இந்தியாவின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான அமேசான் தனது Flex திட்டத்தை நாட்டின் 35 நகரங்களுக்கு விரிவாக்கம் செய்கிறது. இத்திட்டத்தின் மூலம் ஒருவர் அமேசானிடம் இருந்து பொருட்களை டெலிவரி செய்து ஒவ்வொரு மணிநேரத்திற்கும் பணம் சம்பாதிக்க முடியும்.
Amazon Flex appல் பைக் வைத்துள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் பதிவு செய்து, தங்களது விருப்பமான நேரத்தில் பொருட்களை டெலிவரி செய்ய முடியும். டெலிவரி செய்யப்படும் பொருட்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அமேசான் அனைவரின் பின்புலத்தைச் செக் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. BackGround செக் செய்த பின்பு அனைவருக்கும் பயிற்சி கொடுக்கப்படும்.
இப்புதிய திட்டத்தில் கீழ் வேலைக்குச் சேர்வோர் மணிக்கு 120 ரூபாய் முதல் 140 ரூபாய் வரையில் சம்பாதிக்க முடியும் என அமேசான் தெரிவித்துள்ளது. இது அமெரிக்க மதிப்பில் வெறும் 2 டாலர்.
வெற்றி
ஜூன் 2019இல் இந்தியாவில் 3 நகரங்களில் சோதனை திட்டமாகப் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் தற்போது அதாவது ஒரு வருட இடைவெளியில் நாட்டின் 35 நகரங்களில் இந்தச் சேவையை விரிவாக்கம் செய்துள்ளது.
அமேசானின் இந்தச் சேவை மாணவர்கள், வீட்டில் இருக்கும் பெண்கள், முழு நேர பணிக்குப் பின் கூடுதல் வருமானம் பெற நினைப்பவர்கள் எனப் பலருக்கும் இத்திட்டம் உதவும்.
7வது நாடு
அமேசான் உலகில் பல நாடுகளில் வர்த்தகம் செய்து வரும் நிலையில், Flex திட்டத்தை அனைத்து நாடுகளிலும் நடைமுறையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. உலகில் 7வது நாடாக இந்தியாவைத் தேர்வு செய்து அமேசான் இச்சேவை அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
50,000 பேருக்கு வேலை
இப்புதிய திட்டத்தின் கீழ் இந்தியாவில் தனது டெலிவரி நெட்வோர்க்-ல் 50,000க்கும் அதிகமானோரை பணியில் அமர்த்த உள்ளதாக அமேசான் மே மாதம் தெரிவித்தது. இத்திட்டத்தின் மூலம் மிகவும் குறைந்த செலவில் தனது டெலிவரி நெட்வொர்க்-ஐ மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய உள்ளது அமேசான்.
இதேற்கு இணையாக அமேசான் தற்போது மளிகை பொருட்கள், உணவு டெலிவரி சேவை எனப் பல பிரிவில் இறங்கியுள்ளது.
சம்பளம்
இந்தியாவில் ஒரு மணிநேரத்திற்கு வெறும் 120 முதல் 140 ரூபாய் (2 டாலர்) மட்டுமே கொடுக்கும் அமேசான் அமெரிக்காவில் கடந்த ஜூன் மாதம் செய்த ஒரு ஆய்வில் இதே Flex திட்டத்தின் கீழ் ஒருவர் 46 பேக்கேஜ்-ஐ 3.5 மணிநேரத்தில் டெலிவரி செய்ததிற்கு 105 டாலர் சம்பாதித்துள்ளார். ஆனால் டோல், பெட்ரோல் அனைத்தும் போக அவருக்குக் கிடைத்தது 70 டாலர்.
இந்நிலையில் இந்தியாவில் கொடுக்கப்படும் தொகையின் அளவு மிகவும் குறைவு.