இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான மஹிந்திரா குழுமம் 10 வருடத்திற்கு முன் இருசக்கர வாகன தயாரிப்பு மற்றும் விற்பனை இறங்கியதே தன் நிர்வாகம் செய்த மிகப்பெரிய தவறாக மஹிந்திரா & மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார்.
துவக்கமும் தோல்வியும்
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா குழுமம் ஜூலை 2008ஆம் ஆண்டுக் கைனடிக் மோட்டார்ஸ் நிறுவனத்தை வாங்கியது இதன் வாயிலாகத் தான் இருசக்கர வாகன தயாரிப்பிலும் விற்பனையிலும் இறங்கியது மஹிந்திரா குழுமம்.
கைனடிக் மோட்டார்ஸ் நிறுவனத்தை வாங்கிய மஹிந்திரா Freedom பைக்குகளை மோஜோ எனப் பெயர் மாற்றம் செய்து களத்தில் குதித்தது. 10 வருடம் ஆகியும் இன்னமும் இரு சக்கர வாகன பிரிவில் மஹிந்திராவால் பெரிய அளவிலான வெற்றியை அடைய முடியவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.
ஆதிக்கம்
இந்திய இரு சக்கர வாகன சந்தை ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் ஜப்பானின் ஹோண்டா நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி கிட்டதட்ட 3இல் 2 பங்கு சந்தையைத் தன்னகத்தே வைத்துள்ளது. வருடத்திற்கு 2 கோடி வாகனங்களை விற்பனை ஆகும் இந்திய சந்தையில் இந்நிறுவனங்களின் ஆதிக்கம் விவரிக்க முடியாத ஒன்று.
மஹிந்திராவின் விற்பனை
ஆனால் மஹிந்திரா 2019ஆம் நிதியாண்டில் வெறும் 4,004 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இது 2018ஆம் நிதியாண்டை ஒப்பிடுகையில் கிட்டதட்ட 73 சதவீதம் குறைவாகும்.
மஹிந்திராவிற்குப் பின்னால் இருக்கும் ஓரே நிறுவனம் kawasaki மோட்டார்ஸ் நிறுவனம் தான். இந்நிறுவனம் 3,115 வாகனங்களை மட்டும் 2019ஆம் நிதியாண்டில் விற்பனை செய்துள்ளது.
இந்திய விற்பனை சந்தை
மார்ச் 2019 வரையிலான காலம் வரையில் இந்தியாவில் சுமார் 2.12 கோடி இரு சக்கர வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இது கடந்த நிதியாண்டை விடவும் 4.86 சதவீதம் அதிகமாகும்.
தோல்வி
இருசக்கர வாகன துறையில் இறங்கியதன் மூலம் product failure என்பதை எதிர்கொண்டேன். ஆனால் இந்தியாவில் ப்ரீமியம் இரு சக்கர வாகன துறையில் எப்படி நுழைய வேண்டும் என்பதை இந்தத் தோல்வியின் மூலம் தெளிவாகக் கற்றுக்கொண்டேன் என ஆனந்த் மஹிந்திரா தெரிவித்தார்.
ஜாவா
இந்த அனுபவத்தின் வாயிலாகத் தான் மஹிந்திரா ஒரு வருடத்திற்கு முன்பு CULT பைக் வகைகளில் ஒன்றான ஜாவா பைக்குகளை இந்தியாவில் அறிமுகம் செய்து வெற்றி கண்டுள்ளது. சொல்லப்போனால் ஜாவா அறிவித்துள்ள 3 பைக்குகளும் வெற்றி தான்.
இதே பாணியில் மஹிந்திரா சில மாதங்களுக்கு முன்பு கைப்பற்றிய BSA பைக்குகளையும் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.
இனி வெற்றி பாதை தான்
ஜாவா மற்றும் BSA வாகனங்களை அறிமுகம் செய்வதன் மூலம் இரு சக்கர வாகன விற்பனையிலும் மஹிந்திரா வெற்றி பெறும் என ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார்.