கடந்த சில ஆண்டுகளாக வங்கிகளுக்கு இரண்டாம் சனிக்கிழமை மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் விடுமுறை விடப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே.
முதல், மூன்றாம் மற்றும் ஐந்தாம் சனிக்கிழமை மட்டும் அரைநாள் வங்கிகள் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இனி அனைத்து சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
சனிக்கிழமை விடுமுறை
கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் நாடு முழுவதிலும் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு மாதத்தில் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் நான்காவது சனிக்கிழமை விடுமுறை என்ற அறிவிப்பு வந்தது. இந்த அறிவிப்பை அடுத்து முதல் மற்றும் மூன்றாம் சனிக்கிழமை மட்டுமே வங்கிகள் அரை நாள் மட்டும் இயங்கி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து சனிக்கிழமையும் விடுமுறை
இந்த நிலையில் வங்கி ஊழியர்கள் கடந்த சில மாதங்களாக அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கை குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பேச்சுவார்த்தை
இந்த நிலையில் சமீபத்தில் இதுகுறித்து வங்கி ஊழியர்கள் மற்றும் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் இந்த பேச்சுவார்த்தையில் அனைத்து சனிக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு பொது விடுமுறை அளிக்கும் கோரிக்கை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
வேலை நேரம் அதிகமா?
ஆனால் அதே நேரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரையிலான வேலை நேரத்தில் மாற்றம் இருக்கும் என்றும் ஒவ்வொரு நாளும் சுமார் ஒரு மணி நேரம் அதிக வேலை நேரமாக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை தற்போதுள்ள வேலை நேரத்திலிருந்து ஒருமணி நேரம் அதிகமாக்கி, அதற்கு பதிலாக அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறையாக்கும் திட்டம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எந்தெந்த வங்கிகளுக்கு விடுமுறை?
பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், கிராமப்புற வங்கிகள், உள்ளூர் வங்கிகள் உள்ளிட்ட அனைத்திற்கும் சனிக்கிழமை விடுமுறை பொருந்தும் என்று கூறப்படுகிறது. அனைத்து சனிக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு பொது விடுமுறை என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்ற தகவல் வங்கி ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.