அமெரிக்கன் ஏர்லைன்ஸ் மற்றும் இண்டிகோ ஆகியவை codeshare என்று கூறப்படும் குறியீடு பகிர்வு ஒப்பந்தத்தை தொடங்கியுள்ளது.
இதன் காரணமாக டெல்லி-பெங்களூரு மற்றும் டெல்லி-மும்பை வழித்தடங்களில் இயக்கப்படும் விமானங்களில் இருக்கைகளை பகிர அனுமதிக்கிறது என்றும் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் மற்றும் இண்டிகோ ஆகியவை எதிர்காலத்தில் இந்தியாவில் மும்பை, பெங்களூரு ஆகிய இடங்களை தவிர மற்ற நகரங்களையும் இணைக்கும் ஒப்பந்தத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளன என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்கன் ஏர்லைன்ஸ்
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் தற்போது நியூயார்க்-டெல்லி வழித்தடத்தில் மட்டுமே விமானங்களை இயக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இண்டிகோ
இந்த ஒப்பந்தம் இந்தியாவில் உள்ள இண்டிகோவின் உள்நாட்டு வழித்தடங்களில் அமெரிக்க ஏர்லைன்ஸை அனுமதிக்கும். நியூயார்க் - டெல்லி விமான சேவை ஜனவரி 4 அன்று தொடங்குவதால் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
புதிய கூட்டாளி
அமெரிக்கன் தலைமை வருவாய் அதிகாரி வாசு ராஜா இதுகுறித்து கூறியபோது, 'இண்டிகோவை இந்தியாவில் எங்கள் நம்பகமான கூட்டாளியாக சேர்க்க நாங்கள் ஆர்வமாக உள்ளோம் என்றும், எங்கள் வாடிக்கையாளர்கள் வணிகத்திற்காகவும், சுற்றுலாவுக்காகவும், பயணம் செய்யும் நிலையில் இந்த புதிய ஒப்பந்தம் இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் சென்றடைவதை எளிதாக்குகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
29 புதிய வழித்தடங்கள்
இந்த ஒப்பந்தத்தின் விளைவாக இந்தியாவில் உள்ள 29 புதிய வழித்தடங்களுக்கு சேவை செய்ய இருக்கின்றோம் என்றும், இது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் என நாங்கள் நம்புகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் நம்பர் 1 விமான நிறுவனம்
இந்தியாவின் நம்பர் 1 விமான நிறுவனமாக உள்ள இண்டிகோ நிறுவனம், 66 உள்நாட்டு விமான வழித்தடங்கள், 24 சர்வதேச வழித்தடங்கள் என 90 வழித்தடங்களில் விமான சேவையை வழங்குகிறது.
ஏர் இந்தியா
இண்டிகோவை தொடர்ந்து ஏர் இந்தியா, கோஏர் நிறுவனங்கள் அதிக வழித்தடங்களில் விமான சேவையை வழங்கி வருகின்றன.
கொரோனா
கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக விமான போக்குவரத்து பெரும் அளவில் பாதிக்கப்பட்டு வந்தது. இப்போது அதிலிருந்து மீண்டு இந்தியாவில் விமான போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது என தரவுகள் கூறுகின்றன.
இந்தியா
இந்தியாவில் விமான போக்குவரத்தை பயன்படுத்துவது வேகமாக அதிகரித்து வருகிறது. இருந்தாலும் விமான எரிபொருள் கட்டணம் அதிகம் என்பதால் இந்திய விமான நிறுவனங்கள் நட்டத்தில் இயங்கி வருவதாக கூறப்படுகிறது.
ஜெட் ஏர்வேஸ்
கடன் பிரச்சனையால் 2019-ம் ஆண்டு முதல் விமான சேவையை நிறுத்தி வைத்து இருந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் விரைவில் மீண்டும் விமான சேவையை தொடங்க உள்ளது.
ஆகாசா ஏர்
விரைவில் ஆகாசா ஏர் என்ற விமான நிறுவனமும் இந்தியாவில் பயணிகள் விமான சேவையை வழங்க உள்ளது. அதற்கான அனுமதிகள் கிடைக்கப்பட்டுள்ளதால் விரைவில் சேவை தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.