கொரோன வைரஸ் பிரச்சனையால் பலத்த அடி வாங்கிய துறைகளைப் பட்டியல் போட்டால் டாப் 5 துறைகளில் நிச்சயம் விமான சேவைத் துறைக்கு ஒரு இடம் உண்டு.
மற்றவர்கள் அப்படி இப்படி என ஏதோ வியாபாரம் செய்து கொள்ளலாம்.
ஆனால் பல்வேறு நாடுகளும், இந்தியாவுக்குள் இருக்கும், பல்வேறு மாநிலங்களும் லாக் டவுனை நீட்டிப்பது, விமான சேவைகளுக்கு தடை அல்லது கடுமையான கட்டுப்பாடு போட்டு இருப்பது என பல்வேறு சிக்கல்கள் இன்னமும் நீடித்துக் கொண்டு தான் இருக்கின்றன.
விமான சேவைத் துறை
பழைய படி நிம்மதியாக நினைத்த படி விமானங்களை இயக்க முடியாமல் தவிக்கிறார்கள் ஏர்லைன் கம்பெனிகள். தொழிலை நடத்துவதில் இருக்கும் சிக்கலை விட, லாக் டவுன் காலத்தில், டிக்கெட்டை பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு, பணத்தை ரீஃபண்ட் கொடுக்கும் சவாலை சந்தித்துக் கொண்டு இருக்கிnறன ஏர்லைன் கம்பெனிகள்.
3000 கோடிக்கு க்ரெடிட் செல்
ஆம். ஏர்லைன் கம்பெனிகள் சுமாராக 3,000 கோடி ரூபாயை, (க்ரெடிட் செல்) credit shell-ஆக, ரீஃபண்ட் கொடுக்க வேண்டிய பயணிகளுக்கு கொடுத்து இருக்கிறார்களாம். இந்த credit shells என்றால் என்ன? இதை எப்படி பயணிகள் பயன்படுத்திக் கொள்ள முடியும்? வாருங்கள் விரிவாகப் பார்ப்போம்.
பயணிகள் விருப்பம்
விமான சேவை கம்பெனிகள், தாங்கள் கொடுக்க வேண்டிய ரீஃபண்ட் பணத்தை நேரடியாக கொடுக்காமல், ஒரு ஓப்பன் விமான டிக்கெட்டைப் போல, வாடிக்கையாளர்கள் பெயரில் வைத்திருப்பார்கள். இந்த credit shell-ஐ பயன்படுத்திக் கொள்ள ஒரு காலக் கெடுவையும் கொடுப்பார்கள். அந்த காலத்துக்குள், இந்த பயணி, எப்போது மீண்டும் விமானத்தில் பயணம் செய்ய விரும்புகிறாரோ, அப்போது இந்த credit shell-ஐ பயன்படுத்தி டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம்.
ஒரு கூப்பன் போல
சுருக்கமாக, பணத்தை நேரடியாக கொடுக்காமல், கூப்பன் கொடுத்து இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளலாம். அந்த கூப்பன் தான் credit shell. இந்த credit shell-ஐ (கூப்பனை) மீண்டும் பயன்படுத்தி, விமான கம்பெனிகள் சொல்லும் தேதிக்குள், எப்போது வேண்டுமானாலும் விமான டிக்கெட்டைப் பெறலாமாம்.
அரசு பார்வை
விமான நிறுவனங்களை கட்டாயப்படுத்தி, ரீஃபண்ட் தொகைகளைக் கொடுக்கச் சொல்ல முடியாது. அவர்களிடமே போதுமான பணம் இல்லை என்கிற பார்வையில் அரசு இருக்கிறதாம். இப்படி சுமாராக 3,000 கோடி ரூபாய் மதிப்புள்ள credit shell-களை விமான சேவை கம்பெனிகள் கொடுத்து இருக்கிறார்கள் என்றால், அவர்கள், வியாபாரம் செய்ய எவ்வளவு திணறிக் கொண்டு இருக்கிறார்கள் என்று புரியும்.