இந்தியாவின் 2வது பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் பவுண்டேஷன் நிகழ்ச்சியில் கூறியது போலவே தனது 17 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தைத் தனது பிள்ளைகளான ஆகாஷ் அம்பானி, ஈஷா அம்பானி, ஆனந்த் அம்பானி கைகளுக்கு மாற்றப்படும் என அறிவித்தார்.
ஈஷா அம்பானியின் திருமணத்திற்குப் பின்பு முகேஷ் அம்பானி குடும்பக் கவுன்சில் அமைப்பது, கட்டுப்பாடுகள் விதிப்பது, யாருக்கு என்ன அதிகாரம், முகேஷ் அம்பானிக்கு ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் குழுமத்தில் என்ன எதிர்காலம் என்பது போன்ற பல விவாதங்கள் நடந்துள்ள நிலையில் தொடர்ந்து இதை மறுத்து வந்த முகேஷ் அம்பானி கடந்த ரிலையன்ஸ் பவுண்டேஷன் நாளில் வாரிசு கைகளுக்கு மாறுவதை உறுதி செய்தார்.
இதில் முதல் பால் தான் ஆகாஷ் அம்பானி.. அடுத்தது என்ன நடக்கும்..?
ஆகாஷ் அம்பானி
ரிலையன்ஸ் ஜியோ நிர்வாகம் ஆகாஷ் அம்பானி-யை சேர்மன் ஆக நியமிக்க அதன் நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளதாகச் செவ்வாய்க்கிழமை ரிலையன்ஸ் ஜியோ அறிவித்தது. இதன் மூலம் டெலிகாம் பிரிவின் ஆஸ்தான அதிகாரத்தை ஆகாஷ் அம்பானி பெற்றுள்ளார்.
முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இயக்குநர் (director) பதவியை ராஜினாமா செய்தாலும் ஜியோ பிளாட்பார்ம்ஸ் லிமிடெட்டின் சேர்மன் ஆகத் தொடர்ந்து இருப்பார். ஜியோ பிளாட்பார்ம்ஸ் லிமிடெட் என்பது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் டெலிகாம் மற்றும் டிஜிட்டல் சேவைகளின் தாய் நிறுவனம்.
ஈஷா அம்பானி
ஆகாஷ் அம்பானியை தொடர்ந்து அவருடைய ஓரே மகளும், பிராமல் குரூப் அஜய் பிராமல்-ன் மருமளுமான ஈஷா அம்பானி-க்கு ரிலையன்ஸ் ரீடைல் வர்த்தகத்தை ஒப்படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதேபோல் நேரடி நிர்வாக அதிகாரத்தை மட்டுமே முகேஷ் அம்பானி கொடுப்பார், தாய் நிறுவனத்தின் ஆஸ்தான அதிகாரத்தைத் தொடர்ந்து முகேஷ் அம்பானி மட்டுமே வைத்திருப்பார்.
ரிலையன்ஸ் ரீடைல் வென்சர்ஸ்
இதேவேளையில் ரிலையன்ஸ் ரீடைல் வென்சர்ஸ் லிமிடெட் மற்றும் ஜியோ பிளாட்பார்ம்ஸ் ஆகிய நிறுவனத்திலும் அக்டோபர் 2014 முதல் ஆகாஷ் அம்பானி மற்றும் ஈஷா அம்பானி நிர்வாகக் குழுவில் உள்ளனர். இதேவேளையில் 26 வயதான ஆனந்த் அம்பானி ரிலையன் ரீடைல் வென்சர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் DIRECTOR ஆக நியமிக்கப்பட்டார்.
முக்கியமான மே மாதம்
இந்த நிர்வாக மாற்றத்திற்காக மே மாதம் ஆகாஷ் அம்பானி, ஈஷா அம்பானி ஆகியோருக்கு தனி அலுவலகம் (தலைமை அலுவலகம்) அமைத்துத் தனக்குக் கீழ் தனி நிர்வாகக் குழுவை உருவாக்கித் தனிப்பட்ட முடிவுகளை எடுக்கும் பணிகளைத் துவங்கினர். இதற்காக ஆகாஷ் அம்பானி, ஈஷா அம்பானி ஆகியோர் தத்தம் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர்களை நியமித்தனர்.
ஆனந்த் அம்பானி நிலை என்ன
26 வயது மட்டுமே ஆகும் ஆனந்த் அம்பானி தற்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம் புதிதாகத் துவங்கியுள்ள நியூ எனர்ஜி வர்த்தகத்தின் நிர்வாகக் குழுவில் சேர்ந்துள்ளார், இதன் வாயிலாக உரிய நேரத்தில் இவருக்கும் உயர் பதவி கொடுக்கப்பட்டு நிர்வாகப் பொறுப்புக் கொடுக்கப்படும்.