மனிதர்களாய் பிறந்த எல்லோருக்குமே பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் தவிர்க்க முடியாதவை.
பால், தயிர், மோர், வெண்ணெய், நெய், சீஸ், பன்னீர் என லிஸ்டை அடுக்கலாம். சாதாரணமாக பால் விலை அதிகரித்தாலே வரிசையாக இந்த பால் சார் பொருட்களின் விலையும் அதிகரிக்கத் தொடங்கிவிடும். மிக முக்கியமாக கடைகளில் டீ மற்றும் காபி விலையும் அதிகரிக்கும்.
கடந்த ஆகஸ்ட் 2019-ல் தான் தமிழகத்தில் ஆவின் பால் விலையை அதிகரித்தார்கள். அதனைத் தொடர்ந்து இப்போது மதர் டைரி மற்றும் அமூல் நிறுவனங்கள், தங்கள் பாலின் விலையை அதிகரித்து இருக்கிறார்கள்.
குஜராத் கூட்டுறவு பால் சந்தை சம்மேளனம் தான் அமூல் என்கிற பிராண்ட் பெயரில் தங்கள் பாலை விற்பனை செய்து வருகிறது. நாளை (டிசம்பர் 15, 2019, ஞாயிற்றுக்கிழமை) முதல் அமூல் பாலின் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாய் அதிகரிக்க இருக்கிறதாம்.
அமூல் கோல்ட் ரக பாலின் விலை 500 மில்லி லிட்டர் பாக்கெட் 28 ரூபாய்க்கும், அமூல் தாசா ரக பாலின் விலை 50 மில்லி லிட்டர் பாக்கெட் 22 ரூபாய்கும் விற்க இருக்கிறார்களாம். ஆனால் அமூல் சக்தி ரக பாலின் விலை 50 மில்லி லிட்டர் பாக்கெட் எந்த விலை மாற்றமும் இன்றி 25 ரூபாய்க்கே விற்பனை செய்யப் போகிறார்களாம்.
குஜராத் கூட்டுறவு பால் சந்தை சம்மேளனம் (அமூல்), கடந்த நான்கு ஆண்டுகளில் ஒரு லிட்டர் பாலுக்கு நான்கு ரூபாய் வரை மட்டுமே விலையை அதிகரித்து இருக்கிறார்களாம்.
பால் வாடிக்கையாளர்கள் கொடுக்கும் பணத்தில் 80 சதவிகிதம், பால் உற்பத்தி செய்பவர்களுக்கே சென்றுவிடும், அது தான் குஜராத் கூட்டுறவு பால் சந்தை சம்மேளனம் (அமூல்) நிறுவனத்தின் கொள்கை எனவும் சொல்லி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது ஏன் பால் விலையை அதிகரித்து இருக்கிறீர்கள் என்கிற கேள்விக்கு, பால் உற்பத்தி சார்ந்த பல்வேறு பொருட்களின் விலை அதிகரித்து விட்டதாகச் சொல்லி இருக்கிறார்கள். குறிப்பாக மாட்டுத் தீவனத்தின் விலை சுமார் 35 சதவிகிதம் அதிகரித்து இருப்பதாகவும் சொல்கிறார்கள். எனவே தான் பால் விலையை அதிகரித்து இருக்கிறார்களாம்.