ரிலையன்ஸ் ஜியோ கடந்த 2016-ம் ஆண்டு வந்ததில் இருந்து, இதுவரை இந்திய டெலிகாம் துறையில் இருக்கும் கம்பெனிகள் கண்ணீர் விடாத குறையாகத் தான் வியாபாரம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
அதில் ரிலையன்ஸ் ஜியோவுக்கு எதிராக கடுமையாக வியாபாரத்தில் போராடும் கம்பெனி, ஏர்டெல்.
இந்திய டெலிகாம் துறையை மொத்தமாக வளைக்கத் துடிக்கும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு, கடைசி வரை வழி விடாமல், மேலும் முதலீடு செய்து தன் வியாபாரத்தை செய்து கொண்டிருக்கிறாது ஏர்டெல்.
ARPU
Average Revenue Per User என ஆங்கிலத்தில் சொல்வார்கள். ஒரு வாடிக்கையாளர் மூலம் வரும் வருமானம் தான் இதன் பொருள். உதாரணமாக ஒரு கம்பெனிக்கு 100 வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் மூலம் கம்பெனிக்கு 800 ரூபாய் வருவாய் வருகிறது என்றால், 800 / 100 = 8 ரூபாய் தான் மேலே சொன்ன ARPU.
ஏர்டெல் டான்
இந்த ARPU விஷயத்தில் தான் ரிலையன்ஸ் ஜியோவை பின்னுக்குத் தள்ளி இருக்கிறது ஏர்டெல். டெலிகாம் துறையைப் பொருத்த வரை, அதிக வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்வதும், புதிய வாடிக்கையாளர்களை பிடிப்பதும் எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு இந்த ARPU கணக்கும் மிக முக்கியம்.
என்ன வேறுபாடு
கடந்த ஜனவரி - மார்ச் 2020 காலாண்டில் ஏர்டெல் நிறுவனத்தின் ARPU 154 ரூபாயைத் தொட்டு இருக்கிறது. ஆனால் ஜியோவின் ARPU 131 ரூபாயாகத் தான் அதிகரித்து இருக்கிறது. இந்த ARPU விஷயத்தில் ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோவை தூக்கிச் சாப்பிட்ட செய்தி, டெலிகாம் துறையில் மிகவும் பாசிட்டிவ் விஷயமாகப் பார்க்கிறார்களாம்.
வளர்ச்சி
செப்டம்பர் 2019 காலாண்டில் ஏர்டெல்லின் ARPU 128 ரூபாய், ஜியோவின் ARPU-வும் 128 ருபாய் தான். சமமாகத் தான் களத்தில் இறங்கி இருக்கிறார்கள். டிசம்பர் 2019 காலாண்டில் ஏர்டெல்லின் ARPU 135 ரூபாய், ஜியோவின் ARPU 128 ருபாய். இப்போது மார்ச் 2020 காலாண்டில் ஏர்டெல்லின் ARPU 154 ரூபாய், ஜியோவின் ARPU 131 ருபாய் தான்.
ஏர்டெல் ஃபோகஸ்
ஏர்டெல் கம்பெனி முன்பு ஒரு முறை பத்திரிகையாளர்கள் சந்திப்பில், தங்களுக்கு வருமானம் கொடுக்காத வாடிக்கையாளர்களைப் பற்றி கவலை இல்லை. பணம் கொடுத்து நல்ல தரமான சேவைகளை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்கள் தான் தேவை எனச் சொல்லி இருந்தார்கள். அதே போல அடுத்தடுத்த காலங்களில் தங்கள் கவனத்தை அதிகம் வருவாய் கொடுக்கும் வாடிக்கையாளர்கள் பக்கம் திருப்பி இன்று ஏர்டெல்லின் ARPU 154 ரூபாயைத் தொட்டு இருக்கிறது.
விலை ஏற்றம்
ஏர்டெல் நிறுவனத்தின், அதிக விலை கொண்ட டெலிகாம் சேவைகளை மக்கள் ஏற்றுக் கொண்டதாக, ஏர்டெல்லின் ARPU கணக்கு, நமக்கு தெளிவாக உணர்த்துகிறது. அதோடு வீட்டில் இருந்தே வேலை பார்ப்பது, கொரோனா காலத்தில் அதிகரித்து இருப்பதாலும், ஏர்டெல்லின் பிராட்பேண்ட் திட்டங்கள் அதிகம் விற்பனை ஆகி இருக்கிறதாம்.
வாழ்த்துக்கள்
சரி, எப்படி வியாபாரம் ஆனால் என்ன, ரிலையன்ஸ் ஜியோவை ARPU கணக்கில் முந்திய ஏர்டெல் நிறுவனத்துக்கு நம் வாழ்த்துக்கள். ஆனால் விரைவில் ரிலையன்ஸ் ஜியோவும், தன் ARPU-வை அதிகரிக்கும் வேலையில் இறங்கிவிடும் என்பதையும் இங்கு பதிவு செய்துவிடுவோம். ஆரோக்கியமான போட்டிக்கு வாழ்த்துக்கள்.