வங்கி சேவைகளில் ஏடிஎம் இயந்திரங்கள் எந்த அளவிற்கு முக்கியமானது எனச் சொல்ல தேவையில்லை, இந்த ஏடிஎம் சேவையில் புதிய மாற்றத்தைச் செய்ய உள்ளது டெலிகாம் சேவை நிறுவனம் பார்தி ஏர்டெல்-ன் நிதி சேவை பிரிவான ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி.
இந்தியாவில் ஏடிஎம் நெட்வொர்க் மிகவும் பெரியது என்பது அனைவருக்கும் தெரியும், இதேபோல் ஏடிஎம் இயந்திரங்களை இயக்க வங்கிகளுக்கு அதிகச் செலவாகும் காரணத்தால் மக்களிடம் இருந்து அதிகப்படியான பணத்தை வசூலிக்கிறது வங்கிகள்.
இந்த நிலையில் ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி இந்தியாவில் மைக்ரோ ஏடிஎம் நெட்வொர்க்-ஐ மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு உள்ளது.
ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி
ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி இந்தியா முழுவதும் இருக்கும் டவுன் மற்றும் சிறு நகரங்களில் சுமார் 1.5 லட்சம் மைக்ரோ ஏடிஎம்-களை நிறுவ திட்டமிட்டு உள்ளது. இந்த மைக்ரோ ஏடிஎம் மூலம் மக்கள் பணத்தைத் தங்கள் வங்கி கணக்கில் இருந்து வித்டிரா செய்வது மிகவும் எளிதாகும் என்று தெரிவித்துள்ளது.
மைக்ரோ ஏடிஎம்
முதலில் அதிகப் பணத் தேவை இருக்கும் பகுதிகளில் இந்த மைக்ரோ ஏடிஎம்கள் நிறுவப்பட்டு அதன் பின் நாட்டின் பிற பகுதிகளுக்கு விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு உள்ளது. ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி சொன்னபடி 1.5 மைக்ரோ ஏடிஎம்களை நிறுவினால் நாட்டின் முன்னணி வங்கிகளான எஸ்பிஐ, ஹெச்டிஎப்சி ஆகியவற்றைக் காட்டிலும் மிகப்பெரிய ஏடிஎம் நெட்வொர்க்-ஐ நிர்வாகம் செய்யும்.
மைக்ரோ ஏடிஎம் என்றால் என்ன..?
கடைகளில் இருக்கும் POS இயந்திரங்கள் போலவே இருக்கும் இந்த மைக்ரோ ஏடிஎம் இயந்திரத்தில் கார்டு ஸ்வைபிங் சேவை மட்டும் அல்லாமல் fingerprint scanner-ம் இருக்கும். இந்த இந்திரங்கள் வங்கிகளின் primary banking system உடன் இணைக்கப்படுவதால் ஒரு ஏடிஎம் இயந்திரம் போலவே செயல்படும்.
பாதுகாப்பு
இந்த மைக்ரோ ஏடிஎம் என்பது மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் நேஷ்னல் பேமெண்ட் கார்ப்ரேஷன் ஆப் இந்தியா கீழ் செயல்படும் நேஷ்னல் பைனான்சியல் ஸ்விச் உடன் ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி இணைக்கப்பட்டு உள்ளதால் மைக்ரோ ஏடிஎம் பரிமாற்றம் மிகவும் வேகமாகவும் எளிதாகவும் நடக்கும்.
10000 ரூபாய்
ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி இத்தகைய இயந்திரத்தை முதல் முறையாக அறிமுகம் செய்கிறது. ஒரு பரிமாற்றத்தில் 10000 ரூபாய் வரையிலான பணத்தைத் தங்கள் வங்கி கணக்கில் இருந்து வித்டிரா செய்ய முடியும். இதே தேவை மூலம் டோர்ஸ்டெப் சேவையும் அளிக்க முடியும் என்பது கூடுதல் தகவல்.
ஏடிஎம்
2021 முடிவில் இந்தியாவில் 2,38,590 ஏடிஎம்கள் இருந்தது, இந்த எண்ணிக்கை தற்போது 2.75 வரையில் உயர்ந்திருக்கலாம். ஆனால் ஏர்டெல் மட்டுமே தற்போது 1.5 லட்சம் ஏடிஎம்களை நிறுவ உள்ளது.