இந்த பாழாய் போன கொரோனா வைரஸால் ஒவ்வொரு நாளும், ஒட்டு மொத்த உலகமும் கூடுதல் பதட்டம் அடைந்து கொண்டு இருக்கிறது.
ஏற்கனவே இந்தியாவில் கொரோனா பரவலைத் தடுக்க, பல்வேறு நிறுவனங்கள் வீட்டில் இருந்த படியே தான் வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.
வீட்டில் இருந்தே வேலை பார்த்தாலும், சில்லறை வியாபாரத்தை ஓரளவுக்காவது சுழலச் செய்து கொண்டு இருந்தவைகள் இந்த இ காமர்ஸ் நிறுவனங்கள் தான்.
ஹோம் டெலிவரி
மளிகை சாமான், தொடங்கி வீட்டில் இருந்த படியே வேலை பார்க்கத் தேவையான அனைத்து பொருட்களையும், ஆர்டர் செய்து, ஒரு சில நாட்களில், நாம் வெளியே போகாமல், நம் வீடு தேடி வந்து கொடுத்துக் கொண்டிருந்தவர்கள், அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற இ காமர்ஸ் நிறுவனங்கள் தான். கொரோனா பரவல் நேரத்தில் இவர்கள் சேவை மிகவும் அத்தியாவசியமாகிப் போனது என்றால் அது மிகை இல்லை.
அத்தியாவசியப் பொருட்கள்
ஆனால் இப்போது இந்தியாவில், இன்று அதிகாலை 12 மணி முதல் அடுத்த 21 நாட்களுக்கு ஒட்டு மொத்த தேசமும் ஷட் டவுன் செய்யப்படுவதாகச் சொன்னார் நம் பிரதமர் நரேந்திர மோடி. இருப்பினும், பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர், மின்சாரம், மளிகைக் கடைகள், மருத்துவமனைகள், மருந்துக் கடைகள், பால் கடைகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை விற்கும் கடைகள் இருக்கும் எனச் சொல்லி இருக்கிறார்கள்.
முடியாதுங்க
இந்த நேரத்தில், அமேசான் இந்தியா ஒரு அதிரடி முடிவைஎடுத்து இருக்கிறது. அமேசான் தற்காலிகமாக அத்தியாவசியம் இல்லாத பொருட்களுக்கான, ஆர்டர்களை எடுப்பதை நிறுத்த இருக்கிறார்களாம். முழுமையாக மக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கான பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க இருக்கிறார்களாம். இதை அமேசான் நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் அமேசான் இந்தியாவின் தலைவர் அமித் அகர்வால் உறுதி செய்து இருக்கிறார்.
முந்தைய ஆர்டர்கள்
இந்த கட்டுப்பாட்டுகள் வருவதற்கு முன்பே அத்தியாவசியம் இல்லாத பொருட்களுக்கு ஆர்டர் கொடுத்து இருந்தால், அவைகளை ரத்து செய்து ரீஃபண்ட் பெற்றுக் கொள்ளலாம் எனவும் சொல்லி இருக்கிறார்கள். அமேசான் தன்னிடம் இருக்கும் டெலிவரி வசதிகளை உணவுப் பொருட்கள், மருந்துகள், சுகாதாரம் சார்ந்த பொருட்கள் போன்றவைகளை டெலிவரி செய்ய முழுமையாக பயன்படுத்த இருக்கிறார்களாம்.
ஃப்ளிப்கார்ட்
அமேசானாவது பரவாயில்லை, செயல்பாட்டில் தான் இருக்கிறது. ஆனால் ஃப்ளிப்கார்ட் நிறுவனமோ தன் செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தி இருக்கிறார்களாம். இந்த செய்தியை ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் வலைதளமும் உறுதி செய்கின்றன. கடந்த சில வாரங்களாக கொஞ்சமாவது சில்லறை வியாபாரத்தை தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்த இ காமர்ஸ் நிறுவனங்களே இப்படி செய்தால், பொருளாதாரம் என்னத்துக்கு ஆவது.