உலகின் முன்னணி கம்பெனிகளில் ஒன்றான ஆப்பிள், தன் கவனத்தை இந்தியா பக்கம் தற்போது திருப்பிக் கொண்டு இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனத்துக்கு சீனாவில் கணிசமான அளவில் உற்பத்தி ஆலைகள் இருக்கின்றன. பல முன்னணி ஆப்பிள் ஐபோன் மாடல்கள், சீனாவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடயிலான புகைச்சல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு இருப்பது, சீனாவை சார்ந்து இருப்பதைக் குறைக்க வேண்டும் என்பது போன்ற காரணங்களால், தற்போது ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் களம் இறங்கி இருக்கிறது.
தமிழகத்தில் உற்பத்தி ஆலை
ஏற்கனவே ஆப்பிள் நிறுவனத்துக்கு இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு உற்பத்தி ஆலை இருக்கிறது. ஃபாக்ஸ்கான் கம்பெனி தான் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் உற்பத்தி வேலைகளை பார்த்துக் கொள்கின்றன. ஐபோன் எக்ஸ் ஆர் (Iphone XR) மாடல்களை, இந்த ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் உற்பத்தி செய்து கொண்டு இருக்கிறது.
ஐபோன் 11 உற்பத்தி
இந்த ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் தற்போது ஆப்பிள் ஐபோன் 11 மாடலையும் உற்பத்தி செய்யத் தொடங்கி இருக்கிறார்களாம். ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் அதிகமாக விற்கும் ஐபோன்களில் ஐபோன் 11 மாடலும் ஒன்று என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆக இந்தியாவில் அதிகமாக விற்கப்படும் ஐபோன் 11 மாடலை, இந்தியாவிலேயே உற்பத்தி செய்து இந்தியாவில் விற்கத் தொடங்கி இருக்கிறது ஆப்பிள்.
இது முதல் முறையாம்
ஆப்பிள் நிறுவனத்தின் டாப் மாடல்களை இந்தியாவில் உற்பத்தி செய்வது இதுவே முதல் முறை எனவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இது மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்துக்கு பெரிதும் வலு சேர்த்து இருக்கிறது. அதோடு ஆப்பிள் நிறுவனம் சீனாவைச் சார்ந்து இருப்பதும் குறையும் என எதிர்பார்க்கலாம்.
ஐபோன் 11 ஏற்றுமதி
நம் தமிழகத்தில் ஆப்பிள் ஐபோன் 11 உற்பத்தி மெல்ல அதிகரிக்கப்படுமாம். தமிழகத்தின் ஃபாக்ஸ்கான் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஐபோன் 11 போன்களை ஏற்றுமதி செய்யக் கூட ஆலோசிக்கலாம் எனவும் சில துறை சார் நிபுணர்கள் சொல்லி இருக்கிறார்கள். சூப்பர் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்ட ஐபோன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டால் நமக்கு சந்தோஷம் தானே..!
விலை குறையலாம்
இதுவரை ஆப்பிள் நிறுவனம், தன் ஐபோன் 11 மாடலின் விலையை குறைக்கவில்லை. காரணம் சீனாவில் உற்பத்தியான ஐபோன் 11 போன்களையும் தற்போது விற்றுக் கொண்டு இருக்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள். ஆனால் காலப் போக்கில் ஐபோன் 11-ன் விலையை குறைக்க வாய்ப்பு இருக்கிறது எனவும் சொல்லி இருக்கிறார்கள் சந்தை நிபுணர்கள்.
எப்படி விலை குறையும்
இதற்கு முன்பு வரை ஆப்பிள் ஐபோன் 11 மாடல்களை, வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டி இருந்தது. எனவே இறக்குமதி வரி செலுத்த வேண்டி இருந்தது. தற்போது இந்தியாவிலேயே ஐபோன் 11-ஐ உற்பத்தி செய்வதால் ஆப்பிள் நிறுவனத்துக்கு 22% இறக்குமதி வரி மிச்சமாகும். இந்த செலவை நேரடியாக ஐபோன் 11-ன் விலையில் குறைத்தால் கணிசாக விலை குறைக்கப்படலாம் என்கிறார்கள் சந்தை நிபுணர்கள்.
பெங்களூரு ஆலை
தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூர் ஃபாக்ஸ்கான் ஆலையில் எப்படி ஐபோன் எக்ஸ் ஆர் தயாரித்துக் கொண்டு இருக்கிறார்களோ, அதே போல பெங்களூரில் இருக்கும் விஸ்ட்ரான் (Wistron) உற்பத்தி ஆலையில் ஐபோன் எஸ் இ (iPhone SE) மாடல்களைத் தயாரிக்க ஆலோசித்துக் கொண்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. தற்போது விஸ்ட்ரான் ஆலையில் ஐபோன் 7 உற்பத்தி செய்யப்பட்டு வருகிறதாம்.