ஒரு சிறுமியின் உயிரை காப்பாற்றிய அமேசான் ஊழியர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் நடந்த விபத்தை பற்றி தனது பதிவில் பிரதிக் சலுங்கே என்ற ட்விட்டர் பயனாளர் ஒருவர் கூறியுள்ளார்.
விபத்துக்குள்ளாகவிருந்த 12 வயது சிறுமி அவளின் பள்ளியில் இருந்த இரும்பு கேட்டில் விளையாடிக் கொண்டிருந்ததாகவும், திடீரென இரும்பு கேட்டானது தளர்வடைந்த நிலையில், அதன் ஒரு பகுதி அவளது கன்னத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தியது. அவளின் வலது கண்ணும் அடிப்பட்டதாக கூறப்படுகின்றது.
இரும்புத் துண்டினை தாங்கி பிடித்த அமேசான் ஊழியர்
அந்த வழியாக சென்ற ரவி என்ற அமேசான் ஊழியர் ஒருவர், அந்த பள்ளி காவலரின் அலறல் சத்தத்தினையும் சிறுமியின் அழுகையும் கேட்டு உதவ விரைந்துள்ளார். மேற்கொண்டு ரத்தம் வெளியேறாமல் இருக்கவும், மேற்கொண்டு காயம் அதிகரிக்காமல் இருக்கவும் இரும்பு துண்டினை தாங்கி பிடித்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. அந்த இரும்பு துண்டினை மற்றவர்கள் உதவிக்கு வரும் வரையில் 30 நிமிடங்கள் வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
மருத்துவ உதவி
இதற்கிடையில் சிறுமிக்கு அருகிலுள்ள வசந்த் விஹார் மருத்துமனையின் மருத்துவர் மற்றும் செவிலியர்கள் உதவி செய்ய விரைந்துள்ளனர். அவர்கள் அந்த இரும்பு துண்டினை வெட்டி எடுத்து, அவளை மீட்டுள்ளனர் என்றும் ட்விட்டர் பதிவில் அந்த பயனர் தெரிவித்துள்ளார். அதோடு மேல் சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாகவும் பதிவிட்டுள்ளார்.
உலோகத் துண்டுகள் அகற்றம்
சிறுமிக்கு தற்போது எந்த பிரச்சனையும் இல்லை. அவர் நலமுடன் இருக்கிறார். அவர் முகத்தில் இருந்த உலோகத் துண்டுகள் அகற்றப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. மருத்துவமனை நிர்வாகம் அவர்கள் பங்கிற்கு இந்த மருத்துவ சேவைக்கு எந்த கட்டணமும் வசூலிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
நினைத்து கூட பார்க்க முடியவில்லை
கடந்த ஒரு வருடமாக அமேசானில் பணி புரிந்து வரும் ரவி, இது எனது வாழ்க்கையில் மிக பயங்கரமான ஒரு அனுபவம். எனக்கும் இரண்டரை வயதில் ஒரு மகள் இருக்கிறாள், அவளுக்கு இப்படி நடந்திருந்தால் நான் செய்திருப்பேன். என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை என கூறியுள்ளார்.
ரவிக்கு உதவ வேண்டும்?
இந்த நிலையில் ட்விட்டர் பயனர்கள் பலரும் ரவியின் செயலை பாராட்டி அவருக்கு அமேசான் இந்தியா உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். டெலிவரி ஏஜெண்டின் விரைவான நடவடிக்கையால், சிறுமியின் உயிரை காப்பாற்றியதற்கு அவருக்கு உதவ வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
குவியும் பாராட்டுகள்
ரவியின் இந்த செயலை பாராட்டு ட்விட்டரில் பலரும் தங்களது பாராட்டு மழையினை பொழிந்து வருகின்றனர். ட்விட்டர் பயனர் ஒருவர் ரவி நீங்கள் தான் ரியல் ஹீரோ. இதனை பகிர்ந்து கொள்வதில் நாங்கள் பெருமை கொள்கிறோம் என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
என்ன நடவடிக்கை
இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து தானே முனிசிபல் கார்ப்பரேஷன் விசாரணையை தொடங்கியுள்ளது. இது ஒரு மோசமான சம்பவம். பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு என்பது மிக முக்கியமானது. ஆக பள்ளிக்கு உடனடியாக அறிக்கை அனுப்புமாறும், அலட்சியம் காட்டினால் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டிஎம்சி கூடுதல் ஆணையர் சந்தீப் மால்வி தெரிவித்துள்ளார்.