பொதுத்துறை நிறுவனங்களிடம் 4 லட்சம் கோடி ரூபாய் ஏஜிஆர் நிலுவை கோரியதை அனுமதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியான செய்தியில், கெயில், பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, குஜராத் நர்மதா வாலி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களிடம் எந்த அடிப்படையில் ஏஜிஆர் கட்டண நிலுவையை தொலைத்தொடர்பு துறையானது கோரியுள்ளது என கேள்வி எழுப்பியுள்ளது.
அதுமட்டும் அல்ல இந்த கோரிக்கையை திரும்ப பெறுமாறும் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே உச்ச நீதிமன்றம், ஏஜிஆர் கட்டண நிலுவை தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இதை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளது.
மனுக்கள் தள்ளுபடி
மேலும் புதிய தொலைத்தொடர்பு கொள்கைப்படி, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஏஜிஆர் எனப்படும் சரிசெய்யப்பட்ட நிகர வருவாயில் இருந்து குறிப்பிட்ட சதவீத தொகையை ஆண்டு உரிம கட்டணமாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அரசுக்கு செலுத்த வேண்டும். இது தொடர்பாக ஏற்கனவே தொலைத்தொடர்பு துறை அனுப்பிய நோட்டீசை எதிர்த்து, பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஏஜிஆர் நிலுவையை செலுத்த பொதுத்துறை நிறுவனங்களுக்கு கோரிக்கை
அதோடு தொலைத் தொடர்பு துறைக்கு செலுத்த வேண்டிய நிலுவையை வட்டியுடன் சேர்த்து 1.6 லட்சம் கோடி ரூபாயினை செலுத்த உத்தரவிட்டது. இதற்கிடையில் தான் தற்போது கெயில் இந்தியா, பவர் கிரிட், ஆயில் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்கள் ஏஜிஆர் கட்டண பாக்கியாக மொத்தம் 4 லட்சம் கோடி ரூபாயினை செலுத்த வேண்டும் என தொலைத்தொடர்பு துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதனை எதிர்த்து தான் இந்த நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தன.
உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்
இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு வியாழக்கிழமையன்று விசாரணைக்கு வந்தது. இதில் பொதுத்துறை நிறுவனங்களுக்கு தொலைத்தொடர்பு துறை 4 லட்சம் கோடி ரூபாய் பாக்கியை செலுத்த நோட்டீஸ் அனுப்பியதற்கு கண்டனம் தெரிவித்தது. மேலும் அதில் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஏஜிஆர் கட்டணம் தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவு பொதுத்துறை நிறுவனங்களுக்கு பொருந்தாது. எனவே உத்தரவை தவறாக புரிந்து கொண்டு, பொதுத்துறை நிறுவனங்களிடம் ஏஜிஆர் பாக்கி கேட்டு நோட்டீஸ் அனுப்பியதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது.
விளக்கம் கொடுக்க உத்தரவு
மேலும் தொலைத் தொடர்பு துறையானது இதுதொடர்பான விளக்கத்தை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஏஜிஆர் நிலுவையை எவ்வாறு செலுத்தப்போகின்றன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை வரும் 18ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது உச்ச நீதிமன்றம்.
நிலுவையை செலுத்தியது
ஏற்கனவே பார்தி ஏர்டெல் செலுத்த வேண்டிய மொத்த தொகையானது 43,980 கோடி ரூபாயாகவும் உள்ள நிலையில், 18,004 கோடி ரூபாய் நிலுவையை செலுத்தியது. இது வோடபோன் ஐடியா 6854 கோடி ரூபாயும் செலுத்தியுள்ளது. இதே டாடா குழுமம் 4197 கோடி ரூபாயினையும் செலுத்தியுள்ளது.
என்ன செய்யப்போகிறதோ தெரியவில்லை?
ஏற்கனவே கடுமையான போட்டியினால் பல பிரச்சனைகளை சந்தித்து வந்த நிலையில், ஏஜிஆர் பிரச்சனை தலைதூக்கியது. தற்போது கொரோனா என்னும் தொற்று நோயால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், நிறுவனங்கள் மேலும் பின்னடைவினை சந்தித்துள்ள நிலையில், இனி என்ன செய்யப் போகின்றனவோ தெரியவில்லை. ஏற்கனவே தொலைத் தொடர்பு நிறுவனங்கள், இந்த விஷயத்தில் அரசின் உதவி இல்லாவிட்டால், நிறுவனத்தினை இழுத்து மூடுவதை தவிர வேறு வழியில்லை என்றும் கூறியிருந்தன.