பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு பெரும் கடன் சுமையாக இருந்த ஏர் இந்தியாவைப் பல முயற்சிகளில் தோல்வி அடைந்த நிலையில் கடைசியாக ஸ்பைஸ்ஜெட் மற்றும் டாடா குழுமத்திற்கும் மத்தியிலான போட்டியில் டாடா குழுமத்தின் டேலெஸ் நிறுவனம் வென்றுள்ளது.
அடுத்த சில வாரத்தில் மத்திய அரசு ஏர் இந்தியா நிறுவனத்தை மொத்தமாக டாடா குழுமத்திடம் கொடுக்க உள்ள நிலையில் தற்போது புதிய தடை வந்துள்ளது.
ஏர் இந்தியா
ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்கு விற்பனையை ரத்துச் செய்யக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் பிஜேபி கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான சுப்பிரமணியன் சுவாமி மனு தாக்கல் செய்தார். இதுமட்டும் அல்லாமல் ஏர் இந்தியா பங்கு விற்பனை குறித்து இதற்கு முன்னர் கொடுக்கப்பட்ட ஒப்புதல், அனுமதி, உரிமைகள் அனைத்தையும் திரும்பப் பெறவும், தற்காலிக தடையை விதிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
சுப்பிரமணியன் சுவாமி
இன்று சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் டிஎன் படேல், ஜோதி சிங் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது. மத்திய அரசு நீண்ட காலமாகத் திட்டமிட்டு எதிர்பார்த்து இருந்த திட்டத்தைச் சொந்த பிஜேபி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரே தடை விதிக்க மனு கொடுத்துள்ளது முக்கியப் பிரச்சனையாக மாறியுள்ளது.
டெல்லி உயர்நீதிமன்றம்
டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சத்யா சபர்வால் மூலம் மனுதாரராகச் சுப்ரமணியன் சுவாமி சமர்ப்பித்த மனுவில்,
தற்போது நடந்து வரும் ஏர் இந்தியா பங்கு விற்பனையில் அதிகாரிகளின் பங்கு மற்றும் செயல்பாடுகளை விசாரித்து, இந்த நடவடிக்கையில் விரிவான அறிக்கையை நீதிமன்றத்தில் பிரத்தியேகமாகச் சமர்ப்பிக்க மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) க்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
ஜனவரி 5
தலைமை நீதிபதி டி.என்.படேல் மற்றும் நீதிபதி ஜோதி சிங் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் மனுவை ஆய்வு செய்து "நாங்கள் மறுநாள் உத்தரவுகளைப் பிறப்பிப்போம்" என்று கூறினர், அதே நேரத்தில் வழக்கில் சம்பந்தப்பட்ட தரப்பினர் தங்கள் எழுத்துப்பூர்வமாக பதில்களைப் புதன்கிழமைக்குள் அதாவது ஜனவரி 5ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.
சுப்ரமணியன் சுவாமி - நியாயமற்றது
இந்த மனு விசாரணைக்கு நேரில் ஆஜரான சுப்ரமணியன் சுவாமி தற்போதைய ஏர் இந்தியா பங்கு விற்பனை செயல்முறையை ரத்துச் செய்யுமாறு அரசுக்கு உத்தரவிடுமாறு நேரடியாகவே நீதிபதிகள் முன்பு கோரிக்கை விடுத்தார். இது "தன்னிச்சையான முடிவு, அரசியலமைப்பிற்கு விரோதமானது, நியாயமற்றது" மற்றும் "டாடா குழுமத்திற்கு ஆதரவாகச் செயல்படக் கூடிய திட்டமாக உள்ளது" என்று பேசினார்.
ஸ்பைஸ்ஜெட்
ஏர் இந்தியா விற்பனை செயல்பாட்டில் டாடா குழுமத்துடன் போட்டிப்போட்ட மற்ற ஏலதாரர் ஸ்பைஸ்ஜெட் உரிமையாளரின் தலைமையிலான கூட்டமைப்பு ஆகும், இது சென்னை உயர்நீதிமன்றத்தில் திவாலான நடவடிக்கைகளை எதிர்கொண்டது, இதனால் ஏலம் எடுக்க முடியவில்லை. அதாவது ஒரு ஏலதாரர் மட்டுமே இருந்ததால் ஏலம் நடந்திருக்க முடியாது எனவே ஸ்பைஸ்ஜெட் சேர்க்கப்பட்டு உள்ளது எனச் சுப்ரமணியன் சுவாமி பேசியுள்ளதாக ஹிந்து பத்திரிகை தெரிவித்துள்ளது.
அரசின் கொள்கை முடிவு
மேலும் அரசு தரப்பு வழக்கறிஞரான துஷார் மேத்தா, இந்த மனுவை எதிர்த்துப் போராடி, ஏர் இந்தியா பங்கு விற்பனை என்பது அரசின் கொள்கை முடிவு, இதை நீதிமன்றங்களில் முடிவு எடுக்க முடியாது. மேலும் தேசிய விமான நிறுவனமான ஏர் இந்தியா தினமும் 1000 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை நஷ்டம் அடைந்து வருகிறது எனத் துஷார் மேத்தா கூறினார்.
டாடா குழுமம்
டாடா குழுமத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, ஏர் இந்தியா-வை கைப்பற்றிய டேலெஸ் நிறுவனம் டாடா குழுமத்தில் இருக்கும் 100% இந்திய நிறுவனம், 100% இந்தியருக்கு சொந்தமானது எனவும் வாதிட்டார்.