இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக இருந்த அனில் அம்பானியின் மொத்த சொத்து மதிப்பு இன்று ஜீரோ-வாக உள்ளது. அதீத கடன், தொடர் வர்த்தகச் சரிவு, இதனால் அடுத்தடுத்து பிற துறை வர்த்தகமும் பாதிப்பு என அனில் அம்பானியின் வர்த்தகச் சாம்ராஜ்ஜியம் மொத்தமாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
இந்த நிலையில் இந்தியாவின் 3 முக்கிய வங்கிகள் அனில் அம்பானியின் டெலிகாம் வர்த்தகத்தைச் சேர்ந்த 3 நிறுவன கணக்குகளை மோசடி கணக்குகளாக அறிவித்துள்ளது.
3 வங்கிகளின் அறிவிப்பு
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் கணக்கை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, யூனியன் பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகிய 3 வங்கிகள் பிராடு அதாவது மோசடி கணக்குகளாக அறிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து எஸ்பிஐ மற்றும் யூனியன் பாங்க் ஆப் வங்கி ஆகிய இரு வங்கிகள் ரிலையன்ஸ் டெலிகாம் கணக்குகளையும், ரிலையன்ஸ் இன்பராடெல் நிறுவன கணக்கை எஸ்பிஐ வங்கியும் மோசடி கணக்குகளாக அறிவித்துள்ளது
டெல்லி உயர் நீதிமன்றம்
இந்நிலையில் டெல்லி உயர் நீதிமன்றம், யூனியன் வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிகளை ரிலையன்ஸ் நிறுவன கணக்குகளை மோசடி கணக்குகளாக அறிவிக்கும் முடிவை ஜனவரி 13ஆம் தேதி நடைபெறும் விசாரணை வரையில் ஒத்திவைக்கத் தெரிவித்துள்ளது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்
சமீபத்தில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், "சமூக வலைத்தளத்தில் ஆர்காம் நிறுவனம் இந்திய வங்கிகளும், நிதி நிறுவனங்களுக்கும் சுமார் 86,188 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இது முற்றிலும் தவறானது" என்று விளக்கம் கொடுத்துள்ளது.
26,000 கோடி ரூபாய்
ஆர்காம் நிறுவனம் பெற்ற கடனை வசூலிக்க அமைக்கப்பட்டு இருக்கும் தீர்வு குழு தேசிய நிறுவன தீர்ப்பாயத்திடம் சமர்பித்த அறிக்கையின் படி ரிலையன்ஸ் கம்யூனிகேஷ்னஸ் சுமார் 26,000 கோடி ரூபாயை இந்திய வங்கிகளும், நிதி நிறுவனங்களுக்கும் செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
70 சதவீதம் மட்டுமே கிடைக்கும்
ஆர்காம் செலுத்த வேண்டிய 26,000 கோடி ரூபாய் கடனில் சுமார் 70 சதவீதம் அளவிலான கடனை திரும்பப் பெற முடியும் எனத் தீர்வு குழு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது வங்கிகள் ஆர்காம் கணக்குகளை மோசடி கணக்குகளாக அறிவித்துள்ள நிலையில், இந்நிறுவனத்திற்கான தீர்வு திட்டத்தைச் செயல்படுத்துவது மிகவும் கடினமாக உள்ளது.
1,15,025 கோடி ரூபாய் கடன்
இந்நிலையில் பிஸ்னஸ் இன்சைடர் செய்த ஆய்வுகளின் படி ரிலையன்ஸ் கம்யூனியூகேஷன்ஸ் 49,193 கோடி ரூபாயும், ரிலையன்ஸ் டெலிகாம் 24,306.27 கோடி ரூபாயும், ரிலையன்ஸ் இன்பராடெல் 12,687.65 கோடி ரூபாய் என மொத்தம் 86,188 கோடி ரூபாய் கடனை அனில் அம்பானி இந்திய வங்கிகளுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
இந்த 86,188 கோடி ரூபாய் கடனில் ஆர்காம் நிறுவனம் செலுத்த வேண்டிய ஸ்பெக்ட்ரம் நிலுவை கட்டணமான 28,837 கோடி ரூபாய் சேர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் சேர்த்தால் 1,15,025 கோடி ரூபாய்.
விஜய் மல்லையா மற்றும் நீரவ் மோடி
விஜய் மல்லையா இந்திய வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய 9000 கோடி ரூபாய் கடனையும், வைர வியாபாரியான நீரவ் மோடி செலுத்த வேண்டிய 7,407.07 கோடி ரூபாயைக் கடனையும் ஒப்பிட்டால் அனில் அம்பானி செலுத்த வேண்டிய 86,188 கோடி ரூபாய் கடன் நிலுவை 10 மடங்கு அதிகமாக இந்திய வங்கிகளுக்குச் செலுத்த வேண்டும்.
இதில் அரசுக்குச் செலுத்த வேண்டிய ஸ்பெக்ட்ரம் நிலுவை கட்டணமான 28,837 கோடி ரூபாயை மறந்துவிடக் கூடாது.