5 மாதங்களுக்கு முன்பாக ஏர்டெல் நிறுவனத்தின் ஆப்பிரிக்கா வர்த்தகம் லாபகரமானதா என்ற யோசனையிலிருந்த சுனில் மிட்டல், தற்போது ஆப்பிரிக்க வர்த்தகத்தில் புதிதாக முதலீடு செய்யத் தயாராகி வருகிறார்.
இந்திய டெலிகாம் சந்தையில் ஜியோவின் அறிமுகத்தாலும், அதன் ராக்கெட் வேக வளர்ச்சியாலும் கடுமையான வர்த்தகப் பாதிப்பை எதிர்கொண்டது ஏர்டெல். இதனால் இந்நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாப அளவீடுகள் எப்போது இல்லாத வகையில் தாறுமாறாகக் குறைந்தது. இந்திய வர்த்தகத்தை எப்படிக் காப்பாற்றுவது எனப் போராடிக்கொண்டு இருக்கும் இதே வேளையில் ஆப்பிரிக்கா வர்த்தகத்தை என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருந்தார் சுனில் மிட்டல்.
72 சதவீத வளர்ச்சி
ஏர்டெல் இந்தியாவில் டெலிகாம் சேவை அளிப்பது போல் ஆப்பிரிக்காவிலும் டெலிகாம் சேவையை நீண்ட நாட்களாக அளித்து வருகிறது. ஆனால் 5 மாதங்களுக்கு முன்பு பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வந்த ஏர்டெல் ஆப்பிரிக்கா வர்த்தகம் மீண்டும் நல்ல நிலைக்குத் திரும்பியுள்ளதாகத் தெரிகிறது.
ஏர்டெல் ஆப்பிரிக்கா வர்த்தகத்தின் 3வது காலாண்டு முடிவு வெளியான நிலையில், இதில் வரிக்கு முந்தைய லாப அளவீட்டில் 72 சதவீதம் வளர்ச்சி அடைந்து அதிர்ச்சிக்கொடுத்துள்ளது.
புதிய முதலீடுகள்
3வது காலாண்டில் வரிக்கு முந்தைய லாப அளவீட்டில் 72 சதவீதம் வளர்ச்சியை அடைந்ததைத் தொடர்ந்து ஏர்டெல் தனது ஆப்பிரிக்க வர்த்தகத்தில் 700 மில்லியன் டாலர் தொகையை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. இக்காலாண்டில் ஆப்பிரிக்கா வர்த்தகத்தில் மட்டும் சுமார் 900 மில்லியன் டாலர் வருவாயைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா Vs ஆப்பிரிக்கா
ஆப்பிரிக்காவில் 900 மில்லியன் டாலர் வருவாய் ஏர்டெல் பெற்றுள்ள நிலையில் இதை இந்தியாவுடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 4லில் ஒரு பங்கு தான். இதேபோல் இந்திய சந்தை பங்கு மதிப்பில் வெறும் 10 சதவீதம் தான் ஆப்பிரிக்காவின் மொத்த சந்தை மதிப்பு என Edelweiss தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர்
மார்ச் காலாண்டு முடிவில் ஆப்பிரிக்கா வர்த்தகத்தில் ஏர்டெல் நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை கடந்த ஒரு வருடத்தில் 1.9 மில்லியன் அதிகரித்துள்ளது. இதன் மூலம் கடந்த 3 காலாண்டுகளாக ஏர்டெல் நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை தொடர்ந்து 3 மில்லியனுக்கு மேல் உள்ளது.
பங்குச்சந்தையில் தோல்வி
ஏர்டெல் ஆப்பிரிக்கா நிறுவனம் லண்டன் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதத்தில் முதல் நாளிலேயே 16 சதவீதம் வரையில் சரிந்து முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது.
இது ஜியோவால் பாதிப்பைச் சந்தித்துக்கொண்டு இருக்கும் ஏர்டெல்-க்கு மோசமான காலமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆப்பிரிக்காவில் நாணய மதிப்பு குறைக்கப்பட்டதன் மூலம் ஏர்டெல் நிறுவனத்தின் வருவாய் கடந்த வருடம் 9 சதவீதம் சரிந்துள்ளது.
40 சதவீத அதிக வருமானம்
ஏர்டெல் இந்தியாவிலும் அதிக வாடிக்கையாளர்களும், ஆப்பிரிக்காவில் குறைந்த வாடிக்கையாளர்கள் கொண்டு வர்த்தகம் செய்து வந்தாலும் வாடிக்கையாளர்கள் சராசரி வருமானத்தில் ஆப்பிரிக்காவில் தான் அதிகமாக உள்ளது.
இந்திய வர்த்தகத்தில் இருந்து ஏர்டெல் ஒரு வாடிக்கையாளர்களுக்குச் சராசரியாக 154 ரூபாய் (ARPU) பெறும் நிலையில், ஆப்பிரிக்காவிலிருந்து 210 ரூபாய்ப் பெறுகிறது ஏர்டெல். இது இந்திய வாடிக்கையாளர் வருமானத்தைக் காட்டிலும் 40 சதவீதம் அதிகமாகும்.
இதுமட்டும் அல்லாமல் ஆப்பிரிக்காவில் ஏர்டெல் வளர்ச்சி அடைவதற்கான சாத்தியம் மிகவும் அதிகமாக உள்ளது எனவும் ஏர்டெல் நம்புகிறது.