உலக அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் பொருளாதாரத்தில் முன்னணியில் உள்ள நாடுகள் தான், இன்று மந்த நிலையில் சிக்கித் தவித்து வருகின்றன.
குறிப்பாக சீனாவில் பரவி வரும் கொரோனாவுக்கு மத்தியில் அங்கு கடுமையான லாக்டவுன் நடவடிக்கைகள் உள்ளன். இதற்கிடையில் சமீபத்திய காலமாகவே சீனாவில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில், பல்வேறு நிறுவனங்களும் சீனாவுக்கு வெளியே தங்களது செயல்பாட்டினை தொடங்கவும், விரிவாக்கம் செய்யவும் ஆரம்பித்துள்ளன.
ஆப்பிள்
அதற்கு சிறந்த உதாரணமே ஆப்பிள் நிறுவனம். ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தியில் பாதிக்கும் மேல் சீனாவில் செய்யப்பட்டு வந்த நிலையில், சீனாவை மட்டுமே நம்பியிருக்க முடியாது என்ற நிலையில் தான் இந்தியாவில் தனது உற்பத்தியினை அதிகரிக்க தொடங்கியுள்ளது ஆப்பிள். ஏற்கனவே ஆப்பிள் ஐபோன் சீரிஸ் 14ஐ இந்தியாவில் உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளது.
ஓசூர் அருகில்
இதற்கிடையில் தற்போது தமிழகத்தின் ஓசூர் அருகில் பிரம்மாண்ட ஆலை அமையவுள்ளதாகவும், இதன் மூலம் 60,000 பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தமிழககத்திற்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமையலாம் எனலாம். இது குறித்து தொலைத் தொடர்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னா தெரிவித்துள்ளார்.
டாடா எலக்ட்ரானிக்ஸ் - ஐபோன் உதிரி பாகங்கள்
இந்த ஆலையில் 6000 பணியாளர்கள் ராஞ்சி மற்றும் ஹஜாரிபாக் பகுதிகளை சேர்ந்த பழங்குடியின மக்கள் ஆவார்கள், இவர்களுக்கு இதற்கு தேவையான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஐபோனுக்கு தேவையான உதிரி பாகங்கள் உற்பத்தியினை டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திடம் வழங்கியுள்ளது. இந்த ஆலை தான் ஓசூர் அருகில் உள்ளது.
தமிழக இளைஞர்களுக்கு சிறந்த வாய்ப்பு
இந்தியாவில் ஏற்கனவே ஐபோன் உற்பத்தியானது விஸ்ட்ரான், பாக்ஸ்கான், பெகட்ரான் நிறுவனங்கள் உற்பத்தி செய்து வருகின்றன. இந்த நிலையில் ஐபோன் பாகங்களை முதல் முறையாக இந்தியாவினை சேர்ந்த நிறுவனத்துடன் உற்பத்தி செய்யவுள்ளது. இது இந்திய நிறுவனங்கள் மீதான நம்பிக்கை மேம்பட்டுள்ளதோடு, இங்கு வேலை வாய்ப்பினையும் பெருக்கும் எனலாம். மொத்தத்தில் தமிழக இளைஞர்களுக்கு இது சிறந்த வாய்ப்பாக அமையும்.
இந்தியாவில் தேவை அதிகம்
சீனாவில் நிலவி வரும் நெருக்கடிக்கு மத்தியில் அங்கு ஐபோன் உற்பத்தியானது பாதிக்கப்பட்டுள்ளது. இது உலகம் முழுக்க பற்றாக்குறையை தூண்டியுள்ளது. உலகம் முழுக்க தேவையானது அதிகளவு இருந்து வருகின்றது. சமீபத்தில் வெளியான அறிக்கையில் இந்தியாவில் சமீபத்திய ஐபோன் ரகங்கள் எதுவும் ஸ்டாக் இல்லை என்றே வருகின்றன. ஆனால் இங்கு தேவை என்பது அதிகம். எனினும் போதிய உற்பத்தி இல்லை. ஆக இங்கிருந்து ஏற்றுமதி என்பது செய்யாவிடிலும், இந்திய சந்தையை தக்க வைத்துக் கொள்ள இந்தியாவில் உற்பத்தியினை அதிகரித்தாலே போதுமானது என்றும் கூறப்பட்டது.
தேவையை பூர்த்தி செய்தாலே போதும்
உண்மையில் பல்வேறு வெளி நாட்டு நிறுவனங்களும் இந்திய சந்தையை பயன்படுத்திக் கொள்ள விரும்புகின்றன. இதனால் உற்பத்தியினை இங்கேயே தொடங்கியும் வருகின்றன. ஆக நிச்சயம் ஆப்பிளின் இந்த அறிவிப்பானது இனி வரும் காலத்திலும் தொடரலாம். இன்னும் விரிவாக்கம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றும் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பெரும்பான்மையான ஐபோன்கள் இறக்குமதி செய்யப்பட்டதே. ஆக இதனை குறைத்தாலே, இந்தியாவில் உற்பத்தி அதிகரிக்க வழிவகுக்கலாம் என நம்பப்படுகிறது.