இந்தியாவில் சிறுபான்மையினர் குறிவைத்து நடக்கும் சம்பவங்கள் மூலம் நாட்டின் நீண்ட கால வளர்ச்சிக்கும், முதலீட்டுக்கும், குறிப்பாக அன்னிய முதலீட்டில் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தும் என ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரான ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ஜஹாங்கிர்புரி சம்பவம் நாட்டு மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியிருக்கும் இந்த நிலையில், இதுபோன்ற செயல்கள் நாட்டின் எதிர்காலத்திற்குப் பாதிப்பு என ரகுராம் ராஜன் எச்சரித்துள்ளார்.
anti-minority முகம்
இந்தியாவில் சிறுபான்மை மக்களைக் குறிவைத்து அரசும், அரசு அமைப்புகளும் எடுக்கும் நடவடிக்கைகள் இந்திய பொருட்களுக்கான வர்த்தக இழப்பு ஏற்படுவது மட்டும் அல்லாமல் இந்தியாவில் இந்த anti-minority முகம் வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதிலும் பெரும் பிரச்சனையாக இருக்கும். மேலும் இந்தியா நம்பகத்தன்மையற்ற கூட்டணி நாடாகவும் உலகளவில் பார்க்கப்படும் என ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரான ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
ரகுராம் ராஜன்
இந்தியா வலிமையான வளர்ச்சி பாதையில் பயணிக்க வேண்டிய நிலையில், நாட்டின் அடிப்படையான ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மை போன்றவற்றில் பாதிப்பு ஏற்படுவது இந்தியாவுக்குத் தான் பெரிய இழப்பு எனச் சிகாகோவின் பூத் ஸ்கூல் ஆஃப் பிசினஸின் பேராசிரியராக இருக்கும் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக
ஜனநாயகம் அடிப்படையில் இந்தியாவில் அனைத்துத் தரப்பு மக்களையும் ஒரே மனநிலையில் நடத்தினால் கட்டாயம் சர்வதேச சந்தையில் இந்தியா மீதும், இந்திய தயாரிப்புகள் மீது மதிப்பு அதிகரிக்கும். இதனால் தானாக இந்தியாவின் வர்த்தகம் உலக நாடுகளில் அதிகரிக்கும்.
முக்கியத் துறைகள்
இந்திய தற்போது ஐடி, சேவை, பார்மா எனப் பல துறையில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து ஆதிக்கம் செய்து வருகிறது. இந்த நிலையில் இதுபோன்ற Anti-minority முகம் இந்திய நிறுவனங்களைப் பாதிப்பதை மட்டும் அல்லாமல் புதிய வர்த்தகம் பெறுவதில் கடினமாகும்.
நட்பு நாடுகள்
இதுமட்டும் அல்லாமல் உலக நாடுகள் தங்களது நட்பு நாடுகளை ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மை போன்றவற்றை முக்கியக் காரணியாக கொண்டு தான் முடிவு செய்கிறது. சமீபத்தில் இதற்கு உதாரணமாக சீனா - உய்கர் முதல் தாலிபான்கள் வரையில் பலவற்றைக் குறிப்பிட முடியும் என ரகுராம் ராஜன் டெல்லி சம்பவத்தை சுட்டிக்காட்டி பதில் அளித்துள்ளார்.
டெல்லி சம்பவம்
டெல்லியில் ஜஹாங்கிர்புரி பகுதியில் அனுமன் ஜெயந்தியின் போது இந்துக்கள் - இஸ்லாமியர்கள் இடையே மோசமான கலவரம் ஏற்பட்டது. வன்முறையைத் தொடர்ந்து அப்பகுதியில் ஆக்கிரமிப்பு நிலங்களில் கட்டப்பட்டு இருக்கும் கலவரக்காரர்களின் வீடுகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஆக்கிரமிப்பு இடங்களை இடிக்க 14 குழு, 9 புல்டோசர், 1500 போலீசார் ஈடுபட்ட நிலையில் உச்சநீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது.
ஜஹாங்கிர்புரி
ஜஹாங்கிர்புரி ஆக்கிரமிப்புக் கட்டடங்களை இடிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்து , 2 மணிநேரத்திற்குப் பின்பு ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நிறுத்தப்பட்டது. டெல்லி வடக்கு மாநகராட்சியின் அதிகாரம் என்பது பாஜகவிடம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம் மக்கள்
இதனால் ஜஹாங்கிர்புரி பகுதியில் வாழும் முஸ்லிம் மக்களைக் குறிவைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் முதல் சாமானிய மக்கள் வரையில் விமர்சனம் செய்து வருகின்றன.