அமெரிக்காவின் ஃபிப்சர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பு மருந்து, கிட்டதட்ட 90% மேலாக வெற்றி கண்டுள்ளதாக ஃபிப்சர் தெரிவித்துள்ளது.
இந்த நிறுவனம் இது அறிவியலுக்கும், மனிதக் குலத்திற்கும் சிறப்பான ஒரு தினம் என திங்கட்கிழமையன்று கூறியிருந்தது. அதுமட்டும் அல்ல, இந்த தடுப்பு மருந்து ஆறு நாடுகளில் 43,500 பேரிடம் பரிசோதிக்கப்பட்டது. எனினும் இது குறித்து எந்த பாதுகாப்பு அச்சங்களும் எழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உலகமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தது இந்த ஒரு தருணத்திற்காகத் தான் என்று கூட கூறலாம். ஏனெனில் உலக நாடுகள் பலவும் கொரோனாவினால் ஸ்தம்பித்து போயுள்ள நிலையில், இது மிகப்பேரிய மாற்றத்தினை கொண்டு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்றம் கண்ட ஹாஸ்பிட்டாலிட்டி பங்குகள்
இதற்கிடையில் இந்தியாவில் ஹாஸ்பிட்டாலிட்டி பங்குகள், கொரோனா தடுப்பு மருந்து அறிவிப்பினால் ஏற்றத்தில் உள்ளன. ஏனெனில் இதன் மூலம் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். பொருளாதார வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை மீட்டெடுக்க முடியும். பொருளாதாரத்தினை மீட்க முடியும். இதனால் இதுவரை முடக்கப்பட்டிருந்த சர்வதேச விமான சேவைகள் துளிர்வடையும், ஹோட்டல்கள் வளர்ச்சி காணும். சுற்றுலா துறை மேம்படும் என்ற உணர்வுகள் ஏற்பட்டுள்ளது. அதோடு பொழுதுபோக்கு சம்பந்தமான பங்குகளும் ஏற்றம் கண்டுள்ளன.
ஹோட்டல் பங்குகள்
குறிப்பாக விமான பங்குகள், ஹோட்டல், தியேட்டர் பங்குகள், நல்ல ஏற்றம் கண்டுள்ளன. Indian Hotels Co. Ltd பங்கு 14% ஏற்றத்திலும், EIH 7.54% ஏற்றத்திலும், TajGVK Hotels and Resorts 3.18% ஏற்றத்திலும், Chalet Hotels 7.84% ஏற்றத்திலும், மகேந்திரா ஹாலிடேஸ் 4.6% ஏற்றத்திலும், வொண்டர்லா ( Wonderla Holidays) ஹாலிடேஸ் 12.75% ஏற்றத்திலும், அத்வானி ஹோட்டல்ஸ் & ரிசார்ட்ஸ் 12% ஏற்றத்திலும் காணப்படுகிறது.
தியேட்டர் & விமான பங்குகள்
இதே இண்டர்குளோப் ஏவியேஷன் மற்றும் ஸ்பைஸ்ஜெட் பங்குகள் முறையே 9% மற்றும் 6.6% ஏற்றத்திலும் காணப்படுகிறது.
இதே பிவிஆர் மற்றும் ஐனாக்ஸ் லெயிசர் பங்குகள் முறையே 7.5 மற்றும் 4.91% ஏற்றத்திலும், ஹாஸ்பிட்டாலிட்டி பங்குகளும் ஏற்றத்தில் காணப்படுகிறது.
கொரோனா தடுப்பூசி
உலகில் 5 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா என்னும் கண்ணுக்கு தெரியாத நுண்கிருமியினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல்வேறு நாடுகளும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக ரஷியா, அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து போன்ற நாடுகள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் போட்டியில் முன்னிலையில் இருந்த நிலையில், அமெரிக்க நிறுவனம் இந்த அறிவிப்பினை கொடுத்துள்ளது முதலீட்டாளர்களுக்கு ஒரு நம்பிக்கையை கொடுத்துள்ளது.
பயன்பாட்டுக்கு விரைவில் வரலாம்
இதில் நல்ல விஷயம் என்னவெனில் ஃபிப்சர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி, 90 சதவீதம் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மனிதர்களை பாதுகாகப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆக இதன் மூலம் இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பு மருந்து கிடைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.