சென்னை உள்பட இந்தியாவின் பல நகரங்களில் செயல்பட்டு வரும் அப்பல்லோ மருத்துவமனை தற்போது குருகிராமிலும் காலடி எடுத்து வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அப்போலோ ஹாஸ்பிடல் என்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனம் (ஏஹெச்இஎல்) குருகிராமில் உள்ள மருத்துவமனை ஒன்றை ரூ.450 கோடி மதிப்பில் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து குருகிராமில் அப்பல்லோ தனது சேவையை விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அப்போலோ ஹாஸ்பிடல்
அப்போலோ ஹாஸ்பிடல் என்டர்பிரைசஸ் லிமிடெட் குருகிராமில் சுமார் 7 லட்சம் சதுர அடிக்கு மேல் உள்ள மருத்துவமனையை விலைக்கு வாங்கியுள்ளது. ரூ.450 கோடி மதிப்புள்ள இந்த மருத்துவமனையில் 650 படுக்கைகள் கொண்டதாக இருக்கும் என்றும் இந்த மருத்துவமனையை நயாட்டி ஹெல்த்கேர் அண்ட் ரிசர்ச் என்சிஆர் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திடம் இருந்து அப்பல்லோ வாங்கியதாகவும் கூறப்படுகிறது.
ஹரியானாவிலும் அப்பல்லோ
இதனையடுத்து அப்போலோ நிறுவனம் தற்போது ஹரியானா மாநிலத்தில் தனது சேவையை தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்று குருகிராம் என்பதும் இங்கு அப்பல்லோ மருத்துவமனையின் வருகை அந்நகருக்கு மேலும் மருத்துவ வசதியை அதிகப்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
குருகிராமில் அப்பல்லோ
குருகிராமில் மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில் அப்போலோ மருத்துவமனை போன்ற வசதியான, தரமான மருத்துவ வசதி கொண்ட மருத்துவமனை கண்டிப்பாக தேவை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். குருமிராமில் உள்ள கோல்ஃப் சாலையில் அமைந்துள்ள இந்த சுகாதார வளாகம் அப்பல்லோ கைக்கு தற்போது வந்துள்ளது.
உலக தரத்தில் மருத்துவம்
இதுகுறித்து அப்பல்லோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'குருகிராமில் அமையவுள்ள அப்பல்லோ மருத்துவமனை, டிஜிட்டல் ஹெல்த்கேர், ஹெல்த்கேர் ஸ்டார்ட்-அப்களில் முன்னேற்றங்களை அடைவதற்கான மையமாக இருக்கும் என்றும், நாட்டின் சுகாதார சுற்றுச்சூழல் அமைப்பிற்கு பங்களிக்கும் என்றும் தெரிவித்துள்ளது. உலகத் தரம் வாய்ந்த மருத்துவத்தை நோக்கி நாட்டையும் ஹரியானா மாநிலத்தையும் கொண்டு செல்ல அப்பல்லோ முயற்சிக்கும் என்றும் கூறியுள்ளது.
5.63 ஏக்கர் நிலப்பரப்பு
5.63 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்து இருக்கும் குருகிராம் அப்பல்லோ மருத்துவமனையில் 650 படுக்கை வசதிகள் இருக்கும் என்றும் சிறந்த மருத்துவ திட்டங்கள், சிறப்பு மையங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் ஆகியவை இந்த மருத்துவமனையில் பயன்படுத்தபடும் என்றும் நகரவாசிகளுக்கு மட்டுமின்றி இந்த பகுதியில் உள்ள கிராமவாசிகளுக்கும் இந்த மருத்துவமனை மிகச்சிறந்த ஒன்றாகும் என்றும் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறந்த சுற்றுச்சூழல்
இது குறித்து அவர் மருத்துவமனை குழுமத்தின் தலைவர் பிரதாப் ரெட்டி அவர்கள் கூறியபோது, 'அப்போலோ மருத்துவமனையின் சிறந்த சுற்றுச்சூழல் அமைப்பு, சிறந்த மருத்துவ தரம் ஆகிய அம்சங்கள் குருகிராமிலும் கொண்டு வர நாங்கள் உறுதிபூண்டுள்ளோம் மேலும் ஹரியானா குடிமக்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் நல்வாழ்வு எங்களுக்கு மிக முக்கியம் என்று தெரிவித்துள்ளார்.