சில வாரங்களுக்கு முன்பு தான், இந்திய டெலிகாம் நிறுவனங்களின், (ARPU - Average Revenue Per User) ஒரு பயனரிடம் இருந்து வரும் வருவாய், 300 ரூபாய் அல்லது நான்கு அமெரிக்க டாலரைத் தொட வேண்டும் என, ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல் பேசி இருந்தார்.
இந்திய டெலிகாம் நிறுவனங்களின் ஏ ஆர் பி யூ-வை அதிகரிக்க, டிராய் (TRAI - Telecom Regulatory Authority of India) அமைப்பு, தலையிட்டு, டெலிகாம் சேவைகளுக்கு ஒரு அடிப்படை விலையை நிர்ணயிக்க வேண்டும், எனவும் சொல்லி இருந்தார் சுனில் மிட்டல்.
ஆனால் இப்போது ஜியோவுக்கு எதிராக வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்ளவும், புதிய வாடிக்கையாளர்களை பிடிக்கவும் மலிவு விலைத் திட்டங்களைக் களம் இறக்கி இருக்கிறார்.
சமீபத்திய விலை அதிகரிப்பு
கடந்த செப்டம்பர் 2019 காலாண்டில், ஏர்டெல் நிறுவனம் மட்டும் சுமார் 23,000 கோடி ரூபாயை நஷ்டமாகக் கணக்கு காட்டியது. இப்படி கடை நடத்தினால் எல்லோரும் நஷ்டத்திலேயே சாக வேண்டியது தான் என வெளிப்படையாக வொடாபோன் ஐடியா நிறுவனம் புலம்பத் தொடங்கியது. அப்போது தான் இந்திய டெலிகாம் நிறுவனங்கள், தங்கள் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை அதிகரிக்கத் தொடங்கினார்.
எவ்வளவு விலை ஏற்றம்
ஏர்டெல், வொடாபோன் ஐடியா போன்ற நிறுவனங்கள் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை சுமாராக 40 சதவிகிதம் வரை அதிகரித்தார்கள். ஜியோ அதர்கு கொஞ்சம் குறைவாக அதிகரித்தது. இத்தனை நாட்களாக மலிவு விலைக்கு டேட்டாவை ஜமாயித்துக் கொண்டிருந்த மக்கள், இனி அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டார்கள்.
வேலிடிட்டி பேக்
சமீபத்தில் கூட வேலிடிட்டி ரீசார்ஜ் பேக்கின் விலையை 35 ரூபாயில் இருந்து 45 ரூபாயாக நிர்ணயித்தது ஏர்டெல். ஆனால் இப்போது வாடிக்கையாளர்கள் வேறு நெட்வொர்க்குக்கு மாறத் தொடங்கிவிட்டார்களா அல்லது வியாபாரம் இல்லையா எனத் தெரியவில்லை... திடீரென 2 மலிவு விலை ரீசார்ஜ் திட்டங்களை களம் இறக்கி இருக்கிறது ஏர்டெல்.
திட்டம் 1
379 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், 84 நாட்களுக்கு இலவச வாய்ஸ் கால்கள், 900 எஸ் எம் எஸ் மற்றும் ஒட்டு மொத்தமாக 6 ஜிபி டேட்டா வழங்கப்படுமாம்.
இது போக
1. அன்லிமிடெட் விங்க் (Wynk) ஆக்ஸிஸ்
2. நான்கு வார ஷா அகாடமி ஆக்ஸிஸ்
3. ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் சேவை
4. ஃபாஸ்ட் டேக்-க்கு 100 ரூபாய்கேஷ் பேக்
போன்றவைகளைப் பெறலாம்.
திட்டம் 2
279 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், 28 நாட்களுக்கு இலவச வாய்ஸ் கால்கள், நாள் ஒன்றுக்கு 100 எஸ் எம் எஸ், நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுமாம்.
இது போக
1. அன்லிமிடெட் விங்க் (Wynk) ஆக்ஸிஸ்
2. நான்கு வார ஷா அகாடமி ஆக்ஸிஸ்
3. ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் சேவை
4. ஃபாஸ்ட் டேக் 100 ரூபாய்கேஷ் பேக்
5. நான்கு லட்சம் ரூபாய்க்கு டேர்ம் இன்ஷூரன்ஸ்
போன்றவைகளைப் பெறலாமாம்.
இந்த இரண்டு திட்டங்களும் ஏர்டெல் வலைதளத்தில் இப்போது கிடைக்கின்றன. இது ப்ரீ பெய்ட் எண்களுக்கு மட்டுமே கிடைக்கும் சேவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜியோவுக்கு போட்டி
சமீபத்தில் தான் 2020 புத்தாண்டை முன்னிட்டு ஜியோ தன் வாடிக்கையாளர்களுக்கு ‘2020 Happy New Year Offer' சலுகையை அறிவித்தது. 2,020 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், 365 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால், நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் ஜியோ அப்ளிகேஷன் ஆக்ஸிஸ் போன்றவைகளை வழங்கிக் கொண்டு இருக்கிறது.
தன் பங்கு
எனவே தன் பங்குக்கு ஏர்டெல் நிறுவனம், தற்போது இரண்டு புதிய திட்டங்களை களம் இறக்கி இருக்கிறது போல. மாதம் ஒன்றுக்கு ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து 300 ரூபாயாவது வசூலிக்க வேண்டும் எனச் சொன்ன நிறுவனத்தின் தலைவரே... இப்போது ஜியோவுக்கு போட்டியாக 2 ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்து இருக்கிறார் என்பது தான் வேடிக்கையிலும் வேடிக்கை.
எது எப்படியோ நமக்கு மலிவு விலை கூட வேண்டாம், நியாய விலைக்கு வாய்ஸ் கால், டேட்டா சேவைகள் கிடைத்தால் சரி.