கொல்கத்தா: நாடு முழுவதுதிலும் உள்ள ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சில்லறை விற்பனையாளர்கள், 200% வரி உயர்வால் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று பொம்மை இறக்குமதியாளர்கள் வேலை நிறுத்ததில் ஈடுபட்டனர்.
கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட 2020- - 21ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில், பொம்மைகள் மீதான இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளதை கண்டித்து, மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் பொம்மை வியாபாரிகள் சனிக்கிழமையன்று கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.
இது குறித்து, மேற்குவங்க ஏற்றுமதி - இறக்குமதி கூட்டமைப்பின் இணை செயலர் மோஹித் பந்தியா கூறுகையில், பொம்மைகளுக்களுக்கான இறக்குமதி வரி 20 சதவிகிதத்தில் இருந்து 60 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
வரி அதிகரிப்பு
பொம்மைகளுக்களுக்கான இறக்குமதி வரி 20 சதவிகிதத்தில் இருந்து, 60 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு 200 சதவிகிதம் வரி அதிகரிக்கப்பட்டுள்ளதால், நாடு முழுவதும் பொம்மை விற்பனையில் ஈடுபட்டுள்ள ஒரு லட்சத்திற்கும் அதிகமான சில்லரை வியாபாரிகள் பாதிக்கப்படுவர் என்று பொம்மை இறக்குமதியாளர்கள் கூறியுள்ளனர்.
சீனா அதிகம்
மேலும் மத்திய அரசு உடனடியாக, பொம்மை இறக்குமதி வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும். இது குறித்து கொல்கத்தா வரும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை மனு அளிக்க உள்ளோம் என்றும் இந்த பொம்மை இறக்குமதியாளர்கள் கூறியுள்ளனர். இந்தியா ஆண்டுக்கு 2,500 கோடி ரூபாய் மதிப்பிலான பொம்மைகளை இறக்குமதி செய்கிறது. இதில் கொல்கத்தாவின் பங்கு 130 கோடி ரூபாயாகும். இறக்குமதியாகும் பொம்மைகளில், சீனாவின் பங்களிப்பு, 75 சதவிகிதமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
வேலையிழப்பு அதிகரிக்கும்
இந்த வரி அதிகரிப்பானது பொம்மை வணிகங்களை கீழ் நோக்கி தள்ளும். இது வணிகங்களை மூடிவிடும். இதன் மூலம் வேலையின்மை அதிகரிக்கும் என்றும் வாதிட்டனர். 200% வரி என்பது ஒரு முரட்டுத்தனமான அதிர்ச்சி. இது சந்தையால் உறிஞ்சப்பட முடியாது. ஏனெனில் இது பொருட்களை மக்களுக்கு ஏற்பட்ட குறைந்த விலையில் கொடுக்க முடியாததாக்கும் என்றும் செய்திகள் கூறுகின்றன.
உற்பத்தியை பெருக்க உதவும்
நாட்டில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் மத்திய அரசு பொருளாதாரத்தினை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் அரசின் இந்த 200 சதவிகித வரி உண்மையில் பொருளாதாரத்தினை மேம்படுத்த கைகொடுக்குமா? அல்லது இறக்குமயாளர்கள் சொல்வது போல லட்சத்துக்கும் மேல் உள்ள சில்லறை வர்த்தகர்களை பாதிக்குமா? என்றால் பாதிக்கும் தான். ஆனால் அதேசமயம் மத்திய அரசு கூறுவது போல் இதன் மூலம் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கு பெரிதும் உதவும். உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க உதவும்.