இந்தியாவில் கண ரக வாகன உற்பத்தியாளர்களில் முக்கிய நிறுவனம் அசோக் லேலண்ட். இந்த கம்பெனி தமிழகத்தை தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. சுமாராக கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து விற்பனை சரிவு போன்ற நெகட்டிவ் செய்திகளால் துவண்டு போய் இருக்கிறது.
அத்தனை நெகட்டிவ் செய்திகளுக்கு மத்தியில் இப்போது ஒரு நல்ல செய்தி வந்து இருக்கிறது. அது தான் தமிழக அரசு பேருந்து கார்ப்பரேஷன் அமைப்பின் ஆர்டரைப் பெற்றது.
தமிழக அரசு பேருந்து கார்ப்பரேஷனுக்கு 1,750 பேருந்துகளை சப்ளை செய்வதற்கான ஆர்டரை தமிழக அரசிடம் இருந்து பெற்று இருக்கிறார்களாம். இது போல கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பல்வேறு அரசு பேருந்து கார்ப்பரேஷன்களிடம் இருந்து ஆர்டர்கள் வந்து கொண்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசிடம் இருந்து ஆர்டர் பெற்ற செய்தியை, அசோக் லேலண்ட் நிறுவனத்தின் மீடியம் மற்றும் கண ரக வணிக வாகன பிரிவின் தலைவர் சஞ்ஜய் சரஸ்வத் உறுதி செய்து இருக்கிறார்.
சமீபத்தில் தான் அசோக் லேலண்ட் நிறுவனம், ஐசிஐசிஐ வங்கி உடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டது என்பதும் இங்கு கவனிக்க வேண்டி இருக்கிறது. இந்தியா முழுக்க வாகனம் வாங்க இருப்பவர்களுக்கு தகுந்தாற் போல கடன் கொடுக்க இருக்கிறார்களாம். அதற்கு தான் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமாம்.
கடந்த அக்டோபர் 2019-ல் கூட, அசோக் லேலண்ட் நிறுவனத்தின் விற்பனை 35 சதவிகிதம் சரிந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த அக்டோபர் 2019-ல் 9,857 வாகனங்களை மட்டுமே விற்று இருந்தார்கள். ஆனால் முந்தைய அக்டோபர் 2018-ல் சுமாராக 15,100 வாகனங்களை விற்று இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இது ஒரு மாதத்துக்கான ஒப்பீடு மட்டும் தான். இப்படி சுமாராக கடந்த ஒரு வருடமாக விற்பனை சரிவு என்கிற சிக்கலில் இந்தியாவின் அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் சிக்கித் தவித்துக் கொண்டு இருந்தார்கள். இந்த ஆர்டர்களால், கொஞ்சமாவது அசோக் லேலண்டின் வியாபாரம் சரியாகும் என எதிர்பார்க்கலாம்.
தமிழக அரசிடம் இருந்து ஆர்டர் பெற்ற செய்தி வெளியானதால், தற்போது அசோக் லேலண்ட் பங்கு விலை சுமாராக 1.5 சதவிகிதம் ஏற்றம் கண்டு 82.5 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. மேற் கொண்டு நல்ல செய்திகள் வந்தால் இன்னும் பங்கு விலை அதிகரிக்கும் என உறுதியாகச் சொல்லலாம்.