இந்தியாவின் பழமையான மற்றும் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனங்களில் முக்கியமான ஒன்றான ஏர்டெல் எனப்படும் பார்தி ஏர்டெல் தனியார் நிறுவனம் என்ற நிலையில் இருந்து வெளிநாட்டு நிறுவனமாக மாற முக்கியமான முயற்சிகளை எடுத்து வருகிறது. இதற்காக மத்திய அரசின் முக்கியமான ஒப்புதலுக்காகப் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் ப்ரோமோட்டர் நிறுவனமான பார்தி டெலிகாம் காத்திருக்கிறது.
மத்திய அரசு தரப்பில் இருந்து ஒப்புதல் கிடைத்தால் அடுத்த 2 அல்லது 3 மாதத்திற்குள் ஏர்டெல் நிறுவனம் வெளிநாட்டு நிறுவனமாக மாறிவிடும்.
வெளிநாட்டு நிறுவனம்
பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் ப்ரோமோட்டர் நிறுவனமான பார்தி டெலிகாம் நிறுவனத்தில் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த முன்னணி டெலிகாம் நிறுவனமான சிங்டெல் மற்றும் இதர முதலீட்டாளர்கள் இணைந்து சுமார் 4,900 கோடி ரூபாய் அளவில் அன்னிய முதலீடு செய்ய மத்திய அரசிடம் பார்தி டெலிகாம் ஒப்புதல் கேட்டுள்ளது.
இந்த முதலீட்டு உடன் பார்தி டெலிகாம் நிறுவனத்தின் வெளிநாட்டு நிறுவனங்களின் பங்கு அளவீடுகள் 50 சதவீதத்தைத் தாண்டுகிறது. இதன் மூலம் பார்தி டெலிகாம் ஒரு வெளிநாட்டு நிறுவனமாக மாறுகிறது.
சுனில் மிட்டல்
ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாகத் தலைவரான சுனில் மிட்டல் மற்றும் அவரது குடும்பத்தினர் பார்தி டெலிகாம் நிறுவனத்தில் தற்போது நிலவரத்தின் படி 52 சதவீத பங்குகளைக் கொண்டு நிர்வாகக் குழுவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
தற்போது கோரப்பட்டுள்ள அன்னிய முதலீட்டின் வாயிலாக அவர்களது பங்கு அளவீடுகள் சற்று குறைய அதிகளவிலான வாய்ப்புகள் இருக்கும் பட்சத்தில் நிர்வாகத்தில் சில மாற்றங்கள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது.
பார்தி ஏர்டெல்
இந்நிலையில் பார்தி ஏர்டெல் நிறுவனத்தில் பார்தி டெலிகாம் 41 சதவீத பங்குகளையும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 21.46 சதவீத பங்குகளையும், பொதுச் சந்தையில் 37 சதவீத பங்குகளும் உள்ளது.
இப்படி இருக்கும் நிலையில் பார்தி டெலிகாம் நிறுவனத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 4,900 கோடி ரூபாய் முதலீடு செய்யத் திட்டமிட்டு வருகின்றனர். இந்த முதலீட்டுக்கான ஒப்புதலை இந்த மாத இறுதிக்குள் தொலைத்தொடர்பு அமைச்சகம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
84 சதவீதம்
பார்தி ஏர்டெல் நிறுவனத்தில் தற்போது 43 சதவீத பங்குகள் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கையில் இருக்கும், பார்தி டெலிகாம் நிறுவனமும் வெளிநாட்டு நிறுவனமாக மாறும் பட்சத்தில் இந்நிறுவனத்தின் மொத்த அன்னிய முதலீட்டாளர்களின் பங்கீடு 84 சதவீதமாக உயரும் நிலை ஏற்படும்.
இந்த மாற்றத்தின் போது ஏர்டெல் நிறுவனத்தின் பங்கு மதிப்பு அதிகளவில் உயர வாய்ப்புகள் உள்ளது. மேலும் முதலீட்டாளர்களுக்கு அடுத்த 2 மாதங்களுக்கு ஏர்டெல் மீதான முதலீடு நல்ல லாபத்தைத் தரும்.