டெல்லி: பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது கொண்டுவரப்பட்ட 2000 ரூபாய் தாள்களை அரசு திரும்ப பெற போவதாக அரசல் புரசலாக பேசப்பட்டு வந்த நிலையில், நிச்சயம் அப்படி திட்டம் இல்லை. ஆக மக்கள் அது குறித்து கவலை பட வேண்டாம் என்றும் மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
கடந்த செவ்வாய்கிழமையன்று மக்களவையில், சமாஜ் வாதிக் கட்சியின் எம்பி விஷம்பர் பிரசாத் நிஷாத் பேசுகையில், 2,000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்தே, கறுப்பு பணப்புழக்கம் அதிகரித்துள்ளது.
ஆக மத்திய அரசு விரைவில் இந்த 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறலாம். அதோடு மீண்டும் 1000 ரூபாய் நோட்டுகளைவெளியிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் மக்கள் மத்தியில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நிஷாத் தெரிவித்துள்ளார்.
எந்த திட்டமும் இல்லை
இதற்கு பதில் கூறிய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர், பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து இன்றளவிலும் மக்கள் மனதில் பயம் இருந்து வருகிறது. ஆனால் மக்கள் யாரும் இதற்காக கவலை படத் தேவையில்லை. மேலும் மத்திய அரசுக்கு 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறும் எண்ணமும் இல்லை. அதே நேரம் திரும்ப பெறப்பட்ட 1000 ரூபாய் நோட்டுகளை திரும்பவும் புழக்கத்திற்கு கொண்டு வரும் திட்டமும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை
கடந்த நவம்பர்,8ம் தேதி 2016ல் மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையானது ஒட்டுமொத்த தேசத்தையும் ஆட்டிபடைத்தது. இதற்கு முக்கிய காரணம் பிரதமர் மோடி அறிவித்த 1000 ரூபாய், மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்பது தான். அந்த நேரத்தில் தங்களிடம் உள்ள பணத்தை மாற்ற மக்கள் இங்கும் அங்கும் அலை மோதியது மறக்க முடியாததொரு சம்பவம். ஆனால் இதனால் பெரும்பகுதி கறுப்பு பணம் முடக்கப்பட்டதாகவும் அரசு தரப்பில் கூறப்பட்டது.
கறுப்பு பணத்தை முடக்குவதே எங்கள் நோக்கம்
ஒரு புறம் தங்கள் கையில் வைத்திருக்கும் பணத்தை கையில் வைத்துக் கொண்டு அன்றாட செலவுக்கே இல்லாமல் திண்டாடிய மக்கள் ஒரு புறம். மறுபுறம் மத்திய அரசோ இந்த பணமதிப்பிழப்பின் நோக்கமோ கறுப்பு பணத்தை வெளியேற்றுவது தான். இதன் மூலம் கள்ளப் பணத்தை ஒழிப்பது, பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதற்கு நிதியளிப்பது, முறையற்ற பொருளாதாரத்தை முறையான பொருளாதாரமாக மாற்றுதல் போன்றவற்றை தடுக்கத்தான் என்றும் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை
இது தவிர இந்தியாவைப் குறைந்த பணப் பொருளாதாரமாக மாற்றுவதற்காகவும், டிஜிட்டல் மயமாக்குவதற்கும் ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கும் என்றும் தாக்கூர் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த சில வருடங்களாகவே டிஜிட்டல் பண பரிமாற்றம் பெருகி வந்துள்ளது. 2017-18-ம் ஆண்டில் டிஜிட்டல் பண பரிமாற்றத்தின் மதிப்பு ரூ.2,071 கோடியாக இருந்தது. 2018-19-ம் ஆண்டில் இது ரூ.3,134 கோடியாக உயர்ந்துள்ளது. இது சுமார் 51 சதவிகித வளர்ச்சியாகும் என்றும் தாக்கூர் கூறியுள்ளார்.
புழக்கத்தில் உள்ள நோட்டுகள்
கடந்த நவம்பர் 4, 2016ம் ஆண்டு நிலவரப்படி, புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு 17,74,187 கோடி ரூபாயாகும். எனினும் இது 2019 டிசம்பர் 2ம் தேதி நிலவரப்படி 22,35,648 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. 2014 அக்டோபர் முதல் 2016 அக்டோபர் வரையில் புழக்கத்தில் இருக்கும் நோட்டுகளின் மதிப்பு 14.51 சதவிகித வளர்ச்சியும் கண்டுள்ளது. இதே வளர்ச்சி விகிதத்தில் பார்த்தால் டிசம்பர் 2ம் தேதியில் நோட்டுகளின் மதிப்பு 25,40,253 கோடி ரூபாயாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அதைவிடக் குறைவான மதிப்பிலான நோட்டுகள்தான் புழக்கத்தில் உள்ளன என்றார் அனுராக் தாகூர்.


Click it and Unblock the Notifications