அனில் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இன்பராஸ்ட்ரக்சர் நிறுவனம் 4 வருடத்திற்கு முன்பு டெல்லி மெட்ரோ அமைப்பிற்கு எதிராகத் தொடுத்த வழக்கில், உச்ச நீதிமன்ற பென்ச் ரிலையன்ஸ் இன்பரா நிறுவனத்திற்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கியது.
ரிலையன்ஸ் இன்பரா நிறுவனம்
ரிலையன்ஸ் இன்பரா நிறுவனத்திற்குச் சாதகமாகத் தீர்ப்பு வந்துள்ளது மட்டும் அல்லாமல் நடுவர் நீதிமன்றம் வட்டியுடன் சேர்த்து மொத்தம் 630 மில்லியன் டாலர் அதாவது 4,660 கோடி ரூபாய் அளவிலான தொகையைக் கொடுக்க உத்தரவிட்டு உள்ளதாக ரிலையன்ஸ் இன்பரா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
டெல்லி மெட்ரோ அமைப்புடன் ஒப்பந்தம்
இந்தியாவில் முதல் முறையாக அரசு ரயிலை தனியார் நிறுவனம் இயக்கும் மிக முக்கியமான திட்டத்தை அனில் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இன்பராஸ்ட்ரக்சர் நிறுவனத்தின் ஒரு பிரிவு 2008ஆம் ஆண்டு டெல்லி மெட்ரோ அமைப்புடன் இணைந்து 2038ஆம் ஆண்டு வரையில் செய்தது.
2012ல் பிரச்சனைகள் வெடித்தது
இந்தப் பணிகளில் கட்டண விதிப்புப் பிரச்சனை மற்றும் ஆப்ரேஷன் பிரச்சனை ஆகியவற்றின் மூலம் 2012ல் டெல்லி மெட்ரோ மற்றும் ரிலையன்ஸ் இன்பரா நிறுவனத்திற்கு மத்தியில் பிரச்சனை வெடித்தது.
அனில் அம்பானி
இதன் பின்பு அனில் அம்பானியில் ரிலையன்ஸ் இன்பராஸ்ட்ரக்சர் நிறுவனம் டெல்லி விமான நிலைய மெட்ரோ திட்டத்தை நிறுத்திவிட்டு வழக்குத் தொடுத்தது. இந்த வழக்கில் டெல்லி மெட்ரோ அமைப்பு ஒப்பந்த விதிமுறைகளை மீறுவதாக அறிவித்து, ஒப்பந்த முறிவு தொகையை அளிக்கக் கோரிக்கை விடுத்து ரிலையன்ஸ் இன்பரா வழக்குத் தொடுத்தது.
4,660 கோடி ரூபாய்
2017ல் தொடுக்கப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்புத் தற்போது வந்துள்ளது, இந்தத் தீர்ப்பு ரிலையன்ஸ் இன்பரா நிறுவனத்திற்குச் சாதகமாக வந்துள்ள காரணத்தால் டெல்லி மெட்ரோ அமைப்புத் தற்போது வட்டியுடன் சேர்த்து சுமார் 4,660 கோடி ரூபாய் கொடுக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
டெலிகாம் நிறுவனங்கள் திவால்
அனில் அம்பானியின் டெலிகாம் நிறுவனங்கள் திவாலாகிக் கிடக்கும் நேரத்திலும், நாட்டின் மிகப்பெரிய வங்கி அனில் அம்பானி மீது நொடித்து வழக்குப் போட்டு உள்ள நிலையில் இந்தத் தொகை அனில் அம்பானிக்கும் ரிலையன்ஸ் குழுமத்திற்கு மிகப்பெரிய அளவில் பயனுள்ளதாக இருக்கும்.
டெல்லி மெட்ரோ வழக்கின் தீர்ப்பு
டெல்லி மெட்ரோ வழக்கின் தீர்ப்பு அனில் அம்பானிக்கும், ரிலையன்ஸ் இன்பரா நிறுவனத்திற்கும் சாதகமாக வந்துள்ள வேளையில் இந்நிறுவன பங்குகள் அதிகப்படியான 5 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.
ரிலையன்ஸ் இன்பரா திட்டம் என்ன
தற்போது டெல்லி மெட்ரோ மூலம் கிடைக்கும் 4,660 கோடி ரூபாய் தொகையை ரிலையன்ஸ் கடனை அடைக்கவும், நீதிமன்றத்தில் வாதாடிய வழக்கறிஞருக்கும், திவாலாகிக் கிடக்கும் நிறுவனங்களை வங்கி பிடியில் இருந்து காப்பாற்றவும் பயன்படுத்தப்பட உள்ளது. மேலும் இவ்வழக்கின் முழுமையான தீர்ப்பு இன்னும் வெளியாகவில்லை, தற்போது வெளியான தகவல் அனைத்தும் ரிலையன்ஸ் தரப்பில் இருந்து வெளியான தகவல் படி கூறப்பட்டு உள்ளது.
ரிலையன்ஸ் இன்பரா பங்குகள்
இன்றைய வர்த்தகத்தில் ரிலையன்ஸ் இன்பரா பங்குகள் 4.95 சதவீதம் வரையில் உயர்ந்து ஒரு பங்கு விலை 74.15 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. இதனால் நீண்ட காலமாகச் சரிவில் இருந்த பங்குகள் இந்தத் தீர்ப்பின் மூலம் அதிகப்படியான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.