இந்தியாவின் பிரபல தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திரா அவ்வப்போது தனது டுவிட்டர் பக்கத்தில் இளம் திறமையாளர்களை கண்டறிந்து அவர்களின் திறமைகளை பாராட்டி போற்றி வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்.
மேலும் பல இளம் திறமையாளர்களுக்கு அவர் நிதி உதவி செய்துள்ளார் என்பதும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஒரே நேரத்தில் 15 பிரபல தலைவர்களின் புகைப்படங்களை வரைந்த ஓவியர் ஒருவருக்கு தன்னால் முடிந்த உதவியை செய்ய காத்திருப்பதாக ஆனந்த மஹிந்திரா தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
ஓவியர்கள்
பொதுவாக ஓவியர்கள் ஒரே நேரத்தில் ஒரு புகைப்படத்தை வரைவார்கள். ஒரு சிலர் மிகுந்த திறமை அதிகம் இருந்தால் இரண்டு கைகளிலும் இரண்டு வெவ்வேறு ஓவியங்களை வரைவார்கள் என்பதை பார்த்திருக்கிறோம். ஆனால் நூர்ஜகான் என்ற இளம்பெண் ஒரே நேரத்தில் 15 உருவப் படங்களை வரைந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆனந்த் மஹிந்திரா ட்விட்
இது குறித்து தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் 'அவர் ஒரு அதிசயம் என்றும், இது எப்படி சாத்தியம் என்று தெரியவில்லை என்றும், இவ்வளவு திறமையான ஒரு கலைஞரை போற்றிப் பாராட்ட வேண்டும் என்றும் அவரது திறமையை யாராவது உறுதி செய்தால் அவருக்கு நிதி உதவி செய்ய நான் தயாராக இருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
நூர்ஜகான்
இதுகுறித்து ஓவியர் நூர்ஜகான் கூறிய போது ஒரு யூடியூப் வீடியோவில் நான் சாதனை செய்வதற்காக ஓவியங்களை வரைந்தேன் என்றும் அந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருப்பது என்றும் கூறினார்.
ஒரே நேரத்தில் 15 ஓவியங்கள்
நான் சிறுவயதில் இருந்தே ஓவியங்களை வரைவதில் ஆர்வம் உள்ளவர் என்றும் சிறு குச்சிகள், பேனாக்கள் ஆகியவற்றின் உதவியுடன் ஒரே நேரத்தில் பதினைந்து ஓவியங்களை எப்படி வரையலாம் என்பதை கண்டுபிடித்தேன் என்றும் கூறியுள்ளார்.
ஆதரவு - எதிர்ப்பு
ஆனால் இந்த ஓவியத்தின் வீடியோ குறித்து ட்விட்டரில் பலர் தங்களது நம்பிக்கையின்மையை தெரிவித்துள்ளனர். இந்த ஓவியம் நம்பகத்தன்மையுடன் இல்லை என்றும் கீழே உலோக தகடுகளை வைத்துக் கொண்டு மேலே அவர் பேனாவால் மட்டும் வரைந்து கொண்டிருக்கிறார் என்றும் இது போலியான வீடியோ என்றும் தெரிவித்துள்ளனர். ஆனால் அதே நேரத்தில் இது ஒரு தந்திரமாக இருந்தாலும் ஒரே நேரத்தில் 15 ஓவியங்களை வரைவது என்பது அசாத்தியம் என்றும் அவரது உழைப்புக்கு நிச்சயம் நான் பாராட்டு தெரிவிக்க வேண்டும் என்றும் ஒரு சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.