இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் இருக்கின்றன என்பது அனைவரும் அறிந்ததே.
ஆனால் வழக்கமான கட்டுப்பாடுகளை மீறி இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு தப்பித்து செல்லும் பொருளாதார குற்றவாளிகள் மற்றும் கிரிமினல் குற்றங்களை தடுப்பதற்காக மத்திய அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
விமான நிறுவனங்கள் ஒரு விமானம் கிளம்புவதற்கு முன் சர்வதேச பயணிகளின் முழு விவரங்களை அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு இருப்பதாகவும் இந்த உத்தரவு விமான நிறுவனங்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
வெளிநாடு செல்லும் பயணிகள்
நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள மறைமுக வரிகள் மற்றும் சுங்கங்களின் மத்திய வாரியம் (CBIC), சமீபத்தில் விமான நிறுவனங்களுக்கு ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவில் விமானம் கிளம்புவதற்கு 24 மணி நேரத்துக்கு முன்னர் வெளிநாடு செல்லும் பயணிகளின் முழு விபரங்களை அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் இது பொருளாதார குற்றவாளிகள் மற்றும் பிற குற்றவாளிகள் தப்பிச்செல்வதை தடுக்கும் நடவடிக்கையாக இருக்கும் என்றும் அறிவித்துள்ளது.
பயணிகளின் முழு தகவல்கள்
ஒவ்வொரு விமான நிறுவனமும் விமானம் கிளம்புவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக பயணிகளின் பெயர், பில்லிங் பணம் செலுத்திய தகவல், பயணச்சீட்டு வழங்கிய தேதி, பயணச்சீட்டு முன்பதிவு செய்த தேதி, பயணத்தின் பிஎன்ஆர் எண், பயணியின் மின்னஞ்சல், மொபைல் எண் ஆகிய தகவல்களை விமான நிறுவனங்கள் அரசுக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
நடவடிக்கை
இத்தகைய தகவல்களை கோருவதற்கான காரணங்கள் தெளிவாக குறிப்பிட குறிப்பிடவில்லை என்றாலும் வங்கி கடனை திருப்பி செலுத்தாதவர்கள் வழக்கில் இருந்து தப்பிக்க நாட்டை விட்டு தப்பி செல்வதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
தப்பிச்சென்ற தொழிலதிபர்கள்
கடந்த 5 ஆண்டுகளில் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெஹ்குல் சோக்சி உள்பட 38 பொருளாதார குற்றவாளிகள் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளனர் என்றும் இனியும் எதிர்காலத்தில் இவ்வாறு தப்பி செல்லாத வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
விஜய் மல்லையா
எஸ்பிஐ உள்பட பல்வேறு வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன் வாங்கிவிட்டு விஜய் மல்லையா லண்டனுக்கு தப்பி சென்றுவிட்டார். அதேபோல் ரூ.13 கோடிக்கு மேல் பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் வாங்கிவிட்டு மெஹ்குல் சோக்சி ஆண்டிகுவா நாட்டிற்கு தப்பி சென்றுவிட்டார்.
அபராதம்
இவ்வாறு பொருளாதார குற்றவாளிகள் தப்பிக்காமல் இருக்க, வெளிநாட்டு பயணிகளின் முழு தகவல்களை 24 மணி நேரத்திற்கு முன்பே அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் இல்லையெனில் விமான நிறுவனங்களுக்கு ரூ.25,000 முதல் ரூ.50,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.