சேலம்: ஆயுத பூஜையை முன்னிட்டு ஆப்பிள் பழங்கள் விற்பனை சூடு பிடித்துள்ளது.
Recommended Video
விலையும் இந்த முறை குறைவாக இருப்பதால் சேலத்தில் ஆப்பிள் விற்பனையும் அதிகரித்துள்ளது. மக்களும் மகிழ்ச்சியாக வாங்கிச் செல்கின்றனர்.
பொதுமக்கள் அதிகளவில் வாங்கிச் செல்வதால் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் வாடிக்கையாளர், வியாபாரி என இரு தரப்பும் மகிழ்ச்சிஅடைந்துள்ளது.
காஷ்மீர் ஆப்பிள்
தமிழகத்துக்கு தேவையான ஆப்பிள் பழங்கள், காஷ்மீர், சிம்லா, டில்லி ஆகிய இடங்களில் இருந்து விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. கொரோனா பரவலை தடுக்க, மார்ச் முதல் ஊரடங்கால், ஆப்பிள் பழம் வரத்து சரிந்து, அதன் விலையும் உயர்ந்தது.
வரத்து அதிகரிப்பு
தற்போது, ஊரடங்கு தளர்வால், காஷ்மீர், சிம்லாவில் இருந்து, தமிழக மார்க்கெட்டுகளுக்கு, ஆப்பிள் பழம் வரத்து, மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த மாதம் வரை, சேலம் உள்பட தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு, தினமும், 100 முதல், 200 டன் பழங்கள் வந்த நிலையில், தற்போது, 300 முதல், 500 டன்னாக அதிகரித்துள்ளது.
ஆப்பிள் விலை குறைவு
அதே நேரம், தமிழகத்தில் பரவலாக பெய்து வரும் மழை, இரவில் வீசும் குளிர் காற்றால், ஆப்பிள் உள்ளிட்ட பழங்களின் விற்பனை சரிந்துள்ளது. இதனால், ஆப்பிள் பழம் விலை, கிலோவுக்கு, 50 முதல், 70 ரூபாய் சரிந்துள்ளது.
வரத்து அதிகரிப்பால் குறைவு
சேலம் சின்ன கடை வீதி மற்றும் பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் மண்டிகளுக்கு தற்போது காஷ்மீரில் இருந்து லாரி, லாரியாக அதிக அளவில் ஆப்பிள் பழங்கள் வரத் தொடங்கி உள்ளது. அதிகம் ஆப்பிள் வருவதால் விலையும் குறைந்தது .
ரூ. 120 வரை விற்பனை
கடந்த வாரம் கிலோ 190 ரூபாய்க்கு விற்ற ஆப்பிள் 120 ஆகவும், கிலோ 150 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஆப்பிள் தற்போது 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. முதல் ரகம் ஆப்பிள் 120 ரூபாய்க்கும், இரண்டாம் ரகம் ஆப்பிள் 100 ரூபாய்க்கும் , மூன்றாம் ரகம் ஆப்பிள் 80 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
மேலும் குறையும்
இது குறித்து வியாபாரிகள் கூறும்போது, கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் தொற்று காரணத்தால் காஷ்மீர் மற்றும் டெல்லியில் இருந்து ஆப்பிள் பழங்கள் வராமல் இருந்தது. இப்போது ஆப்பிள் பழங்கள் வரத் தொடங்கி உள்ளது. லாரி லாரியாக காஷ்மீரிலிருந்தும் டெல்லியிலிருந்தும் ஆப்பிள் பழம் தொடங்கி இருப்பதால் விலை குறையத் தொடங்கி இருக்கிறது.
மக்களிடம் வரவேற்பு
இன்னும் இரண்டு மாத காலத்திற்கு காஷ்மீர் ஆப்பிள் விற்பனைக்கு வரும். அதே நேரத்தில் பொதுமக்களிடம் தற்போது நல்ல வரவேற்பு உள்ளது. பண்டிகை காலங்களில் பூஜைகளுக்கு அதிகம் பயன்படுத்தப்படும் பல வகைகளில் ஆப்பிள் உள்ளதால் பொதுமக்கள் அதிக அளவில் இதை வாங்கிச் செல்கின்றனர். இத்தனை நாட்களாக வியாபாரம் சற்று மந்தமாக இருந்தது .
மக்கள் ஹேப்பி அண்ணாச்சி!
தற்போது அதிக அளவில் பொதுமக்கள் ஆப்பிள் பழங்களை வாங்கிச் செல்கின்றனர். இதனால் தங்களின் வாழ்வாதாரம் தற்போது ஒரு அளவிற்கு சீராக உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். அதிக அளவிலான பொதுமக்கள் ஆப்பிள் பழங்களை வாங்கி செல்வதால் எங்களது வாழ்க்கை மீண்டும் நல்ல முறையில் பயணிக்கிறது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.