இந்திய பொருளாதாரத்தில், அடுத்த கியரைப் போட்டு, எல்லாவற்றையும் வேகப்படுத்திய எளிமைப்படுத்திய பெருமை, இந்திய ஐடி துறைக்கே சேரும்.
இன்று நாம் உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டு வங்கியில் பணம் அனுப்புவது, விமான டிக்கெட் புக் செய்வது, ரயில் டிக்கேட்டை ரத்து செய்வது, நெட்ஃப்ளிக்ஸில் படம் பார்ப்பது என எல்லாமே ஐடி கொடுத்த வரம்.
அப்படிப்பட்ட முக்கிய துறையாக இருக்கும் ஐடி துறையில், மேற்கொண்டு ஐடி ஊழியர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் வருவதும், இருக்கும் ஊழியர்களுக்கு எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது சவாலாகவே இருக்கிறது.
முக்கிய கம்பெனிகள்
இந்தியாவின் ஐடி துறையில் சுமாராக 50 லட்சம் பேர் வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். டாடா கன்சல்டன்சி சர்விசஸ், விப்ரோ, இன்ஃபோசிஸ், ஹெச் சி எல் டெக்னாலஜீஸ், டெக் மஹிந்திரா, காக்ணிசண்ட் போன்ற பெரு நிறுவனங்கள் மட்டுமே சுமாராக 13 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளைக் கொடுத்துக் கொண்டு இருக்கின்றன.
ஹெட் கவுண்ட் சரிவு
இந்திய ஐடி துறையின் பெரு நிறுவனங்களாக இருக்கும் டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ, டெக் மஹிந்திரா, காக்னிசண்ட், ஹெச் சி எல் டெக் போன்ற கம்பெனிகள், கடந்த ஜூன் 2020 காலாண்டில், முன் இருந்த ஊழியர்களின் எண்ணிக்கையை விட சுமார் 20,000 ஊழியர்களின் எண்ணிக்கையை (Head Count) குறைத்து இருக்கிறார்களாம்.
எந்த கம்பெனியின் எவ்வளவு
டாடா கன்சல்டன்சி சர்விசஸ் 4,788 பேரையும்,
இன்ஃபோசிஸ் 3,138 பேரையும்,
டெக் மஹிந்திரா 2,000 பேரையும்,
விப்ரோ 1,082 பேரையும்,
காக்னிசண்ட் 10,000 பேரையும் ஹெட் கவுண்டில் குறைத்து இருக்கிறார்களாம். அதாவது இந்த கம்பெனிகளில் 20,000 ஊழியர்கள் எண்ணிக்கை குறைந்து இருக்கிறது. இது 20,000 வேலை வாய்ப்புகளை குறைத்து இருப்பதாகவே பார்க்கலாம்.
முதல் சவால்
இது தான் தற்போது ஐடி ஊழியர்களுக்கு முன்பு இருக்கும், முதல் மிகப் பெரிய சவால். கடந்த ஜூன் 2020 காலாண்டில் ஐடி கம்பெனிகள் அதிகம் பாதிக்கப்படவில்லை. இருப்பினும், ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைத்து இருக்கிறார்கள். அதோடு புதிதாக வேலைக்கு எடுப்பது, வேலைக்கு எடுத்தவர்களை வேலையில் சேர்ப்பது எல்லாமே தாமதமாகிக் கொண்டு இருக்கிறது. ஆக இருக்கும் ஐடி ஊழியர்களுக்கே இங்கு போதுமான வேலை இல்லாமல் போய்க் கொண்டு இருக்கிறது.
சவால் இரண்டு - Mass Recruitment
ஒரே அடியாக 100 பேரை வேலைக்கு எடுக்கும் காலம் எல்லாம் கிட்டத்தட்ட வழக்கில் இல்லாமல் போய்க் கொண்டு இருக்கிறதாம். 2010 கால கட்டத்தில் தான் அப்படி எல்லாம் நடந்து கொண்டு இருந்ததாம். ஆனால் தற்போது அவை எல்லாமே காணாமல் போய்விட்டது என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.
சவால் 3 - 100% placement
இப்போதும் ஐடி கம்பெனிகள் தான், அதிகம் ஆட்களை வேலைக்கு எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் வேலைக்கு தேர்வு செய்யப்படும் மாணவர்களின் எண்ணிக்கை, கணிசமாக குறைந்து இருக்கிறது. 100% ப்லேஸ்மெண்ட் எல்லாம் இன்று ஒரு கற்பனை (Myth) ஆகிவிட்டது என, பெங்களூரில் இருக்கும் ஒரு முன்னணி பொறியியல் கல்லூரியின், recruitment head, மணி கண்ட்ரோல் வலைதளத்திடம் வாய் திறந்து இருக்கிறாராம். ஆக படித்து முடித்த இளைஞர்களுக்கும் ஐடியில் வேலை வாய்ப்புகள் குறைந்து கொண்டு இருக்கின்றன.
சவால் 4 ஆட்டோமேஷன்
எல்லா துறைகளையும், அதன் வேலை முறைகளையும் ஐடி கம்பெனிகள் தங்கள் மென்பொருள் மூலம் மாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் ஐடி துறையின் போக்கை Automation, Machine Learning, Artificial Intelligence போன்ற முன்னணி டெக்னாலஜிகள் அசுரத் தனமாகத் மாற்றத் தொடங்கி இருக்கின்றன. அதோடு டிஜிட்டல் டெக்னாலஜிகளும் பெரிய மாற்றங்களைச் சந்தித்துக் கொண்டு இருக்கின்றன.
சவால் 5 அப்டேட் அழுத்தம்
20 வருடங்களுக்கு முன், ஒருவர் ஒரு கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தால், நிம்மதியாக அதே கம்பெனியில் முழு பணிக் காலத்தையும் முடித்துவிட்டு, ஓய்வு பெறலாம். ஆனால் இன்று, சாதாரண க்ளார்க் வேலையி இருப்பவர்கள் கூட, எப்போதும் தங்களை அப்டேட் செய்து கொள்ள வேண்டி இருக்கிறது. இந்த அப்டேட் அழுத்தம் ஐடியில் மிக அதிகமாகவே இருக்கிறது. அப்டேட் செய்து கொள்ளாதவர்கள், வாசலுக்கு வழிகாட்டப்படுகிறார்கள்.
சவால் 6 கம்பெனியின் லாப நோக்கம்
இன்று கம்பெனிகள், லாபத்தில் மட்டுமே இருந்தால் போதாது. மற்ற கம்பெனிகளை விட, அதிக லாபத்தில் இருக்க வேண்டும். அவர்கள் பங்கு விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்க வேண்டும் என பல லட்சியங்களில் இருக்கிறார்கள். எனவே வியாபாரத்தை அதிகரிக்கும் அதே நேரத்தில் செலவுகளைக் குறைப்பதிலும் குறியாக இருக்கிறார்கள். செலவு குறைப்பு என்று வந்துவிட்டால், லே ஆஃப் எப்போதும் ஒரு தேர்வாக இருக்கிறது ஐடி கம்பெனிகளுக்கு.
உதாரணம் காக்னிசண்ட்
இதற்கு சிறந்த சமீபத்தைய உதாரணம் காக்னிசண்ட் கம்பெனி. இந்த கம்பெனி தன் லாபத்தையும், வியாபாரத்தை சரி செய்யும் திட்டத்தின் கீழ் சுமாராக 17,000 ஊழியர்களை (7,000 பேர் மூத்த & நடுத்தர அதிகாரிகள்) வீட்டுக்கு அனுப்பினார்கள். இதன் மூலம் காக்னிசண்ட் கம்பெனிக்கு 500 - 550 மில்லியன் டாலர் சேமித்ததாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
ஐடி எதிர்காலம்
ஏற்கனவே ஐடி என்றாலே அதிரடி லே ஆஃப்-கள் தான் நினைவுக்கு வரும். இப்போது இத்தனை சவால்களுக்கு மத்தியில் எப்படி இந்திய ஐடி துறை தன்னை மேம்படுத்திக் கொள்ளப் போகிறது. குறிப்பாக ஐடி கம்பெனிகள், தங்கள் ஊழியர்களின் வேலை வாய்ப்புகளைக் எப்படி உறுதி செய்யப் போகின்றன? தற்போது ஐடி துறையில் வேலை பார்த்துக் கொண்டு இருப்பவர்களுக்கு அடுத்த 10 ஆண்டுகளில் ஐடி துறையிலேயே வேலை இருக்குமா? ஐடி துறையில் சாதிக்க வேண்டும் என்கிற கனவுகளோடு இருக்கும் கல்லூரி இளைஞர்களுக்கு ஐடி கம்பெனிகள் எப்படி வழிவிடப் போகிறது? இதற்கு எல்லாம், காலமும் ஐடி கம்பெனிகளும் தான் பதில் சொல்ல வேண்டும்.