இந்திய டெலிகாம் துறைக்கு, இந்த குரு பெயர்ச்சி அத்தனை சிறப்பாக அமையவில்லை. கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து சண்டை சச்சரவுகள், அரசின் மூலம் வரும் ஸ்பெக்ட்ரம் கட்டண அழுத்தங்கள், நீதிமன்ற தீர்ப்புகள் என அனைத்து பக்கங்களில் இருந்தும் அடி வாங்கிக் கொண்டு இருக்கிறது.
இந்திய டெலிகாம் துறையில் பல பெரிய நிறுவனங்கள் களம் இறங்கி வேலை பார்த்துக் கொண்டிருந்த காலம் எல்லாம் மலையேறிவிட்டது. இப்போது ஜியோ, ஏர்டெல், வொடாபோன் ஐடியா என மூன்று நிறுவனங்கள் மட்டுமே இந்தியாவில் பெரிய அளவில் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
இந்த போட்டி, செப்டம்பர் 2016-ல் ஜியோ வருகைக்குப் பின் தீர்மானமே ஆகிவிட்டது. இப்போது இந்த மூன்று நிறுவனங்களில் ஜியோ தவிர மற்ற இரண்டு பேருமே கண்ணீர் விட்டு அழாத குறையாக நிறுவனத்தை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
ஏர்டெல் நஷ்டம்
பார்தி ஏர்டெல் நிறுவனத்தின், ஜூலை - செப்டம்பர் 2019 காலாண்டு முடிவுகள் இன்று வெளியானது. இந்த காலாண்டில் ஏர்டெல் நிறுவனம் 23,405 கோடி ரூபாய் நஷ்டமடைந்து இருப்பதாகச் சொல்லி இருக்கிறது ஏர்டெல் தரப்பு. சமீபத்தில் 92,000 கோடி பாக்கி கட்டணத்தை கட்டச் சொல்லி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது நமக்கு நினைவு இருக்கலாம். அந்த தீர்ப்பினால் தான் இவ்வளவு பெரிய நஷ்டம் என வருத்தப்பட்டு இருக்கிறார்கள் ஏர்டெல் தரப்பினர்கள்.
இது இல்லை என்றால்
ஒருவேளை உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு ஏர்டெல் போன்ற டெலிகாம் நிறுவனங்களுக்கு சாதகமாக வந்து இருந்தால், ஏர்டெல் நிறுவனம் இந்த காலாண்டில் லாபம் பார்த்து இருப்பார்களா..? என்று கேட்டால்... அப்போதும் நஷ்டம் தானாம். ஏர்டெல் நிறுவனத்துக்கு வந்த மொத்த வருமானத்தில், செய்த செலவுகள் மட்டும் கழித்தாலே சுமார் 1,123 கோடி ரூபாய் நஷ்டம் கண்டிருக்கிறதாம்.
சுருக்கமாக
ஏர்டெல் நிறுவனத்துக்கு கிடைத்த மொத்த வருமானத்தில், மேலே சொன்ன 28,000 கோடி ரூபாய் எதிர்பாராத செலவுகளைச் சேர்க்காமலேயே ஏர்டெல் நிறுவனம் 1,123 கோடி ரூபாய் நஷ்டம் தான் காட்டி இருக்கிறது. எனவே உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பின் ஏர்டெல் நஷ்டத்தைச் சந்திக்கிறது எனக் கருத வேண்டாம். ஆனால் இந்த தீர்ப்பினால் சுமார் 20 மடங்கு கூடுதல் நஷ்டத்தைச் சுமக்க வேண்டி இருக்கிறது.
கணக்கு பிணக்கு
மத்திய டெலிகாம் துறை ஒவ்வொரு டெலிகாம் நிறுவனத்தின் வருவாய்க்கு தகுந்தாற் போல, லைசென்ஸ் கட்டணம் மற்றும் ஸ்பெக்ட்ரத்துக்கும் கட்டணங்களை நிர்ணயிப்பார்கள். அப்படி கணக்கிடும் போது, நிறுவனங்கள் ஒரு மாதிரியும், அரசு டெலிகாம் துறை வேறு ஒரு மாதிரியும் கணக்கு செய்துவிட்டார்கள். அது தான் இந்த பிரச்னையில் அடி நாதமே..!
வருவாய் கணக்கு
டெலிகாம் நிறுவனங்கள் தங்களின் சரி செய்த தோராய வருவாய் (AGR - Adjusted Gross Revenue) அடிப்படையில் தான், மத்திய டெலிகாம் துறை ஒவ்வொரு நிறுவனத்துக்குமான லைசென்ஸ் கட்டணங்கள் மற்றும் ஸ்பெக்ட்ரம் கட்டணங்களை நிர்ணயிக்கிறார்கள். இப்போது இந்த சரிசெய்த தோராய வருவாய் (AGR - Adjusted Gross Revenue)-யில் எதை எல்லாம் சேர்த்துக் கொள்ள வேண்டும், எந்த வருமானத்தை எல்லாம் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்பதில் தான் சிக்கல்.
அரசு தரப்பு கணக்கு
மத்திய டெலிகாம் துறையோ, சரிசெய்த தோராய வருவாய் (AGR - Adjusted Gross Revenue) கணக்கீட்டில் டிவிடெண்டுகள், மொபைல் போன்களை விற்று வரும் வருமானம், ஸ்கிராப் பொருட்கள் விற்பனை மற்றும் வாடகை மூலம் வரும் வருமானம் என அனைத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டு தான் லைசன்ஸ் கட்டணம் மற்றும் ஸ்பெக்ட்ரம் கட்டணத்தை கணக்கிட வேண்டும். டெலிகாம் சேவையில் இருந்து வரும் வருமானத்தை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு கட்டணங்களை நிர்ணயிக்கக் கூடாது என வாதிட்டது.
நிறுவனங்கள் வாதம்
ஏர்டெல், வோடபோன் ஐடியா,போன்ற இந்திய டெலிகாம் நிறுவனங்களோ, தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் டெலிகாம் சேவை வழியாக கிடைக்கும் வருவாயை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டு லைசென்ஸ் கட்டணம் மற்றும் ஸ்பெக்ட்ரம் கட்டணங்களை கணக்கிட வேண்டும். மற்ற எந்த வருமானத்தையும் கூடுதலாக கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என வாதாடியது. இந்த வழக்கு சுமாராக கடந்த 14 ஆண்டுகளாக நடந்தது.
உச்ச நீதிமன்ற கணக்கு
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம், ஒரு பழைய டெலிகாம் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை மேற்கோள் காட்டி இருக்கிறது. கடந்த 2015-ம் ஆண்டில் மத்திய டெலிகாம் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பில் சரிசெய்த தோராய வருவாய் (AGR - Adjusted Gross Revenue)-யின் படி பார்த்தால், டெலிகாம் நிறுவனங்கள் வழங்கும் சேவை வழியாக வரும் வருமானம் போக, மற்ற சில வருமானங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே மத்திய டெலிகாம் துறை கணக்கிட்டு கோரியது போல, டெலிகாம் சேவை வருவாய் + மற்ற வருமானங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு கேட்கும் லைசென்ஸ் தொகை சரியே என தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள்.
நஷ்டம்
இப்போது மத்திய டெலிகாம் துறையின் கணக்கீட்டு முறை சரி என உச்ச நீதிமன்றம் சொல்லி இருப்பதால், இந்திய டெலிகாம் நிறுவனங்கள் செலுத்தாமல் பாக்கி வைத்திருக்கும் லைசென்ஸ் கட்டணம் + லைசென்ஸ் கட்டணங்களுக்கான வட்டி + அபராதம் + அபராதத்துக்கான வட்டி என அனைத்தையும் சேர்த்து செலுத்தச் சொல்லும் தொகை தான் 92,642 கோடி ரூபாய். இவ்வளவு பெரிய தொகையை செலுத்தச் சொன்னால் டெலிகாம் நிறுவனங்களுக்கு கடுமையான நஷ்டம் ஏற்படத் தானே செய்யும். அதைத் தான் இப்போது ஏர்டெல் நிறுவனம் கணக்கு காட்டி இருக்கிறது.
ஏர்டெல் தொகை
லைசென்ஸ் கட்டணம் 6,164 கோடி ரூபாய்
லைசென்ஸ் கட்டணத்துக்கான வட்டி 12,219 கோடி ரூபாய்
அபராதம் 3,760 கோடி ரூபாய்
அபராதம் மீதான வட்டி 6,307 கோடி ரூபாய் என மொத்தம் 28,450 கோடி ரூபாய், ஏர்டெல் நிறுவனம் மட்டும் செலுத்த வேண்டி இருக்கிறது. தற்போது இந்த தொகைக்கு தான் ப்ரொவிசன் செய்து 23,405 கோடி ரூபாய் நஷ்டம் என கண்ணீர் வடிக்கிறார்கள் ஏர்டெல் நிறுவனத்தினர்கள்.
இந்த காலாண்டு செயல்பாடு
இந்த செப்டம்பர் 2019 காலாண்டுடன், செப்டம்பர் 2018 ஒப்பிடும் போது ஏர்டெல் நிறுவனத்தின் மொத்த வருவாய் 4.9% அதிகரித்து இருக்கிறது. அதே போல எபிட்டா (EBITDA) 40.9% அதிகரித்து இருக்கிறது. ஆக முந்தைய காலாண்டை விட இந்த காலாண்டில் ஏர்டெல் சிறப்பாகவே செயல்பட்டும், லாபம் காட்ட முடியாமல் சிக்கிக் கொண்டதைப் பார்க்கும் போது நமக்கு கொஞ்சம் தொண்டை அடைக்கிறது.
இன்னும் இந்திய டெலிகாம் துறை என்ன மாதிரியான கொத்து பரோட்டாக்களை எல்லாம் சாப்பிட இருக்கிறதோ தெரியவில்லை..!