2022ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியின் டைட்டில் ஸ்பான்சர்-ஐ டாடா மிக முக்கியமான வர்த்தகத் திட்டத்துடன் கைப்பற்றிய நிலையில், ஐபிஎல் போட்டியில் கூடுதலாக 2 புதிய அணிகள் சேர்க்கப்பட்டு 10 அணிகளுக்கான போட்டியாளர்களைச் சேர்வு செய்யும் ஐபிஎல் ஏலமும் முடிந்துவிட்ட நிலையில், தற்போது அடுத்த முக்கியமான திட்டத்தைக் கைப்பற்ற முக்கியமான நிறுவனங்கள் போட்டிப்போடக் களத்தில் இறங்கியுள்ளது.
ஐபிஎல் போட்டிகள்
ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பும் 5 ஆண்டுத் திட்டம் இந்த ஆண்டு ஏலத்திற்கு வருகிறது, ஒருபக்கம் 10 அணிகள், அதிகப் போட்டிகள், அதிகப்படியான வீரர்கள், இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடக்கும் காரணத்தால் மிகப்பெரிய வர்த்தகத்தை அடைய முடியும்.
5 ஆண்டுத் திட்டம்
இவ்வளவு பெரிய வாய்ப்பை யாருக்கு தான் கைவிட மனசு வரும், அந்த வகையில் இந்த 5 ஆண்டு ஐபிஎல் ஓளிப்பரப்புத் திட்டத்தைக் கைப்பற்ற ஏற்கனவே இப்பிரிவு போட்டியில் இருக்கும் சோனி மற்றும் ஸ்டார் -டிஸ்னி நிறுவனங்கள் இருக்கும் நிலையில், புதிதாக அமேசான் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் களத்தில் இறங்கியுள்ளதால் போட்டி தாறுமாறாக அதிகரித்துள்ளது.
ரிலையன்ஸ் - அமேசான்
ஒருபக்கம் பியூச்சர் ரீடைல் வர்த்தகத்தைப் பெற ரிலையன்ஸ் - அமேசான் அடித்துக்கொள்ளும் நிலையில், ஸ்போர்ட்ஸ் எண்டர்டெயின்மென்ட் பிரிவில் மிகப்பெரிய அளவில் இறங்க வேண்டும் என்பதற்காக அமேசான் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் களத்தில் இறங்கியுள்ளது.
50,000 கோடி ரூபாய்
ஐபிஎல் போட்டிகளின் 5 ஆண்டு ஒளிபரப்பு ஒப்பந்தத்தை கைப்பற்ற 4 நிறுவனங்கள் தற்போது களத்தில் இருக்கும் காரணத்தால் ஏலத்தில் கடுமையான போட்டி இருக்கும் என்றும், இதன் மூலம் குறைந்தபட்சம் 50,000 கோடி ரூபாய்க்கு இந்த ஒளிபரப்பு ஒப்பந்தம் ஏலம் போகும் என்றும் கணிக்கப்பட்டு உள்ளது.
டாடா
இந்த வருடம் ஐபிஎல் அணிகள், போட்டிகள் மட்டும் அல்லாமல் ஐபிஎல் சார்ந்த வர்த்தகமும் மிகவும் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முக்கியச் சான்று 2022 ஐபிஎல் போட்டியின் டைட்டில் ஸ்பான்சர் ஆக டாடா வென்றது தான்.
அமேசான் - ரிலையன்ஸ் - டிஸ்னி
மேலும் இந்த ஐபிஎல் ஒளிபரப்பு ஒப்பந்தத்தைப் பெற அமேசான் தனது ப்ரைம் தளத்தையும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது வாய்காம் 18 நிறுவனத்தையும் தயார் செய்து உள்ளது.
இவ்விரு நிறுவனங்களால் கட்டாயம் டிஸ்னி ஹாட்ஸ்டார்-க்கு இணையாக இந்திய மக்களும், உலக நாடுகளில் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்களுக்கும் சேவை அளிக்க முடியும் என நம்பப்படுகிறது.
அமேசான்
ஆனால் அமேசான்-க்கு ஒரு பிரச்சனையும், அதேவகையில் ஒரு நன்மையும் உள்ளது. சோனி, டிஸ்னி, ரிலையன்ஸ்-க்கு டிவி சேனல்கள் இருக்கும் வேளையில் அமேசானுக்கு டிவி சேனல் இல்லை. இதேவேளையில் பிற நிறுவனங்களிடம் இல்லாத வகையில் அமேசான் ப்ரைம் சேவை மூலம் உலகம் முழவதும் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்த ஐபிஎல் போட்டிகளின் நேரடி ஒளிபரப்பை எவ்விதமான தடையுமின்றி மிகவும் எளிதாகக் கொண்டு சேர்க்க முடியும், இது அமேசானின் பலம். இதனால் இந்த 5 வருட ஐபிஎல் போட்டிக்கான ஒளிபரப்பு ஏலத்தில் யார் வெற்றிபெறுவார்கள் என்பது கேள்வியாகவே உள்ளது.