உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிள் 2019ஆம் ஆண்டில் அறிமுகம் செய்த ஐபோன் 11 ப்ரோ உட்பட அனைத்து கருவிகளும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளது. இதனால் இந்நிறுவனப் பங்குகள் எப்போதும் இல்லாத வகையில் பெரிய அளவிலான வளர்ச்சியை அடைந்துள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்குப் பின் துவங்கிய அமெரிக்கப் பங்குச்சந்தை ஆப்பிள் நிறுவனத்திற்காகவே துவங்கியது போல இருந்தது. ஆம் வியாழக்கிழமை ஒரு நாள் வர்த்தகத்தில் மட்டும் ஆப்பிள் பங்குகள் சுமார் 2 சதவீதம் வரையில் உயர்ந்து வர்த்தக முடிவில் 1.6 சதவீத உயர்வை எட்டியது.
இதுமட்டுமா ஆப்பிள் நிறுவனத்தின் 2 சதவீத பங்கு உயர்வின் மூலம் இந்நிறுவனப் பங்குகள் எப்போதும் இல்லாத அளவிற்கு 289.9 டாலர் வரையில் உயர்ந்து முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் 2019ஆம் ஆண்டில் வியாழக்கிழமை வரையிலான வர்த்தகத்தில் ஆப்பிள் நிறுவனம் இந்த வருடம் சுமார் 83 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது. சொல்லப்போனால் கடந்த 10 வருடத்தில் ஆப்பிள் அதிகளவில் வளர்ச்சி அடைந்தது 2019ஆம் ஆண்டு தான்.
ஆனால் 20 வருடத்திற்கு முன்பு ஆப்பிள் நிறுவனம் மோசமான நிதிநெருக்கடியிலிருந்து மீண்டு வந்தபோது இந்நிறுவனப் பங்குகள் சுமார் 150 சதவீதம் வரையில் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. இதன் பின்பு பெரிய அளவில் உயர்ந்தது 2019ஆம் ஆண்டு தான்.
2019ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தில் ஏற்பட்ட 83 சதவீத வளர்ச்சியின் மூலம் இந்நிறுவனத்தின் மொத்த மதிப்பு 530 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்துள்ளது. இதன் மூலம் வியாழக்கிழமை வர்த்தகத்தில் இந்நிறுவனத்தின் மொத்த பங்கு மதிப்பு யாரும் எதிர்பார்க்காத வரையில் இந்த வருடம் 1.304 டிரில்லியன் டாலர் வரையில் உயர்ந்து அசத்தியுள்ளது. இந்த மிகப்பெரிய உயர்வுக்கு முக்கியக் காரணம் சமீபத்தில் ஆப்பிள் அறிமுகம் செய்த அனைத்து கருவிகளும் பெரிய அளவிலான வெற்றியை அடைந்துள்ளது.
அதிலும் குறிப்பாக ஐபோன் 11 ப்ரோ மற்றும் ஐபோன் 11 ஆகியவை இன்றைய வர்த்தகச் சந்தையில் போட்டிப் போடும் அளவிலும் பல முன்னணி நிறுவனங்களின் தயாரிப்புகளைக் காட்டிலும் மிகவும் சிறப்பான ஒரு ஸ்மார்ட்போனாகக் கருதப்படுவதால் மக்கள் மத்தியில் பெரிய அளவிலான வரவேற்பைப் பெற்றுள்ளது.
அமெரிக்கப் பங்குச்சந்தையில் சந்தை மதிப்பில் போட்டிப் போடும் மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த வருடம் 55 சதவீதமும், அமேசான் 23 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.