சீனாவின் மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அலிபாபா குரூப் ஹோல்டிங் லிமிடெட், இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி சேவை தளமான சோமேட்டோ நிறுவனத்தில் 200 மில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை ஒரு பிளாக் டீல் மூலம் விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது என்று ராய்ட்டர்ஸ் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
வால் ஸ்ட்ரீட் தரகு நிறுவனமான மோர்கன் ஸ்டான்லி இந்த ஒப்பந்தத்தின் தரகராக இருக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பிளாக் டீல் வாயிலாக அலிபாபா சுமார் 3 சதவீதம் அளவிலான சோமேட்டோ பங்குகளை விற்பனை செய்ய உள்ளது.
இந்தப் பிளாக் டீல் புதன்கிழமை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அலிபாபா குழுமம்
அலிபாபா குழுமம் சோமேட்டோ பங்குகளை இன்றைய வர்த்தக முடிவின் விலையைக் காட்டிலும் 5-6 சதவீத தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் சோமேட்டோ பங்குகள் மும்பை பங்குச்சந்தையில் 1.32 சதவீதம் குறைந்து 63.55 ரூபாய்க்கு முடிந்தது.
சோமேட்டோ
செப்டம்பர் 30 நிலவரப்படி, சீனாவின் அலிபாபா குழுமம் சோமேட்டோ நிறுவனத்தில் சுமார் 12.98 சதவீத பங்குளை வைத்துள்ளது. தற்போது 3 சதவீத பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் மொத்த பங்கு இருப்பு 9.98 சதவீதமாகக் குறைய உள்ளது.
உபர் டெக்னாலஜிஸ்
அலிபாபா குழுமத்திற்கு முன்பு ஆகஸ்ட் மாதம், உபர் டெக்னாலஜிஸ், சோமேட்டோ நிறுவனத்தில் வைத்திருந்த அதன் 7.8% பங்குகளை 392 மில்லியன் டாலர்களுக்கு உள்நாட்டுச் சந்தையில் பிளாக் டீல் மூலம் விற்பனை செய்தது.
லாக்-இன்-பீரியட் முடிந்தது
ஜூன் 23, 2022 முதல் சோமோட்டோ நிறுவன பங்குகள் மீது இருந்த ஒரு வருட லாக்-இன்-பீரியட் இந்நிறுவனத்தின் ஐபிஓ வெளியாவதற்கு முன்பு முதலீடு செய்த பங்குதாரர்களுக்கு முடிகிறது. இந்த ஒரு வருட காலம் முடிந்த பின்பு சோமேட்டோ பங்குகளைப் பல முதலீட்டாளர்கள் விற்பனை செய்த நிலையில் தற்போது அலிபாபா குழுமமும் விற்பனை செய்துள்ளது.
157.95 ரூபாய் உச்ச விலை
சோமேட்டோ நிறுவனம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் தேதி ஒரு பங்கு 76 ரூபாய் என்ற வெளியீட்டு விலையில் ஐபிஓ மூலம் 9,375 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைத் திரட்டியது. 2021 நவம்பரில் இந்தப் பங்கு 157.95 ரூபாய் என்ற சாதனையை எட்டியது.
சரிவு
ஆனால் சோமேட்டோ பங்குகள் இந்த உயர்வை தாக்கு பிடிக்க முடியாமல் உலகளாவிய தொழில்நுட்பப் பங்குகள் விற்பனைக்கு மத்தியில் சோமேட்டோ பங்குகள் அதிகளவிலான சரிவை எட்டியுள்ளது. 2022 ஆம் ஆண்டில் மட்டும் சோமேட்டோ பங்குகள் 55.04 சதவீதம் சரிந்து 63.55 ரூபாய் அளவில் உள்ளது.
தீபேந்தர் கோயல்
தீபேந்தர் கோயல் தலைமையிலான சோமேட்டோ நிறுவனத்தில் வெறும் 2 வார காலத்தில் அதன் இணை நிறுவனர் உட்பட 3 உயர் அதிகாரிகள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளியேறிய நிலையில். டெக்னாலஜி, ப்ராடெக்ட், மார்கெட்டிங் என அனைத்து முக்கியக் கார்ப்பரேட் நிர்வாகப் பிரிவில் இருந்து 3%ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
3% ஊழியர்கள் பணிநீக்கம்
சோமேட்டோ நிறுவனத்தில் தற்போது 3800 ஊழியர்கள் உள்ளனர், இதில் 100- 120 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப்பட உள்ளது. சோமேட்டோ நிறுவனம் கொரோனா காலத்தில் அதாவது மே மாதம் 2020ல் சுமார் 13 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது. இதில் 520 பேர் தங்களது பணியை இழந்தனர்.