இந்தியாவில் ஏற்கனவே பல்வேறு நிறுவனங்கள் விமான சேவை செய்து வரும் நிலையில் நேற்று முதல் தனது சேவையை ஆகாசா ஏர் தொடங்கியுள்ளது
நேற்று ஆகாசா ஏர் விமான நிறுவனம் தனது முதல் சேவையாக மும்பை மற்றும் அகமதாபாத் இடையே விமானத்தை இயக்கி உள்ளது
முதல் விமானத்தில் பயணம் செய்த பயணிகள் தங்களது அனுபவங்களை பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்துள்ளனர்.
முதல் விமானம்
மும்பை-அகமதாபாத் வழித்தடத்திற்கு இடையே ஆகாசா ஏர் விமான நிறுவனத்தின் முதல் விமானத்தை நேற்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்யா எம் சிந்தியா மற்றும் இணை ஜெனரல் விஜய் குமார் சிங் (ஓய்வு) ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
ஆகாசா ஏர்
இந்தியாவின் புதிய விமான நிறுவனமான ஆகாசா ஏர், அகமதாபாத், பெங்களூரு, மும்பை மற்றும் கொச்சியில் ஆரம்ப நெட்வொர்க்குடன் தனது முதல் வணிக விமானங்களுக்கான டிக்கெட் முன்பதிவுகளை கடந்த ஜூலை 22ஆம் தேதி தொடங்கியது. முதல்கட்டமாக நேற்று முதல் அதாவது ஆகஸ்ட் 7 முதல் மும்பை மற்றும் அகமதாபாத் இடையே 28 வாராந்திர விமானங்களை இயக்க தொடங்கியுள்ளது.
பெங்களூரு- கொச்சி
இந்த விமான சேவையை தொடர்ந்து, ஆகஸ்ட் 13 முதல், பெங்களூரு மற்றும் கொச்சி இடையே கூடுதலாக 28 வாராந்திர விமானங்களை இயக்க தொடங்கும். இந்த விமானத்திற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது நடந்து வருகிறது.
நல்ல அனுபவம்
இதுகுறித்து ஆகாசா ஏர் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி வினய் துபே அவர்கள் கூறியபோது, 'எங்கள் விமானங்களை பொதுமக்கள் சேவைக்கு வழங்குவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நல்ல அனுபவத்தை வழங்குவோம் என்ற நம்பிக்கை உள்ளது. நம்பகமான நெட்வொர்க் மற்றும் மலிவு கட்டணங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை கொடுக்கும் என்றும், அவர்கள் எங்கள் விமான நிறுவனத்தில் பயணம் செய்தால் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன்" என்று கூறினார்.
பயணிகள் அனுபவம்
ஆகாசா ஏர் நிறுவனத்தின் முதல் விமானத்தில் பயணம் செய்வதில் மகிழ்ச்சி என்றும், விமானத்தில் நல்ல வசதிகள் மற்றும் குறைந்த கட்டணம் உள்ளது என்றும், தொடர்ந்து இந்த விமானத்தில் பயணம் செய்ய ஆர்வமாக உள்ளோம் என்று பலர் தெரிவித்தனர்.
முன்பதிவுகள்
ஆகாசா ஏர் விமானத்தில் பயணம் செய்ய மொபைல் செயலியிலும், www.akasaair.com என்ற இணையதளத்திலும் விமானங்களுக்கான முன்பதிவுகள் செய்யலாம் என ஆகாசா ஏர் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி வினய் துபே தெரிவித்துள்ளார்.
மெட்ரோவுக்கு அடுத்த நகரங்கள்
ஆகாசா ஏர் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை வணிக அதிகாரி பிரவீன் ஐயர் ஆரம்பவிழாவில் கலந்து கொண்டு பேசியபோது, 'ஆகாசா ஏர் நெட்வொர்க் இந்தியாவில் தனது வலுவான இடத்தை நிலைநிறுத்துவதில் கவனம் செலுத்துகிறது. நாடு முழுவதும் உள்ள மெட்ரோவுக்கு அடுத்தபடியான நகரங்களுக்கு இணைப்புகளை வழங்குவதிலும் கவனம் செலுத்துகிறது" என்று கூறினார்.
ஒரு புதிய துவக்கம்
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஜோதிராதித்யா எம், ஆகாசா ஏர் நிறுவனத்தின் முதல் விமான பயணம் இந்திய சிவில் விமான போக்குவரத்து சரித்திரத்தில் ஒரு புதிய துவக்கமாக இருக்கும் என்றும், பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தொலைநோக்குப் பார்வையும் அவரது பேரார்வமுமே இந்திய சிவில் விமான போக்குவரத்தில் ஜனநாயக மயமாக்கல் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்துள்ளது என்று அவர் கூறினார்.