இந்திய டெலிகாம் துறை படு பயங்கரமான ஒரு போர் களமாக மாறிவிட்டது. சுமாராக ஐந்து ஆண்டுகளுக்குப் பின் இப்போது தான் கொஞ்சம் இந்திய டெலிகாம் நிறுவனங்களால் ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட முடிந்திருக்கிறது.
ஒரு காலத்தில் ஒரு ஜிபி டேட்டாவுக்கு சுமாராக 150 ரூபாய் கொடுத்த காலம் எல்லாம் மலை ஏறி போய், இப்போது தினமும் ஒரு ஜிபி டேட்டா, கிட்ட தட்ட இலவச வாய்ஸ் கால், தினமும் 100 எஸ் எம் எஸ் போன்ற சேவைகளுக்கே சுமார் 150 - 175 ரூபாய் கொடுக்கும் நிலை உருவாகி இருக்கிறது.
இதற்கு எல்லாம் காரணம்... தொழில் போட்டி தான். அந்தப் போட்டியில் தற்போது ஏர்டெல் ஒரு நல்ல பாய்ச்சலைக் காட்டி இருக்கிறது.
4ஜி வாடிக்கையாளர்கள்
கடந்த அக்டோபர் 2019 மற்றும் நவம்பர் 2019 ஆகிய இரண்டு மாதங்களில் மட்டும் 12 மில்லியன் (1.2 கோடி) 4ஜி வாடிக்கையாளர்களை பெற்று இருக்கிறார்கள் ஏர்டெல் நிறுவனத்தினர்கள். அக்டோபர் 2019-ல் 5 மில்லியன் (50 லட்சம்) வாடிக்கையாளர்களையும், நவம்பர் 2019-ல் 7 மில்லியன் (70 லட்சம்) வாடிக்கையாளர்களையும் பெற்று இருக்கிறார்கள்.
ஐந்து மடங்கு
பொதுவாக ஏர்டெல் நிறுவனத்தின் 4ஜி சேவையில் புதிதாக இணையம் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மாதம் ஒன்றுக்கு சராசரியாக 1.5 மில்லியனாக (15 லட்சம்) தான் இருக்குமாம். ஆனால் இந்த இரண்டு மாதங்களை கணக்கில் எடுத்துக் கொண்டால், சராசரியை விட சுமாராக 5 மடங்கு கூடுதல் வாடிக்கையாளர்கள் இணைந்து இருக்கிறார்களாம்.
3ஜி சேவை
ஏர்டெல் நிறுவனம், இந்தியா முழுக்க 4ஜி சேவையை வழங்கி வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் தான், வரும் மார்ச் 2020 உடன் தன் 3ஜி சேவையை நிறுத்திக் கொள்ள இருப்பதாகச் சொல்லி இருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படி 3ஜி சேவையை நிறுத்திக் கொள்வதன் மூலம் தன் ஸ்பெக்ட்ரத்தை 4ஜி சேவைக்கு பயன்படுத்த இருக்கிறார்களாம்.
மூடுவிழா
ஏற்கனவே ஏர்டெல் நிறுவனம் தன்னுடைய ஹரியானா, கொல்கத்தா பஞ்சாப் போன்ற வியாபார பகுதிகளில் முழுமையாக 3ஜி சேவையை நிறுத்திக் கொண்டு 4ஜி சேவையை அதிக அளவில் வழங்கி வருகிறது. ஆனால் ஆச்சர்யமாக தன் 2ஜி சேவையை இன்னும் தொடர்ந்து கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
நெருங்க முடியல
இரண்டே மாதத்தில் 1.2 கோடி 4ஜி வாடிக்கையாளர்களைப் பிடித்தும், ஏர்டெல் நிறுவனத்தால், ரிலையன்ஸ் ஜியோவின் அருகில் கூட செல்ல முடியவில்லை. ஜியோவிடம் 35.52 கோடி 4ஜி வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். ஏர்டெல்லிடம் 12.54 கோடி 4ஜி வாடிக்கையாளர்களும், வொடாபோன் ஐடியாவிடம் 11.21 கோடி 4ஜி வாடிக்கையாளர்கள் மட்டுமே இருக்கிறார்களாம்.
ட்ராய் உறுதி
இந்த தரவுகளை மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையுடன் இணைந்து செயல்படும், இந்திய டெலிகாம் நெறிமுறை ஆணையம் (TRAI - Telecom Regulatory Authority of India) உறுதி செய்து இருக்கிறது. எப்படிப் பார்த்தாலும், ஏர்டெல் நிறுவனம், ஜியோவைப் பிடிக்க இன்னும் பல மடங்கு வளர வேண்டி இருக்கிறது.