ஆப்பிள் நிறுவனத்துக்கு பெரிய அறிமுகம் தேவை இல்லை. மசால் வடை மசால் வடை தான் என்கிற ரீதியில்
"ஐபோன் போல வருமா?"
"மேக் மாதிரி சான்ஸே இல்லிங்க" என உலகம் முழுக்க, ஆப்பிள் நிறுவனத்தின் பொருட்களுக்கு என்று தனி ரசிகர் மன்றங்களே இருக்கின்றன.
1976-ம் ஆண்டில் சாதாரணமாக ஸ்டீவ் ஜாப்ஸ் உடன் சிலர் சேர்ந்து தொடங்கிய கம்பெனி, இன்று சக்கை போட்டு போட்டுக் கொண்டு இருக்கிறது. இந்த ஆப்பிள் கம்பெனி, தற்போது ஒரு பெரிய சாதனையைப் படைத்து இருக்கிறது எனலாம்.
அப்படி என்ன சாதனையைச் செய்து இருக்கிறது ஆப்பிள். அந்த சாதனை ஆப்பிள் கம்பெனிக்கு எப்படி சாத்தியமானது. அதைப் பற்றிய சுவாரஸ்யத் தகவல்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
முரட்டுச் சாதனை
ஆப்பிள் கம்பெனி கடந்த 1980-ம் ஆண்டு, அமெரிக்க பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. 2018-ம் ஆண்டு, ஆப்பிள் கம்பெனியின் சந்தை மதிப்பு 1 ட்ரில்லியன் டாலர் (75 லட்சம் கோடி ரூபாய்) என்கிற சாதனையைப் படைத்தது. நேற்று ஒரு ஆப்பிள் கம்பெனி பங்கின் விலை 468.65 டாலரைத் தொட்டது. எனவே ஒட்டு மொத்த ஆப்பிள் கம்பெனியின் சந்தை மதிப்பு 2 ட்ரில்லியன் டாலரைத் தொட்டு (150 லட்சம் கோடி ரூபாய்) பெரிய சாதனையைச் செய்து இருக்கிறது. அமெரிக்க அபங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு கம்பெனி, 2 ட்ரில்லியன் டாலரைத் தொடுவது இதுவே முதல் முறை.
23 வாரங்களில் 1 ட்ரில்லியன்
ஆப்பிள் கம்பெனியின் சந்தை மதிப்பு, 1 ட்ரில்லியன் டாலரைத் தொட, 1976 தொடங்கி 2018-ம் ஆண்டு வரை 42 ஆண்டுகள் தேவைப்பட்டன. ஆனால் அடுத்த 1 ட்ரில்லியன் டாலரைத் தொட ஆப்பிள் நிறுவனத்துக்கு 2 வருடங்கள் போதுமானதாக இருந்து இருக்கிறது. இந்த 16 மார்ச் 2020 அன்று சுமார் 1 ட்ரில்லியன் டாலரில் இருந்து 19 ஆகஸ்ட் 2020-ல் 2 ட்ரில்லியன் டாலரைத் தொட்டு இருக்கிறது. சுமாராக 23 வாரங்களில் நறுக்கென 1 ட்ரில்லியனில் இருந்து 2 ட்ரில்லியன் டாலரைத் தொட்டு இருக்கிறது ஆப்பிளின் சந்தை மதிப்பு.
சவுதி அராம்கோ
சவுதி அராம்கோ என்கிற கச்சா எண்ணெய் கம்பெனி, கடந்த டிசம்பரில், 2 ட்ரில்லியன் டாலர் அளவுக்கு சந்தை மதிப்பைத் தொட்டது. ஆனால் தற்போது சவுதி அராம்கோவின் சந்தை மதிப்பு சுமாராக 1.8 ட்ரில்லியன் டாலராக இருக்கிறது. அமெரிக்காவில் கணக்கு எடுத்துப் பார்த்தால், 2 ட்ரில்லியன் டாலரைத் தொடும் முதல் கம்பெனியே ஆப்பிள் தானாம்.
மற்ற அமெரிக்க ஜாம்பவான்கள்
ஆப்பிள் 2 ட்ரில்லியன் டாலர் சந்தை மதிப்பைத் தொட்டு இருக்கிறது சரி. மற்ற கம்பெனிகள் எல்லாம் என்ன நிலையில் இருக்கின்றன? அமேசான் & மைக்ரோசாஃப்ட் கம்பெனி 1.6 ட்ரில்லியன் டாலர் சந்தை மதிப்புடன் ஆப்பிளை துரத்திக் கொண்டு இருக்கின்றன. கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட் சுமாராக 1 ட்ரில்லியன் டாலர் சந்தை மதிப்போடு இருக்கிறதாம்.
கம்ப்யூட்டர் டூ ஐ போன்
ஆரம்பத்தில் ஆப்பிள் கம்பெனி கம்ப்யூட்டர்களையும், கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர்களையும் மட்டுமே தயாரித்துக் கொண்டு இருந்தது. அதன் பின் திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டது. 1997 - 98 கால கட்டத்தில் பில் கேட்ஸ் ஆப்பிள் நிறுவனத்தில் முதலீடு செய்தார். அதன் பின் ஐபாட், ஐபேட், ஐபோன் என பல எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்களைத் தயாரித்து தன் வியாபாரத்தை விஸ்தரித்தது ஆப்பிள். ஆப்பிள் கம்ப்யூட்டர் என்கிற கம்பெனியின் பெயர் ஆப்பிள் இன்க் ஆனது. சரி இன்றைய கதைக்கு வருவோம்.
எப்படி சாத்தியமானது
உலகமே வியாபாரம் செய்ய தடுமாறிக் கொண்டிருந்த ஏப்ரல் - ஜூன் காலாண்டில் கூட ஆப்பிள் கம்பெனி 12 % வருவாயை கூடுதலாக ஈட்டியது. ஆப்பிள் நிறுவனத்தின் ரசிகர்கள், ஆப்பிள் ஷோரூம் கடைகள் பூட்டி இருந்த போதும், கொரோனா காலத்திலும் ஆப்பிள் ஐபோன், ஐ பேட், ஐ மேக், மேக் புக் போன்றவைகளை ஆன்லைனில் வாங்கிக் கொண்டு தான் இருந்து இருக்கிறார்கள்.
எல்லா இடங்களிலும் வியாபாரம் சூப்பர்
ஆப்பிள் நிறுவனத்தின் வியாபாரம் அனைத்து ரகங்களிலும், அனைத்து நில பரப்புகளும் அதிகரித்து இருக்கிறதாம்.
ஆக வியாபாரம் நிலையாக இருந்தது ஒரு பெரிய ப்ளஸ் பாயிண்ட். அதோடு ஆப்பிள் நிறுவனத்திடம் சுமாராக 193 பில்லியன் டாலர் பணம் இருக்கிறதாம். எந்த ஒரு அசாதாரணமான சூழல் வந்தாலும் இந்த பணத்தை வைத்து சமாளித்துவிடலாம். இவை எல்லாம் சேர்ந்து கம்பெனியின் பங்கு விலையை தாறுமாறாக உயர்த்திவிட்டன. அதனால் ஆப்பிள் கம்பெனியின் சந்தை மதிப்பும் 2 ட்ரில்லியன் டாலரை அசால்டாகத் தொட்டு விட்டது.
திறமைக்கு மரியாதை
ஒரு நிறுவனம், தன் பொருள் அல்லது சேவையின் தரத்தில் எந்த ஒரு சமரசமும் இல்லாமல், காலத்துக்கு தகுந்தாற் போல தன்னை மாற்றிக் கொள்ளும் போது, அந்த நிறுவனத்தின் அசுர வளர்ச்சியை, யாராலும் தடுக்க முடியாது என்பதற்கு ஆப்பிள் மீண்டும் ஒரு சான்றாக இருக்கிறது. இந்த 2 ட்ரில்லியன் டாலர் சந்தை மதிப்பு என்பது, ஆப்பிள் நிறுவனத்தின் திறமைக்கு கிடைத்த மரியாதை. சல்யூட் ஆப்பிள்.