உலகளவில் நிலவி வரும் மந்த நிலையால் பல உற்பத்தி ஆலைகள் மூடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஸ்டீல் உலகின் ஜாம்பவான் ஆன ஆர்செலர் மிட்டல் நிறுவனம் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வரும் நிலையில் தனது உற்பத்தி ஆலையை மூட திட்டமிட்டுள்ளதாகவும், இதனால் பல ஆயிரம் பேர் தங்களது வேலையினையும் இழக்கும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவில் உள்ள சல்தான்ஹா நகரத்தில் உள்ள ஒரு ஆலையை மூடவும், அங்கு வேலை செய்யும், சுமார் 1,000 பணியாளர்களை பணி நீக்கம் செய்யவும் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு அந்த நிறுவனம் சல்தான்ஹா ஆலை ஏற்றுமதி சந்தையில் போட்டியிடும் தன்மையை இழந்து விட்டதாக தெரிவித்துள்ளது.
என்ன தான் காரணம்
இந்த சரிவுக்கு என்ன தான் காரணம். அதுவும் ஆலையை மூடும் அளவுக்கு என்று கேட்கிறீர்களா? ஸ்டீல் மூலப் பொருட்களாக உபயோகப்படுத்தும் துறையான ஆட்டோமொபைல் துறையும், மிக நலிவடைந்துள்ள நிலையில் ஸ்டீல் துறை படு வீழ்ச்சியை கண்டுள்ளது. மேலும் இதற்கு அடுத்தாற்போல் நிலவி வரும் பொருளாதார மந்த நிலையில் கட்டமைப்பு துறையிலும், மந்த நிலையே நிலவி வருவதால் இது படுவீழ்ச்சி கண்டுள்ளது.
செலவினங்கள் அதிகரிப்பு
இது தவிர இதன் உற்பத்தியில் முக்கிய மூலப் பொருட்கள், மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட விலைகள் காரணமாகவும் விலை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் செலவினங்கள் அதிகரிப்பு, உற்பத்தி செலவு, இதனால் விலை அதிகரிப்பு என அனைத்தும் இத்துறை வீழ்ச்சிக்கு மேலும் காரணமாக அமைந்தன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துறையை ஊக்குவிக்க முயற்சி
கடந்த சில மாதங்களாகவே இத்துறையை ஊக்குவிக்க தென் ஆப்பிரிக்கா அரசு பல முயற்சிகளை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. ஏனெனில் இந்த பணி நீக்கத்தை நிறுத்தவும், சல்தான்ஹாவில் உற்பத்தியை தொடரவும் அரசும், அந்த நாட்டு பொதுத்துறை நிறுவனங்களும், பல ஆதரவுகளை அளித்த போதிலும், ஆர்செலர் மிட்டல் இப்படியொரு முடிவை எடுத்திருப்பது அந்த நிறுவனத்தில் ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதிப்பு அதிகரிக்கும்
கடந்த ஆண்டு வாண்டர்பிஜ்பர்க்கில் தனது நடவடிக்கைகளை ஆர்செலர் குறைக்க முயன்ற பட்சத்தில், இது வெகுவாக அந்த நகரத்தையே பாதிக்கும் என்றும் கருதப்பட்டது. ஏன் ஒரு நகரத்தின் வாழ்பாதாரத்தையும் பாதிக்கும் என்றும் இது அச்சுறுத்தியது. இந்த நிலையில் மீண்டும் இப்படி ஒரு அறிவிப்பினால் வலையில் ஆழ்ந்துள்ள அந்த நாட்டு அரசு, சமீபத்தில் வர்த்தகம் மற்றும் கைத்தொழில் அமைச்சர் இப்ராஹிம் படேல் ஆர்செலர் நிர்வாகத்தை சந்தித்து, வேலையிழப்பை தடுக்க வாய்ப்புகளை ஆராய்ந்ததாகவும் கூறப்படுகிறது.
வீழ்ச்சியை தடுக்க பல சலுகைகள்
இதனால் இந்த நிறுவனத்திற்கு பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக குறைக்கப்பட்ட எரிசக்தி செலவுகள், தளவாட செலவுகள், மேலும் தாது வழங்கும் கும்பாவிலிருந்து பல சலுகைகள் என அதிரடியாய், அந்த நாட்டு அரசு வேலையிழப்பை தடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
பொருளாதாரத்தில் தாக்கம்
இந்த நிலையில் ஏற்கனவே நலிவடைந்துள்ள தென் ஆப்பிரிக்காவின் பொருளாதாரத்தில் இது மேலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், ஆர்செலர் நிர்வாகம் தனது முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் படேல் வலியுறுத்தியுள்ளராம். மேலும் நாங்கள் இந்த துறையில் உள்ள சவால்களை அங்கீகரிக்கிறோம். ஆர்செலர் உடன் எந்த தீர்வும் காணப்படவில்லை எனில், இத்துறையில் எந்த பாதிப்பும் ஏற்படாமல், தொழிலாளர்கள் மற்றும் சமூகம் இடம்பெயராமல் இருக்க, ஆலைகளை விற்பனை செய்வது குறித்து பரீசிலிக்க வேண்டும் என்றும் படேல் கூறியுள்ளார்.
பெருத்த நஷ்டம்
இந்த நிலையில் கடந்த செப்டம்பர் காலாண்டில் இந்த நிறுவனம் 539 மில்லியன் டாலர் இழப்பை சந்தித்ததாகவும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிறுவனத்தின் விற்பனை 16,634 மில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 18,522 மில்லியன் டாலர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் பிறந்த லட்சுமி மிட்டலின் ஆர்செலர் நிறுவனம் உலகம் முழுவதிலும் கொடி பறந்து வரும் நிலையில், தற்போது சற்று சரிவை கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இத்தாலியிலும் இதே பிரச்சனை தான்
கடந்த சில தினங்களுக்கு முன்பு இத்தாலியில் இந்த நிறுவனம் 5,000 பேரை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது. இந்த நிறுவனத்தில் மொத்தம் 8,000 பேர் தற்போது பணி புரிந்து வரும் நிலையில் இவ்வாறு கூறியுள்ளது. இதற்கு முக்கியக் காரணம் இந்த ஆலையில் உற்பத்தி குறைந்து விட்டதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் இந்த அறிவிப்பை அந்த நாட்டு அரசு ஒரு போதும் ஏற்க முடியாது என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.