ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் விமான பயணத்தை கனவில் மட்டுமே செய்துகொண்டிருக்கும் நிலையில் தற்போது பணக்காரர்களையும் விமான பயணம் யோசிக்க வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
மேல்மட்ட மிடில் கிளாஸ் மற்றும் பணக்காரர்கள் மட்டுமே விமானத்தில் பயணம் செய்து வரும் நிலையில் வரலாறு காணாத வகையில் விமான கட்டணம் விரைவில் உயரும் என்ற தகவல் விமான பயணிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
விமானங்களில் பயன்படுத்தப்படும் AFT என்ற எரிபொருள் விலை இன்று ஒரே நாளில் 16 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை
இன்று முதல் AFT என்ற எரிபொருள் விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளதாக அரசுக்குச் சொந்தமான ஆயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது. இதனால் விமான நிறுவனங்கள் பயண கட்டணத்தை உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
AFT எரிபொருள் விலை
கடந்த ஜூன் மாதம் AFT எரிபொருள் விலை 1.3 சதவீதம் குறைக்கப்பட்ட நிலையில் இன்று திடீரென 16 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதால் விமான நிறுவனங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன. வரலாறு காணாத வகையில் உயர்ந்து உள்ள AFT விலை காரணமாக விமான நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டு உள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
ஒரே நாளில் ரூ.19,757.13 உயர்வு
தற்போது ஒரு கிலோ லிட்டர் AFT விலை ரூ.1,41,232.87 என உயர்ந்துள்ளது. இன்று ஒரு நாளில் மட்டும் ஒரு கிலோ லிட்டர் ரூ.19,757.13 உயர்ந்துள்ளது. ஏற்கனவே விமான நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கி வரும் நிலையில் AFT எரிபொருள் விலை உயர்வு காரணமாக விமான நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்த விட்டால் தொடர்ந்து விமானத்தை இயக்க முடியாத நிலை ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
எரிபொருள் நிறுவனங்கள்
இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம், ஷெல், ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்கள் விமான நிறுவனங்களுக்கு எரிபொருளை வழங்கி வரும் நிலையில் இன்று முதல் அனைத்து நிறுவனங்களும் 16% AFT விலையை உயர்த்தி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விமான டிக்கெட் விலை
சென்னையில் ஒரு கிலோ லிட்டர் AFT விலை ரூ.1,46,215.85 என்றும், மும்பையில் ஒரு கிலோ லிட்டர் AFT விலை ரூ.1,40,092.74 என்றும் விற்பனையாகி வருகிறது. இதன் காரணமாக விமான டிக்கெட்டுக்களின் விலை 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று கூறப்படுவதால் மிடில்கிளாஸ் மக்கள் மட்டுமின்றி பணக்காரர்களும் விமானத்தில் செல்வதற்கு அதிகமாக யோசிப்பார்கள் என்று கூறப்படுகிறது.