இந்திய டெலிகாம் மற்றும் டிஜிட்டல் சேவையை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்லும் 5ஜி சேவையை ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் நாட்டின் முக்கியமான பகுதிகளில் அறிமுகம் செய்துள்ளது.
4ஜி சேவையில் ரிலையன்ஸ் ஜியோ துரிதமாகச் செயல்பட்டு அதிகளவிலான வாடிக்கையாளர்கள் மற்றும் வர்த்தகத்தைப் பெற்று கடந்த 6 வருடத்தில் இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமாக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் 5ஜி சேவையில் எப்படியாவது ஜியோ-வை முந்த வேண்டும் எனப் பார்தி ஏர்டெல் திட்டமிட்டுக் களத்தில் இறங்கியது.
பார்தி ஏர்டெல்
இந்தியாவின் 2வது பெரிய டெலிகாம் சேவை நிறுவனமாக இருக்கும் பார்தி ஏர்டெல் சேவை நிறுவனம் தனது 5ஜி சேவையை நாட்டின் 8 முக்கிய நகரத்தில் அறிமுகம் செய்துள்ளது. இந்த 30 நாள் பார்தி ஏர்டெல் நிறுவனம் 1 மில்லியன் அதாவது 10 லட்சத்திற்கும் அதிகமாக வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.
5ஜி சேவை
ஏர்டெல் நிறுவனம் தனது 5ஜி சேவையைத் துவங்கி சில நாட்கள் மட்டுமே ஆன நிலையில், வாடிக்கையாளர்களின் வரவேற்பு மிகவும் சிறப்பாக உள்ளது. எங்களது நெட்வொர்க்-ஐ தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது, இதனால் இந்தியாவில் இருக்கும் அனைத்து 5ஜி கருவிகளும் விரைவில் ஏர்டெல் 5ஜி பிளஸ் நெட்வொர்க் சேவையைப் பயன்படுத்த முடியும்.
நெட்வொர்க்
விரைவில் நாடு முழுவதும் 5ஜி சேவை அளிக்கும் வகையில் நெட்வொர்க்-ஐ மேம்படுத்தி வருவதாகப் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியான ரன்தீப் செகோன் தெரிவித்துள்ளார்.
ரிலையன்ஸ் ஜியோ இதுவரையில் 5ஜி வாடிக்கையாளர்கள் குறித்து அதிகாரப்பூர்வ தரவுகளை வெளியிடவில்லை.
8 நகரங்கள்
ஏர்டெல் நிறுவனம் டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், வாரணாசி, நாக்பூர் மற்றும் சிலிகுரி உள்ளிட்ட இந்தியாவின் எட்டு நகரங்களில் ஏர்டெல் 5ஜி சேவையை வழங்கியுள்ளது. இந்த நகரங்களில் சில பகுதிகளில் மட்டுமே செல் தளங்கள் உள்ளதால் சில பகுதிகளில் மட்டுமே 5ஜி சேவை வாடிக்கையாளர்கள் பெற்று வருகின்றனர்.
தொடர் விரிவாக்கம்
ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து தனது நெட்வொர்க்கை 5ஜி சேவைக்காக மேம்படுத்தி வரும் நிலையில், தற்போது சேவை அளிக்கப்படும் 8 நகரங்கள் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் படிப்படியாக 5ஜி சேவை அறிமுகம் செய்யத் திட்டமிட்டு உள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
நோக்கியா, எரிக்சன், சாம்சங்
ஏர்டெல் தனது 5ஜி சேவைக்காக டெலிகாம் கருவிகளை நோக்கியா, எரிக்சன், சாம்சங் ஆகிய நிறுவனங்களிடம் வாங்க முடிவு செய்துள்ளது. பார்தி ஏர்டெல் 5ஜி டெலிகாம் கருவிகளுக்காகச் சுமார் 2.5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தம் செய்துள்ளது.
சீனாவுக்குச் செக்
சீனா நாட்டின் டெலிகாம் உபகரணத் தயாரிப்பு நிறுவனங்களால் இணையப் பாதுகாப்புத் தொடர்பான பல்வேறு சந்தேகங்கள் இருக்கும் காரணத்தால் 'நம்பகமான ஆதாரங்கள்' 'நம்பகமான தயாரிப்பு' என மத்திய அரசு தகுதி சான்றிதழ் அளித்த நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே டெலிகாம் உபகரணங்களைக் கொள்முதல் செய்ய வேண்டும் என இந்திய டெலிகாம் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டு உள்ளது.
ZTE மற்றும் ஹூவாய்
இந்த நிலையில் சீனாவின் ZTE மற்றும் ஹூவாய் இன்னும் 'நம்பகமான ஆதாரங்கள்' 'நம்பகமான தயாரிப்பு' என்ற டேக் பெறாத நிலையில் இந்தியாவில் விஸ்வரூபம் எடுத்திருக்கும் 5ஜி சேவை-க்கான வர்த்தகத்தைப் பெறாமல் உள்ளது. இதனால் இவ்விரு சீன நிறுவனங்களும் தனது இந்திய வர்த்தகத்தில் நியமிக்கப்பட்டு இருந்த ஊழியர்களில் 90 சதவீத பேரை பணியில் இருந்து நீக்கியுள்ளது.