாகி வந்தது. ஆக இந்த ஆண்டில் மிகப்பெரிய அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அரசின் இந்த அக்னிபாத் அறிவிப்பு ஆர்வலர்களின் ஆர்வத்தினை பெரியளவில் குறைத்துள்ளது. ராணுவத்தில் இணைவதற்காக பல ஆண்டுகளாக இளைஞர்களை பயிற்சி எடுத்து வருகின்றனர். ஆனால் இந்த 4 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவது என்பதால், அவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வேலையின்மையை அதிகரிக்கும்
அக்னிபாத் திட்டத்தின் படி 17.5 வயது முதல் 23 வயது வரையிலான வீரர்கள், 46,000 பேர் தேர்தெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 34,500 இளைஞர்களை வேலையில்லாதவர்களாக மாறலாம். எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு வீரர் முழுமையாக பயிற்சி பெற்ற போராளியாக மாற 7 - 8 ஆண்டுகள் ஆகும். ஆக இது அக்னிவீர்களின் உயிருக்கு ஆபத்தினை விளைவிக்கும்.
என்ன பயன்?
எனினும் மேற்கொண்டு உயர்கல்வி கற்க முடியாத இளைஞர்களுக்கு இந்த திட்டம் பயன்படும் என நம்பப்படுகிறது. இந்த 4 ஆண்டுகள் முடிந்த பின்னர் 11 - 12 லட்சம் ரூபாயினை சேவா நிதியாக அரசு வழங்குகிறது. ஆக இந்த பணியினை முடித்த பின்னர் அவர்களது இரண்டாவது தொழிலை தொடங்கவும் இது பயனுள்ளதாக இருக்கும்.
பணியில் முன்னுரிமை
டிவிட்டர் பக்கத்தில் அரசு 4 வருட சேவைக்கு பிறகு வெளியேறும் 75% அக்னிவீர்கள், CAPFs, போலிஸ், அஸ்ஸாம் ரைபிள்ஸ், பல மாநிலங்களில் போலிஸ் படைகளில் வேலை செய்ய விரும்புவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என கூறியுள்ளது. ஆக இதுவும் அவர்களுக்கு பயனளிக்கலாம்.