உலகிலேயே அதிகமாக கச்சா எண்ணெய் வளம் இருக்கும் நாடு எது என்று கேட்டால் வெனிசுலாவைக் காட்டலாம். அந்த அளவுக்கு இயற்கை வளம் கொட்டிக் கிடக்கிறது.
இருப்பினும் அமெரிக்காவின் கெடுபிடியால் நாடே இருளில் மிதந்து கொண்டு இருக்கிறது. Petróleos de Venezuela, S.A என்கிற நிறுவனத்தைப் பற்றிக் கேள்விப் பட்டு இருக்கிறீர்களா..?
இது தான் வெனிசுலா நாட்டின் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கம்பெனி. இந்த அரசு கம்பெனியிடம் இருந்து இந்தியாவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உட்பட, உலகின் பல்வேறு பெரிய எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெய் வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.
அமெரிக்க சண்டை
கடந்த ஆண்டின் தொடக்கத்தில், வெனிசுலா நாட்டின் அதிபர் நிகோலஸ் மடுரோவை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்கிற நோக்கில், இந்த Petróleos de Venezuela, S.A நிறுவனத்திடம் யாரும் எண்ணெய் வாங்கக் கூடாது என அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. இதனால் வெனிசுலாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி சரிந்தது.
இரண்டாவது தடை
வெனிசுலா நாட்டின் எண்ணெய் வியாபாரத்தை மேலும் குறைக்க, கடந்த ஆகஸ்ட் 2019-ல், அமெரிக்கா மீண்டும் சில பொருளாதார தடைகளை விதிப்பதாகச் சொன்னது. ஆனால் இந்த பொருளாதார தடை அமெரிக்கா எதிர்பார்த்த அளவுக்கு பலன் கொடுக்கவில்லை.
பொருளாதாரத் தடை விளக்கம்
ரிலையன்ஸ் உட்பட பல தனியார் எண்ணெய் நிறுவனங்களும், அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடையை தங்கள் போக்கில் விளக்கம் (Interpretate) கொடுத்துக் கொண்டார்கள். அந்த விளக்கங்களினால், தனியார் எண்ணெய் நிறுவனங்கள், கடந்த அக்டோபர் முதல் வெனிசுலாவோடு எண்ணெய் வியாபாரத்தில் ஈடுபட முடிந்தது.
எண்ணெய் நிறுவனங்கள்
தங்கள் நாட்டின் எண்ணெய் வியாபாரத்தைச் சமாளிக்க சுமார் 1 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்யை தினமும், ரிலையன்ஸ் உட்பட பல தனியார் எண்ணெய் நிறுவனங்களுக்கு விற்கத் தொடங்கியது வெனிசுலா. எனவே அமெரிக்கா நினைத்தது போல வெனிசுலாவை முழுமையாக முடக்க முடியவில்லை. கோவப்பட்டது அமெரிக்கா.
எச்சரிக்கை
சமீபத்தில், தனியார் நிறுவனங்களான இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ரஷ்யாவின் ராஸ் நெஃப்ட் (Rosneft), ஸ்பெயின் நாட்டின் ரெப்சால் (Repsol), அமெரிக்காவின் செவ்ரான் (Chevron) போன்ற எண்ணெய் நிறுவனங்களை "வெனிசுலா விவகாரத்தில் ஜாக்கிரதையாக இருங்கள்" என நேரடியாக எச்சரித்து இருக்கிறது அமெரிக்கா.
ஏன் இந்த எச்சரிக்கை
தன் பொருளாதார தடையை மீறி இந்த நிறுவனங்கள் எல்லாம் வெனிசுலா உடன் எண்ணெய் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக அமெரிக்காவுக்கு ஒரு கோபம். அதோடு இந்த தனியார் கம்பெனிகள் ஒரு இடைத் தரகர்களைப் போல செயல்பட்டு, வெனிசுலாவின் கச்சா எண்ணெய்யை மற்ற நாடுகளுக்கு விற்றுவிடுகிறார்களோ என்றும் சந்தேகம் எழுந்து இருக்கலாம் போலத் தோன்றுகிறது. எனவே தான் ஒரு ஓப்பன் எச்சரிகை விடுத்து இருக்கிறது அமெரிக்கா.
சீரியஸ்
வெனிசுலா நாட்டின் எண்ணெய்யை அதிகம் வாங்கும் தனியார் நிறுவனங்களில் ரிலையன்ஸும் ஒன்று என்பதால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இந்த எச்சரிக்கையை கொஞ்சம் சீரியஸாகவே கையாண்டு இருக்கிறது. அதோடு உடனடியாக, அமெரிக்காவின் எச்சரிக்கைக்கு ஒரு தெளிவான பதிலும் சொல்லி இருக்கிறது. அந்த பதில்கள் பின் வருமாறு...
ரிலையன்ஸ் விளக்கம்
"வெனிசுலா விவகாரம் பற்றி தொடர்ந்து அமெரிக்கா உடன் பேசிக் கொண்டு தான் இருக்கிறோம். அமெரிக்காவின் பொருளாதார தடை விதிகள் படி, வெனிசுலாவின் கச்சா எண்ணெய்க்கு பதிலாக, எரி பொருளை (Processed Fuel) கொடுத்துக் கொண்டு இருக்கிறோம். இது பொருளாதார தடை விதிகளில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறது" என ரிலையன்ஸ் வெனிசுலா நாடுடன் வியாபாரம் செய்வதற்கு காரணம் சொல்லி இருக்கிறது.
இல்லவே இல்லை
அதோடு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், வெனிசுலா நாட்டில் இருந்து வாங்கும் அனைத்து கச்சா எண்ணெய்யுமே சுத்திகரிப்பு வேலைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது எனவும் தெளிவுபடுத்தி இருக்கிறது. ஆக ரிலையன்ஸ் வெனிசுலா நாட்டில் இருந்து வாங்கும் கச்சா எண்ணெய்யை மற்ற நாடுகளுக்கு ஒரு இடைத் தரகராக இருந்து விற்கவில்லை என தெளிவுபடுத்தி இருக்கிறது.